பக்கம் எண் :

646மரபியல்

சாதிப் பெயரினைக் 1களிறென்னும் பெயர்வந்து 2குறிப்பித்தால்.

“கடுங்களிற் றொருத்தல்.”

(கலி. 2)

என்றும் ஆகுமென்பது.

3“இரலைமா னேறு.”

என்பதும் அதனாற் கொள்க.

பன்றிக்கும் அவ்வாறு வருவன உளவேற் கொள்க.

4“கேழற் பன்றி.”

(புறம். 152)

என்பதனைக் களிற்றுப்பன்றியென்றுஞ் சொல்லுப.

(34)

[ஒருத்தல் என்னும் பெயர்க்குரியன இவை எனல்]

590. புல்வாய் புலியுழை மரையே கவரி
சொல்லிய கராமோ டொருத்த லொன்றும்.
(35)
591. வார்கோட் டியானையும் பன்றியு மன்ன.(36)
592.ஏற்புடைத் தென்ப வெருமைக் கண்ணும்.

இவை, உரையியைபு நோக்கி உடனெழுதப்பட்டன.

இ--ள் : இவை ஒன்பது பெயரும் ஒருத்தலென்னும் பெயருக்கு ஒன்றும் என்றவாறு.

இவற்றைப் பெரும்பான்மை சிறுபான்மைபற்றி மூன்று சூத்திரத்தான் ஓதினானென்பது. உதாரணம்:

“காடுமீக் கூறுங் கோடேந் தொருத்தல்.”

(அகம். 65)

என, யானை ஒருத்தலென்றாயிற்று. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

(37)


1. களிறு--யானையினாணையுணர்த்தலன்றி யானைச்சாதியை யுணர்த்தும் பெயராயும் நிற்கும் என்றபடி.

2. குறிப்பித்தால் என்பது சிறப்பித்தால் என்றும் பாடமுள்ளது. அது பொருத்தமில்லை. களிற்றொருத்தல் என்பதில் ஒருத்தல் என்பது ஆணையுணர்த்தக் களிறு யானையை உணர்த்தி வந்தமை காண்க என்றபடி.

3. இரலை என்பது ஆணை உணர்த்தாது மான்சாதியை உணர்த்திற்று.

4. கேழற்பன்றி--பன்றியுளொருசாதி. எய்ப்பன்றியினீக்குதற்கு கேழற்பன்றி எனப்பட்டமையிற் பண்புத்தொகை என்பர் மயிலைநாதர்.