கிடைக்குமுண்ணு எண்ணாதீங்க

காதலன் ஆடம்பரக்காரன்.அவனை மணந்து அவள் சுகம் பெறப் போவதில்லையென்று வேண்டியவர்கள் சொல்லுகிறார்களாம். காதலி அவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.

அவள் : அரைக்கீரை சீறு பாத்தி
காலரையும் தூக்கிவிட்டு
நிக்காங்க எங்க மச்சான்
இன்பமாய் தலைப்பாக்கட்டி
பொட்டிடுமோ உங்க நேர்த்தி
பொருந்திடுமோ என் சதுரம்
விட்டுவிடு என்று சொல்லி
வேணவர்கள் சொல்லுதாங்க
 

அவன் : வெட்டுறாங்க குத்துறாங்க
வேணவர்கள் சொன்னால் என்ன
கம்படி விழுந்தாலும்
கனியை விடப் போறதில்லை
 

அவள் : கொண்டையிலே பூவிருக்க
குளத்துத் தண்ணீ்ர் நிலம்பாய
கங்கையிலே விழுந்த பூவை
கிடைக்குமின்னு எண்ணாதீங்க
 

வட்டார வழக்கு: வேணவர்கள்-வேண்டியவர்கள்.

குறிப்பு: 'கங்கையில் விழுந்த பூ'- 'எனக்கு மணம் பேசி முடிக்கு முன் என்னை மணம் செய்து கொள்' என்ற பொருள் தோன்றப் பேசுகிறாள்.

சேகரித்தவர் :
M.P.M. ராஜவேலு

இடம் :
தூத்துக்குடி வட்டாரம்.