பக்கம் எண்: - 109 -

அவர் வாழ்ந்த காலத்தில் திங்களூர் என்ற ஊரில் அப்பூதி என்னும் பிராமணர், திருநாவுக்கரசு என்னும் பெயரை மந்திரம் போல் போற்றி அவரையே வழிபட்டுவந்தார். தம் அறச்சாலைக்கு அதே பெயர் இட்டார். தம் மக்களுக்கு அப்பெயரே இட்டு வழங்கினார். திருநாவுக்கரசர் வேளாளர்; ஆயினும் சாதி உயர்வும் தாழ்வும்பற்றிய எண்ணத்திற்கு இடந் தராமல், அப்பூதி அவரைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டார்.

அப்பருடைய பாடல்கள் பல ஆயிரங்கள் இருந்தனவாம். இப்போது கிடைப்பவை 3066 பாடல்கள்.

சுந்தரர்

எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சுந்தரர் வரலாறும் விந்தையானதாக உள்ளது. அவர் பிராமணர், பெற்றோர்கள் ஏற்பாடு செய்த குலமுறைப்படியான திருமணம் சிவபெருமானால் தடை செய்யப்பட்டதாம். பிறகு சிவனருளின் துணைகொண்டு, வேறுகுலத்துப் பெண்கள் இருவரை மணம் செய்துகொண்டு வாழ்ந்தார். அந்த இருவருள் ஒருவர் பரத்தையர் குடும்பதைச் சார்ந்த பரவையார்; மற்றொருவர் வேளாளர் குடும்பதைச் சார்ந்த சங்கிலியார். இருவரிடத்தும் அன்பான வாழ்க்கை நடத்திப் பெருமைவாய்ந்த சிவனடியாராக விளங்கிப் பல பதிகங்கள் பாடினார். “பரவை என்னும் என் காதலிக்கும் எனக்கும் பற்றாக உள்ள பெருமானே” என்று தம் பாடலிலேயே குறிப்பிட்டுள்ளார். என்றும் மணமகன்போல் விளங்கி, உலக வாழ்க்கையில் பெறும் இன்பங்களைப் பெற்று மகிழ்ந்து, சிவனைப் பாடியவர் அவர். துறவும் உலக வெறுப்பும் அவருடைய பாடல்களில் காண்பதற்கு அரியவை. அவருடைய பாடல்களாக இப்போது கிடைப்பவை 1026. எல்லாப் பாடல்களும் திருஞானசம்பந்தரின் பாடல்கள்போல் இனிய இசையமைப்பு உடையவை. அவரைப்போலவே, இவரும் பல தலங்களின் இயற்கைச் சூழலை அழகாக வருணித்துப் பாடியுள்ளார். தமக்குத் தேவையானவற்றைச் சிவபெருமானிடம் உரிமையோடு கேட்டுப் பாடுவது இவர் வழக்கம். ஆனால், மண்ணுலகத்துச் செல்வர்களின் வீட்டை நாடிச் சென்று அவர்களைப் புகழ்ந்து பாடித்திரியும் புலவர்களின் வாழ்வை வெறுத்துப் பாடியுள்ளார். “தம்மையே புகழ்ந்து இச்சையான முறையில் பேசினாலும் சார்ந்து நின்றாலும் பொருள் தர மனம் வராத பொய்ம்மையான வாழ்வு உடைய செல்வரைப் பாடாமல், சிவனுடைய கோயிலைப் பாடுங்கள். இந்தப் பிறப்புக்கு உரிய உணவும் உடையும் பெறலாம்; இடர் நீங்கி வாழலாம். மறுமையில் சிவகதியும்