பக்கம் எண்: - 367 -

           புழுங்கல் அரிசிச் சாதம் சேராதென்று சொன்ன
           புண்ணிய மகராச மக்களுகள் எல்லாம்
           மலைக்கத்தாழைக் குருத்தினைப் பிடுங்கியே
           மண்திட்டு மறைவிலே மடக்கென்று கடிப்பாராம்.

           சீனியிட்டுக் காய்ச்சியபால் தித்திப்பாய் இல்லைஎன்று
           மேனிநலம் பாராட்டிவந்த மேலோர்கள் தான்ஒடுங்கி
           வெப்புசுடு கூழ்அருந்தி மேல்மீசை தாடிகளில்
           அப்பிஎன்ன சொல்வேன் அலங்கோலம் - திப்பியமா

           நல்லபல காரவர்க்கம் நாம்அருந்தோம் என்றுசொல்லிச்
           செல்வம் செருக்கிநின்ற சீருடையார் செல்லரித்த
           தூவல் புளிவிதைக்கும் சோளத் தவிட்டினுக்கும்
           ஆவல் கொண்டும் கிட்டாது அலமந்தார் -

இவ்வாறு வாழ்க்கையின் பெரிய நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களின் உள்ளத்தைத் தொட்டு உணர்ச்சி வடிவாக நாட்டுப்பாடல்களில் வடிந்திருப்பதைக் காணலாம். வாழ்க்கைக்கும் பாட்டுக்கும் உள்ள நேர்த்தொடர்பை அந்தப் பாடல்கள் தெளிவாக விளக்குகின்றன.

விஜயநகர ஆட்சிக்குப் பிறகு, ஊர்தோறும் உள்ள கோயில்களைப் போற்றிப் பாடும் வழக்கம் மிகுதியாயிற்று. கற்றறிந்த புலவர்கள் அந்தந்தக் கோயில்களைப் புகழ்ந்து தலபுராணங்கள் பாடியது போலவே, மற்றவர்கள் ஊர்களையும் தலைவர்களையும் புகழ்ந்து பலவகை நாட்டுப் பாடல்கள் பாடி மகிழ்ந்தார்கள். அம்மானை என்ற பெயரால் பல பாடல்கள் புனைந்தார்கள். ராமப்பையன் அம்மானை முதலியன அவ்வாறு தோன்றியவை. அதுவே கதைப்பாடலாக நீண்டது. மதுரைவீரன் கதை, காத்தவராயன் கதை முதலிய கதைப் பாடல்கள் மக்களிடையே பரப்பப்பட்டன.

புகழேந்திப் புலவர் பெயரால் உள்ள கதைப் பாடல்களும் இவ்வகையான நாட்டுப் பாடல்கள் எனலாம். பவளக்கொடி மாலை, அல்லியரசாணி மாலை, ஏணியேற்றம், புலந்திரன் தூது, மின்னொளியாள் குறம், திரௌபதி குறவஞ்சி இவை அப்படிப்பட்டவை. பாரதத்தில் இல்லாத கிளைக்கதைகளைப் புனைந்து பாடல்களாக வளர்த்தார்கள். திரௌபதி வனவாசத்தில் இருந்தபோது, குறத்தி வேடத்தில் அத்தினாபுரியில் அரண்மனைக்குள் புகுந்து துரியோதனனுடைய மனைவியின் கையைப் பார்த்துக் குறிசொல்வதாகப் புனையப்பட்ட கதைப்பாடலே ‘திரௌபதி குறவஞ்சி’ என்பது பெண்கள் கேட்டு மகிழ்வதற்கு ஏற்ற கதைப்பாடல்களாக அவை அமைந்தன. புகழேந்திப் புலவர் சிறையில் இருந்ததாகவும், அப்போது அவ்வழியாகக் குடங்களில் நீர் கொண்டு வரச் சென்ற பெண்களின் மூலமாக