xxxiii பதிப்பாசிரியர் உரை
அய்யர் பெற்ற மக்கள் மொட்டையடித்துக் கொண்டனர். கக்கனும் மொட்டையடித்துக்கொண்டு பிள்ளைகளோடு தாமும் ஒரு பிள்ளையாய் நின்றார். பெற்றோர்க்குச் செய்ய வேண்டிய கடமையைத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவனும் செய்வதா என்று அய்யரினத்தைச் சேர்ந்த பார்ப்பனர் போர்க்குரல் எழுப்பினர்.
"நாங்கள் பிறப்பால் மகன்களானோம்; ஆனால் கக்கன் வளர்ப்பால் மகனானார். ஆகவே எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அந்த உரிமை கக்கனுக்கும் இருக்கிறது" என்று ஐயா மனைவியும் மக்களும் சொன்னதைக் கேட்டுச் சமுதாயத் தலைவர்கள் வியந்தனர். ஆனால் ஐயா உறவினரோ இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கூறி அகன்றனர்.
உலககுரு என்று பார்ப்பனர்களால் உச்சிமீது தூக்கிவைத்துப் போற்றப்படும் சங்கராச்சாரியார், காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரசுவதி தமிழை நீசமொழி என்று கூறி ஆட்சிமொழி காவலர் கீ.இராம லிங்கனாரிடம் பேச மறுத்தவர்.
  "நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
. . . . . . . . . . . . . . . . . .
தீக்குறளை சென்றோதோம்"

என்னும் ஆண்டாள் பாசுரத்திற்குத் தீய குறளைப் படிக்கமாட்டோம் என்று பொருள் கொண்டு தமிழ்மறையை இகழ்ந்தவர்.

      தனித்தமிழ் வளர்த்த மொழிஞாயிறு பாவாணர்தம் தலைமாணாக்கர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அவரைத் திருநெல்வேலி மதுரைத் திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் பேசக்கூடாது என்று தடைபோட்டனர்.

ஆரியர், தமிழ் மன்னரை அடிமையாக்கிப் பண்பாட்டைக் கெடுத்ததோடு அல்லாமல் தமிழ்மொழியை அழிக்கவும் கெடுக்கவும் திட்டமிட்டுச் செயல்பட்டனர்.
கடல்கோள்களால் அழிந்தவை போக எஞ்சிய பன்னூற்றுக் கணக்கான நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டும் ஆற்று வெள்ளத்தில வீசப்பட்டும் அழிக்கப்பட்டன.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நாலாம் தமிழ்ச் சங்கந் தோற்றுவித்த பாலவநத்தம் பாண்டித்துரைத் தேவர் மதுரையம்பதியில் அரும்பாடுபட்டுத் தொகுத்து வைத்திருந்த கணக்கற்ற நூல்களும், ஏட்டுச்சுவடிகளும் தமிழ்ப் பகைவரால் தீயிடப்பட்டு அழிந்தொழிந்தன.
      1974-ல் நடைபெற்ற 4ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் போது தமிழர் சிங்களர் கலகத்தால் யாழ்ப்பாணம் நூலகம் சிங்களவரால் அழிக்கப்பட்டது.
      தேவாரத்தில் காணப்படும் தனித்தமிழில் இருந்த ஊர்ப்பெயர் இறைவன் பெயர்களும் சமற்கிருதத்தில் மாற்றப்பட்டன.