வைத்தவர்கள்
பாரதியாரும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் ஆவார்கள். பாரதியாரின் குழந்தைப்
பாட்டுகள் இன்றும் பாடப்பட்டு வருகின்றன.
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
சின்னஞ் சிறுகுருவி போல் - நீ
திரிந்து பறந்துவா பாப்பா !
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா
இவை
குழந்தைகளின் நன்மை கருதிப் பாடப்பட்ட அழகிய பாடல்கள். பாரதியார் அவ்வையாரைப்
பின்பற்றிக் குழந்தைகளுக்காகப் ‘புதிய ஆத்திசூடி’ இயற்றினார். ஆனால்
அவ்வையாரின் ஆத்திசூடியும் குழந்தையிலக்கியம் என்று கொள்ள முடியாது; பாரதியாரின்
புதிய ஆத்திசூடியும் அவ்வாறு கொள்ள முடியாது. அவற்றில் குழந்தைகளின் அறிவுக்கு எட்டாத
ஆழ்ந்த கருத்துகள் உள்ளன. சிறு சிறு சொற்களால் சில தொடர்களால் அமைந்தமை பற்றிச்
சிறுவர்களின் இலக்கியம் என்று சொல்லிவிடமுடியாது. அவற்றின் வடிவம்மட்டுமே குழந்தை
இலக்கியத்திற்கு உரியது; அவற்றின் பொருள் குழந்தை மனத்துக்கு எட்டாதது.
தமிழில் குழந்தைகளைப்பற்றிய நூல்களும் உள்ளன; குழந்தைகள் படிப்பதற்கு உரிய நூல்களும்
உள்ளன. குழந்தைகளுக்கு உரிய நிலாப்பாட்டு முதலியவை தொன்றுதொட்டு எல்லா வீடுகளிலும்
பாடப்பட்டு வருகின்றன. இன்று அந்த மரபைப் போற்றிக் குழந்தைகளுக்காகப் பாடல்கள்
எழுதிக் குழந்தை இலக்கியம் வளர்த்துவருவோர் பலர்.
குழந்தைகளுக்காகப் பாடும் பாடல்களில் ஆழ்ந்த உணர்ச்சிகள் வேண்டியதில்லை; அறிவுநுட்பமும்
தேவையில்லை. வியப்பான உணர்ச்சிகளை, அல்லது எளிய உணர்ச்சிகளையே, இனிய முறையில்
எதுகை மோனை நிரம்பிய செய்யுள்களில் உணர்த்தினால் குழந்தைகள் விருப்பத்தோடு பாடுவார்கள்.
பாட்டில் பொருட்சிறப்பு இல்லையானால் கவலை இல்லை; ஒலிநயம் இருக்கவேண்டும். சில
சொற்களும் தொடர்களும் திரும்பத் திரும்ப வரவேண்டும். ‘தத்தாங்கி தத்தாங்கி
தட்டும் பிள்ளை’, ‘கைவீசம்மா கைவீசு’ என்பவை, கைதட்டுவதற்காகவும்
கைவீசுவதற்காகவும் தமிழ்க் குழந்தைகளுக்குப் பாடும் பாடல்கள். தலைமுறை தலைமுறையாக
வீடுகளில் குழந்தைகளுக்குப் பாடப்பட்டு வரும் பாடல்கள் அவை. ஒன்று
|