பச்சைக்குடம் கரையாதா?

அத்தை மகன் மீது காதல் கொண்டாள். அத்தைக்கும் அவர்களை மணமக்களாகப் பார்க்க ஆசை. தாய் சொல்லைத் தட்டாதவன் அவன். ஆயினும் காதலி கொஞ்சிப் பேசும்பொழுது குறும்பாக வேறு பெண்களை சிறையெடுக்கச் செல்லும் வீரனாகத் தன்னைக் குறித்துப் பேசுகிறான். அவள் கோபத்தில் பச்சை மண்ணில் சட்டி வனையும் குசவன் என்று அவனைத் திட்டுகிறாள். அவனோ தாய் சொல்லைத் தட்டாத மகன் என்று அவளுக்கு உறுதி கூறுகிறான்.

அவள்: மொழுவிய திருணையிலே
எழுதிய பாய் போட்டு
பாயிலே உக்காருங்க
பல விதமாப் பேசிடலாம்
 
அவன்: நண்டுகுழி மண்ணெடுத்து
நாகசுரம் உண்டுபண்ணி
போறானாம் சிங்கக்குட்டி
பெண்களைச் சிறையெடுக்க
 
அவள்: அரிசி அரிக்கையிலே
அரளிப் பூ தந்த மச்சான்
சோறு வடிக்கையிலே
சொக்குதையா உங்க ஆசை
முல்லை அரும்பின்னில்லா
முடிஞ்சேன் தலை நிறைய
பாக்குரண்டி முல்லையின்னு
பாத்தவங்க சொல்லலியே.
கொடிக்கால் மண்ணெடுத்து
கோலவர்ணக் குடம் செய்து
பச்சக் குடம் தான் செய்யும்
பாவி குசவன் அவன்
 
அவன்: பச்சைக்குடம் சமைக்கலியே
பாவத்தையும் ஏற்கவில்லை
தாயார் சொன்ன சொல்லை
தப்பாமல் செய்வேனடி

வட்டார வழக்கு:
பச்சைக்குடம்-பலமில்லாதது. உடைந்து போகும் (காதல் உறுதியற்றது).

குறிப்பு:
பாவத்தையும் ஏற்கவில்லை-காதலை முறித்து அவளுக்குத் துன்பத்தை விளைவிக்கும் பாவத்தை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை.

சேகரித்தவர் :
M.P.M. ராஜவேலு

இடம் :
தூத்துக்குடி வட்டாரம்,
நெல்லை மாவட்டம்.