பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்61

இனி வளிநிலை நான்கு வகைப்படும்; இரேசகமும் பூரகமும் கும்பகமும் நிலையும் என. அவற்றுள் இரேசகம் என்பது உந்தியின் மேலிடமாகிய வெளியில் நின்ற காற்றினைப் பதினாறு மாத்திரை உள்ளே இழுத்து அறுபத்துநான்கு மாத்திரை உந்தியில் தடுத்து, முப்பத்திரண்டு மாத்திரை மீண்டும் வெளியில் விடுத்தல். என்னை?

1“ஏறுதல் பூரக மீரெட்டு வாமத்தா
 லாறுதல் கும்பக மறுபத்து நாலதி
 லூறுதன் முப்பத் திரண்ட திரேசக
 மாறுத லொன்றின்கண் வஞ்சக மாமே.’’

என்றார் ஆகலின்.

இனிப் பூரகம் என்பது, வெளியில் நின்ற காற்றை உள் இழுத்து உந்தியில் முற்றும் தடாமல் உடனே மீண்டும் வெளியில் விடுத்துப் பின்னர் உந்தியில் தடுத்து மீண்டும் உள் இழுத்தல். என்னை?

2“மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்
 பாலா மிரேசகத் தாலுட் பதிவித்து
 மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே
 யாலால முண்டா னருட்பெற லாமே.’’

என்றார் ஆகலின்.

இனிக் கும்பகம் என்பது, பதினாறு மாத்திரை பூரித்து முப்பத்திரண்டு மாத்திரை இரேசித்துப் பின் அறுபத்துநான்கு மாத்திரை உந்தியில் தடுத்தல். என்னை?

3“வாமத்தி லீரெட்டு மாத்திரை பூரித்தே
 யேமுற்ற முப்பத் திரண்டு மிரேசித்துக்
 காமுற்ற பிங்கலைக் கண்ணாக விவ்விரண்
 டோமத்தா லெட்டெட்டுக் கும்பிக்க வுண்மையே.’’

என்றாராகலின்,

இனி நிலை என்பது, இரேசித்துப் பூரித்து நில்லாது கழிதற்பாலாகிய நான்கு அங்குலக் காற்றினைக் கழியாது தடுத்துக்


1திருமந்திரம் 568

2திருமந்திரம் 572

3திருமந்திரம் 579