என்னாலே முடியாதய்யா !

காதலி தன் தனிமையைப் போக்க இல்லறத்தில் ஈடுபடுவதற்காகத் தன்னை உடனே மணம் செய்து கொள்ள வேண்டுமெனக் காதலனைப் பல வகையாலும் வற்புறுத்துகிறாள்.

சந்திரரே சூரியரே
சாமி பகவானே
இந்திரருக்கு இளையவரை
என்ன சொல்லிக் கூப்பிடட்டும்?
படுத்தாப் பல நினைவு
பாயெல்லாம் கண்ணீரு
சண்டாளன் உன் நினைவால்
நான் சருவா உருகுறனே
வேப்ப மரத்தோரம்
வெட்டரிவாள் சாத்தி வச்சேன்
வெட்டருவா சாஞ்சன்னைக்கு
விட்டேனையா உன் உறவு
பொட்டலிட்ட பூபோல
பொருந்தி விட்ட நாமம் போல
இப்பம் விட்ட பூப்போல
இருந்து மடியுதனே
ஆவரம்பு பூப் போல
ஆறு வருஷம் சிறையிருந்தேன்
இன்னும் சிறை யிருக்க
என்னாலே முடியாதையா

சேகரித்தவர் :
M.P.M. ராஜவேலு

இடம் :
தூத்துக்குடி வட்டாரம்,
நெல்லை மாவட்டம்.