பக்கம் எண்: - 105 -

பெருமையாகப் பேசி இல்லறத்தைப் பழித்துவந்த காலத்தில், திருஞான சம்பந்தர் பெண்களுக்கு நேர்ந்த தாழ்வைப் போக்குவதிலும் போலித் துறவை வெறுத்துப் பழிப்பதிலும் ஆர்வம் காட்டினார்.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

என்ற பாடல், சைவர்களின் திருமணங்களின்போது மகிழ்ச்சியுடன் ஓதப்படுவதாகும். இறைவன் பெண் ஒரு பாகமாய் (அர்த்தநாரி ஈசுவரனாய்) இருக்கும் கோலத்தைச் சுட்டிகாட்டி, இந்த உலகத்தில் நல்லபடி வாழ முடியும் என்ற ஆர்வத்தை ஊட்டி, பிறகு நல்ல கதி அடைவதற்கு எவ்வகையான குறையும் இல்லை என்று நம்பிக்கையையும் அளிக்கும் பாடல் இது. அவருடைய பாடல்கள் பெரும்பாலானவை இவ்வாறே ஊக்கமும் நம்பிக்கையும் ஊட்டிப் பாடும் ஆர்வம் நிறைந்தவை. சோர்வையோ, கலக்கத்தையோ, துயரத்தையோ அவருடைய பாடல்களில் காண்பது அரிது.

மதுரையில் சைனர்களோடு வாதிடுவதற்காகத் திருஞான சம்பந்தர் புறப்பட நேர்ந்தது. அந்த நாள் சோதிடப்படி நல்ல நாளாக இல்லை. உடன் இருந்தவர் அதைக் குறிப்பிட்டுத் தடை எழுப்பினார். அப்போது திருஞானசம்பந்தர், “எங்கள் தலைவன் சிவபெருமான் பெண் ஒரு பாகமாகக் கொண்டவன். விஷத்தையே உண்டு கண்டம் கறுத்தவன். கங்கையையும் பிறைச்சந்திரனையும் முடியில் அணிந்து, என் உள்ளத்தில் குடிபுகுந்தவன். அவ்வாறு அவன் என் உள்ளத்தில் இருப்பதால், சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஆகிய நாள்களும் ராகு கேது என்பனவும் ஒரு தீமையும் செய்யமாட்டா. அவை எல்லாம் நல்லவைகளே; அடியார்களுக்கு மிக நல்லவை” என்று அஞ்சாமையும் ஊக்கமும் பிறக்குமாறு ஒரு பதிகம் பாடினார்:     

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

சாதி வேறுபாடு, தீண்டாமை முதலிய மூடநம்பிக்கைகளுக்கு அவர்