நெறிப்படு .......மறைப்பினும் என்பது-கூட்டம் உண்மை வழக்கியலால் நாடுகின்ற காலத்து மெய் வேறுபாடு நிகழ்ந்துழி, தோழி அறியாமலும் செவிலி அறியாமலுந் தலைவி மறைப்பினும் என்றவாறு. பொறியின் ..........இயல்பின் கண்ணும் என்பது-பொறியென்பது ஊழ். ஊழாற் கட்டப்பட்ட புணர்ச்சியைக் குறித்து ஒற்றுமைப்பட்ட நண்பினானே தலைவன் வரைதற்குக் குறை யுறுகின்றதனைத் தெளிந்த தலைவி செய்தற்கு அருமையமைந்த எண்வகையினாற் பெருமை இயைந்த இயல்பினளாகி நிற்றற் கண்ணும் என்றவாறு. எண்வகையாவது மெய்ப்பாட்டியலுள் மனன் அழிவில்லாத கூட்டம் என ஓதுகின்ற, “முட்டுவயிற் கழறல் முனிவு மெய்ந் நிறுத்தல் அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல் தூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல் காதல் கைம்மிகல் கட்டுரை யின்மை” (மெய்ப்பாட்-23) என்பன. அவற்றுள், முட்டு1 வயிற் கழறல் ஆவது - களவொழுக்கம் நிகழா நின்றுழி நிலவு வெளிப்பாடு, காவலர் கடுகுதல், தாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, தலைவன் குறிவருவதற்கு இடையீடுபடுதல், இவ்வழிக் களவொழுக்கத்தினாற் பயனின்மை கூறல். அவ்வாறு கூறி இனி இவ்வொழுக்கம் அமையுமென வரைந்தெய்துதல் காறும் புணர்ச்சியை விரும்பாது கலக்கமின்றித் தெளிவுடையளாம். முனிவு2மெய்ந்நிறுத்தல் ஆவது - இவ்வொழுக்கத்தினான் வந்த துன்பத்தைப் பிறர்க்குப் புலனாகாமை மெய்யின் கண்ணே நிறுத்தல், அவ்வழியும் வரைந்தெய்தல் சான்றமையும் புணர்ச்சியெனக் குறிவழிச் செல்லாளாம். அச்சத்தின் அகறல் ஆவது-இதனைப் பிறரறிவர் என்னும் அச்சத்தினானும் குறிவழிச் செல்லாளாம்.
1. முட்டு-தடை. 2, முனிவு-சிறு வெறுப்பால் வந்த துன்பம். |