சூத்திரம்-57
அவற்றுள்
எச்சமும் கோளும் இன்மையும் உரிய.
என்பது என்னுதலிற்றோ எனின், மேற்கூறப்பட்ட பத்தினுள்ளும் எச்சமும்
கோளும் இன்றியும் உரிய என்பது உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொருள்:
அவற்றுள் என்பது - மேற் கூறப்பட்ட
பத்தினுள்ளும் என்றவாறு; எச்சமும் கோளும் இன்மையும் உரிய என்பது -
எச்சமானும் கோளானும் அவ்விரண்டினுள்ளும் ஒன்றொழிந்தும் இரண்டும்
ஒழிந்தும் நிற்கவும் பெறும் என்றவாறு.
அவற்றுள், எச்சமின்றி வந்ததற்குச் செய்யுள்:
‘ஆமான் அனையமென் னோக்கி அழுங்க லகன்றுசென்ற
தேமா நறுங்கண்ணி யாரையுங் காட்டுந்தென் பாழிவென்ற
வாமா நெடுந்தேர் மணிவண்ணன் மாறன்வண் தீந்தமிழ்நர்
கோமான் கொடிமே லிடியுரு மார்க்கின்ற கூர்ம்புயலே.’
(322)
இனிக், கோளின்றி வந்தது வருமாறு:
‘வாடு நிலைமையை நீக்கிமண் காத்துவல்
லத்தெதிர்ந்தார்
ஓடு நிலைமைகண் டான்வையை யொண்ணுதன்
மங்கையரோ
டாடு நிலைமையை அல்லை அவரொடம் பூம்பொழில்வாய்
நீடு நிலையையும் அல்லைசொல் லாயென் நெடுந்தகையே’ (323)
எனக் கொள்க.
(24)
சூத்திரம்-58
சொல்லே குறிப்பே ஆயிரண் டெச்சம்.
என்பது என்னுதலிற்றோ எனின், மேற்கூறப்பட்ட எச்சம் இரண்டு வகைப்படும்
என்பது உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொருள்:
சொல்லே குறிப்பே ஆயிரண்டு எச்சம் என்பது -
சால்லெச்சமும் குறிப்பெச்சமும் என இரண்டு எச்சம் ஆம் என்றவாறு.
சொல்லெச்சம் என்று சொல்லப்பட்ட வாய்பாடின்றிப் பிறவாய்பாட்டால்
தோன்றினும் என்றவாறு.
எச்சம் என்பது ஒழிதல் என்றவாறு. |