பக்கம் எண்: - 113 -

திருமணம் ஆகாத பெண்கள் சிலர் வைகறையில் எழுகிறார்கள். இன்னும் கண்விழித்து எழாத மற்றப் பெண்களை எழுப்புகிறார்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசுவதுபோல் பாவைப் பாடல் தொடங்குகிறது.

“முதலும் முடிவும் இல்லாத சோதியான இறைவனை நாங்கள் பாடுகிறோமே; அதைக் கேட்டும் கேளாதவள்போல் இன்னும் விழித்து எழாமல் உறங்குகிறாயோ? உன் செவி உணர்ச்சியற்ற செவியோ?” என்று ஒருத்தி கூறுகிறாள். அதற்குமேல் மற்றொருத்தி சொல்கிறாள் : “இறைவனுடைய திருவடிகளை நாம் வாழ்த்திய ஒலியைத் தெருவில் கேட்டவுடன் அவள் விம்மி விம்மி அழுது மெய்மறந்து படுக்கையிலிருந்து புரண்டு உணர்ச்சி யற்றவளாய் இப்படிக் கிடந்தாள்! இது எங்கள் தோழியின் தன்மை. இதை என்ன அதிசயம் என்பது!” உறங்குவோரை எழுப்பச் சென்ற பெண்கள் இவ்வாறு பெசிக்கொள்வதாக மாணிக்கவாசகரின் திருவெம்பாவை தொடங்குகிறது :

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின் செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதேஎம் தோழி பரிசுஏலோர் எம்பாவாய்.

“மார்கழி மாதத்தில் முழுமதியாகிய நல்ல நாளில் நீராட வாருங்கள். ஆயர்பாடியில் உள்ள செல்வச் சிறுமிகளே! நந்தகோபாலனுடைய மகன் யசோதையின் இளஞ்சிங்கமாகிய கண்ணன் நாராயணன் பாவைநோன்புக்கு உரிய பறையை நமக்கே தருவான். ஆகையால் உலகத்தார் புகழும்படியாக நீராடுவோம், வாருங்கள்” என்று ஆண்டாளின் திருப்பாவை தொடங்குகிறது :        

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான