பக்கம் எண் :

வ - று.எழுவணி சீறூ ரிருண்மாலை முன்றிற்
குழுவினங் கைகூப்பி நிற்பத் - தொழுவிற்
குடக்கணீ கொண்டுவா வென்றாள் குனிவிற்
றடக்கையாய் வென்றி தரும்.

(இ - ள்.) கணையஞ்சூழ்ந்த சீறூரில் இருளையுடைய மாலைக்காலத்து முற்றத்திலே திரண்ட நம் கூட்டம் கைகுவித்துநிற்பக் கட்சாடியிருக்கும் 1ஏணியிற் குடத்துக்கள்ளை நீ எடுத்துக்கொண்டு வாவென்றாள்; ஆதலால், வளைந்த வில்லைப் பெரிய கையிலே உடையவனே, நமக்கு வெற்றியைத் தரும் எ - று.

' குடக்கணாகொண்டுவாவென்றாள் ' என்று பாடமோதி மேல்பாற்றொழுவத்திற் பசுவை அடித்துக் கொண்டுவாவென்றாளென்று பொருளுரைப்பாருமுளர்.

(4)

5. செலவு

(வ - று.)வில்லே ருழவர் வேற்றுப் 2புலமுனிக்
கல்லேர் கானங் கடந்துசென் றன்று.

(இ - ள்.) வில்லாகிய ஏரினையுடைய உழவர் மாற்றாரிடத்தைக் கருதிக் கற்பொருந்தின காட்டைக் கழிந்துபோனது எ - று.

வ - று.3கூற்றினத் தன்னார் கொடுவி லிடனேந்திப்
பாற்றினம் பின்படர முன்படர்ந் - தேற்றினம்
நின்ற நிலைகருதி யேகினார் நீள்கழைய
குன்றங் கொடுவில் லவர்.

(இ - ள்.) கூற்றின் குழுவினை யொப்பார் வளைந்த வில்லை இடப்பக்கத்திற்கொண்டு கழுகும் பருந்தும் பின்னே தொடர்ந்துவரத் தமது வலியானே நெருங்கிப்போனார், வளைந்த வில்லாளர்தம் ஏறுபொருந்திய பசுநிரைநின்ற நிலையையுடைய உயர்ந்த மூங்கிலையுடைத்தான குன்றத்தை நினைந்து எ - று.

ஏகினார் கூற்றினத்தன்னாரெனக் கூட்டுக.

(5)

6. வேய்

பற்றார் தம்முனைப் படுமணி யாயத்
தொற்றா ராய்ந்த வகையுரைத் தன்று.

(இ - ள்.) பகைவர் தம்முனையிடத்து ஒலிக்கும் மணியினையுடைய நிரையிடத்து ஒற்றினைத் தெரிந்த கூறுபாட்டினைச் சொல்லியது எ - று.

வ - று.நிலையு நிரையு நிரைப்புறத்து நின்ற
சிலையுஞ் செருமுனையுள் வைகி - இலைபுனைந்த
கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோய் சென்றறிந்து
4நள்ளிருட்கண் வந்தார் நமர்.


(பி.ம்.) 1. மேனி. 2. புலமுன்னிக். 3. தொல். புறத். சூ. 3, இளம். மேற். 4. பெருங். 3. 24 : 136 - 7.