பக்கம் எண் :

202தொல்காப்பியம்-உரைவளம்

அமிழ்தத் தன்ன கமழ்தார் மார்பின்
வண்டிடைப் படாஅ முயக்கமுந்
தண்டாக் காதலும் தலைநாள் போன்மே” 1      (அகம்-332)

எனவும்,

“பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலரே
நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலரே
எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்
யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப
வேங்கை கமழும்எம் சிறுகுடி
யாங்கறிந் தனையோ நோகோ யானே” 2      (குறுந்-355)

எனவும்,

“அம்ம வாழி தோழி நலமிக
நல்ல வாயின அளியமென் தோள்கள்
மல்லல் இருங்கழி மலரும்
மெல்லம் புலம்பன் வந்த வாறே” 3      (ஐங்குறு-120)

எனவும் வரும்.

வருந்தொழிற் கருமை வாயில் கூறியவழித் தலைவி கூறியதற்குச் செய்யுள்:


1. கருத்து: விரும்பியவர்க்கு அமுதம் இனிமை பயப்பது போன்ற அவரது மார்பத்தின் வண்டு இடைபோக முடியாதபடி முயக்கமும் குறையாத காதலும் முதல் நாள்போல அமைந்தன.

2. கருத்து: வெற்ப! மேகம் பரந்து மறைத்தலின் விசும்பு தெரியவில்லை. மழைநீர் பெருகி ஓடுதலின் நிலம் தெரியவில்லை. ஞாயிறு மறைதலின் இருள் மிகுந்தது. பலரும் தூங்கும் இந்த நள்ளிரவில் எப்படி வந்தாய்? எம் சிறுகுடியை எப்படி அறிந்தாய்? யான்மிக வருந்துவன்.

3. கருத்து: தோழீ! கேட்பாயாக மெல்லம் புலம்பன் இன்று வந்தமையால் நலம் கெட்டிருந்த என் தோள்கள் நலம் பெற்று நல்லவாயின.