பக்கம் எண் :

14நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

மாட்சியவாகி, விரவும் பொருளும் விரவுமென்ப” என்னும் 45ஆம் சூத்திரத்தால் தெளியப்படும். இதில் மூன்றே என்பதில் ஏகாரம் தேற்றமும் பிரிநிலையுமாம். சிறந்தனவே என்பதிலேகாரம் இசை நிறையாகவேனும் அசை நிலையாகவேனுங் கொள்ளுக.

சூத்திரம் : 4 
 முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டி
னியல்பென மொழிப இயல்புணர்ந் தோரே.

கருத்து : முன்னைச் சூத்திரங்கூறும் மூன்றனுள் முதற்பொருளினைத்தென இச்சூத்திரம் விளக்குகிறது.

பொருள் : முதலெனப்படுவது = முதற்பொருளென்று கூறப்படுவது; நிலம் பொழுதிரண்டினியல்பு = நிலமும் பொழுதுமாகிய இரண்டினியல்பாம்; என மொழிப இயல்புணர்ந்தோரே = என்று சொல்லுவார் பொருளிலக்கணம் உணர்ந்த புலவர்.

குறிப்பு : இதில் ஈற்றேகாரம் அசை நிலை.

சூத்திரம் : 5 
 மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புன லுலகமும்
வருணன் மேய பெருமண லுலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.

கருத்து : இது மேலே இரண்டாஞ் சூத்திரத்துட் கூறியாங்கு, நானிலம் முறையே நான்குதிணைக்கு உரிமைபெறுமுறை கூறி, நிலமுதற்பொருள் திணையுரிப்பொருளொடியையுமாறு விளக்குகிறது.

பொருள் : மாயோன்மேய காடுறையுலகமும் = கருநிறக்கடவுள் உறைவிடமாகிய நிரைமேயும் காட்டுநிலப்பகுதியும்; சேயோன்மேய மைவரையுலகமும் = செவ்வேளுறையும் மஞ்சுதவழும் மலைநிலப்பகுதியும்; வேந்தன்மேய தீம்புனலுலகமும் = இந்திரனுக் கிருப்பிடமாகிய இனிய புனல்நிறை நிலப்பகுதியும்; வருணன்மேய பெருமணலுலகமும் = கடல்கெழுகடவுளாகிய வருணன் விரும்பும்