பக்கம் எண் :

270. பெருங்காஞ்சி

மலையோங்கிய மாநிலத்து
நிலையாமை நெறியுரைத்தன்று.

(இ - ள்.) வரையுயர்ந்த பெரிய குவலயத்து நிலைநில்லா நெறியைச் சொல்லியது எ-று.

வ - று. ஆயா தறிவயர்ந் தல்லாந் தகலிடத்து
மாயா நிதிய மனைச்செறீஇ-ஈயா
1திறுகப் பொதியன்மி னின்றொடு நாளைக்
குறுக வருமரோ கூற்று.

(இ - ள்.) ஆராயாதே உணர்ச்சி மறந்து அலம்வந்து பூமியிடத்துக் கெடாத பெரும்பொருளை இல்லிலே சேர்த்திப் பிறர்க்கு வழங்காதே சிக்கெனக் கட்டிவையாதொழிமின்; இன்றாதல் நாளையாதல் நும்மை அணுகவரும் கூற்றம். எ-று.

அதனால், ஈயாது இறுகப் பொதியன்மினென்க.

ஒடுவும் அரோவும் அசைகள்.

(4)

271. பொருண்மொழிக் காஞ்சி

எரிந்தி லங்கு சடைமுடி முனிவர்
புரிந்து கண்ட பொருண்மொழிந் தன்று.

(இ - ள்.) அவிர்ந்து விளங்கும் சடாமகுடத்தினையுடையமுனிவர் விரும்பித் தெளிந்த பொருளைச் சொல்லியது. எ-று.

வ - று.2ஆய பெருமை யவிர்சடையோ ராய்ந்துணர்ந்த
பாய நெறிமேற் படர்ந்தொடுங்கித் - தீய
இருளொடு வைகா திடம்படு ஞாலத்
தருளொடு வைகி யகல்.

(இ - ள்.) உண்டாய பெருமையினையும் விளங்கும் வேணியினையும் உடையோராகிய முனிவர்தெரிந்தறிந்த பரந்த வழிமேலே நினைந்து அடங்கித் தீதான மனமயக்கத்துடனே தங்காது அகன்ற பூமியிடத்தில் அருளுடனேதங்கி நீங்கு, நெஞ்சே. எ-று.

(3)

272. புலவரேத்தும் புத்தேணடு

3நுழைபுலம் படர்ந்த நோயறுகாட்சி
விழைபுலங் கடந்தோர் வீடுரைத் தன்று.

(இ - ள்.) நுண்ணிதான அறிவு சென்ற குற்றமற்ற தரிசனத்தையுடையராய் இந்திரியசயம் பண்ணினார் விரும்பும் மேலுலகத்தைச் சொல்லியது எ-று.

வ - று. பொய்யில் புலவர் புரிந்துறையுமேலுலகம்
ஐயமொன் றின்றி யறிந்துரைப்பின் - வெய்ய
பகலின் றிரவின்று பற்றின்று துற்றின்
றிகலின் றிளிவரவு மின்று.


1. நாலடி. 4, 36. 2. ஏலாதி, 67. 3. குறள், 407.