சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

238 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இரண்டாமுருபிற்குப் புறனடை
 

221.   முதல்முன்ஐ வரின்கண் சினைமுன் வருதலும்
அதுமுதற்கு ஆகின் சினைக்குஐ ஆதலும்
இனையவை பிறவும் நினைதல் வேண்டும்.

 

இது வேற்றுமை உருபு ஏற்புழிப் படுவதுஒரு வரையறையும் வேற்றுமைப் பகுதிக்கு
ஏற்பதொரு புறனடையும் உணர்த்துகின்றது.

இ-ள்: முதற் சொல்லும் சினைச் சொல்லுமாக தொடர்ந்தவழி முதற்சொற்கண்
இரண்டாவது வரின் ஏழாவது சினைச்சொற்கண் வருதலும், ஆறாவது முதற்
சொற்கள்வரின் சினைச் சொற்கண் இரண்டாவது வருதலும், இத்தன்மையன பிறவும்
ஆராய்ந்து அறிதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு,

வரலாறு: யானையைக் கோட்டின்கண் குறைத்தான் எனவும், யானையது
கோட்டைக் குறைத்தான் எனவும் வரும்.

இனி, ‘இனையவை பிறவும்’ என்றதனானே, யானையைக் கோட்டைக் குறைத்தான்
என ஈரிடத்தும் இரண்டாவதே வருதலும், இவ்வாறே மணியை நிறத்தின்கண்
கெடுத்தான்- மணியது நிறத்தைக் கெடுத்தான்- மணியை நிறத்தைக் கெடுத்தான்- எனப்
பண்புபற்றி வருதலும், தலைமகனைச் செலவின்கண் அழுங்குவித்தல்- தலைமகனது
செலவை அழுங்குவித்தல்-தலைமகனைச் செலவை அழுங்குவித்தல்- எனத்தொழில்
பற்றி வருதலும், சாத்தனை நூலை ஓதுவித்தான்- யாற்றை நீரை விலக்கினான்- எனப்
பொருள் தொடர்ச்சி பற்றி வருதலும், அரசனொடு இளையார் வந்தார்- ஆசிரியனொடு
மாணாக்கர் வந்தார்- என உயர்பொருளும் இழிபொருளும் பற்றி மயங்கி வந்துழி.
 

  ‘ஒரு வினை ஒடுச்சொல் உயர்பின் வழித்து’

தொல்.சொல்.91