144 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
இவ்வுண்மைகளை உணர்ந்த இளம்பூரணர் ‘முன்’ என்பதற்கு இச்சூத்திரத்தில் ஈரிடத்தும் காலத்தால் முற்கூறப்பட்டதையே அமைத்துக்கூறும் கடன் மேற்கொண்டார்; கொண்டு, இதற்கு முன்கூறிய பெருந்திணைப் பகுதியாகக் காட்டிய நான்கு நிலைகளில் ஒவ்வொன்றின் முன்னிலையும் இதற்கும் பெருந்திணைச் சூத்திரத்திற்கும் முற்கூறிய கைக்கிளைக்கு பொருந்துமெனப் பொருள் கூறுவர். இவருரை ‘முன்’ என்பதற்கு ஈரிடத்தும் ஓராங்கே நேர்பொருள் கூறும் பெற்றியளவில் குற்றமற்றது; நான்கெனும் எண்ணுக்கும் பொருந்துவது. எனில், பெருந்திணைப் பகுதிகளே தத்தம் முன்னைய நிலைகளில் கைக்கிளை ஆதற்கமயும் என்பது ஆன்றோர் வழக்கும் சான்றோர் செய்யுளும் தழுவாத முரணாகும். அப்பெருந்திணை நிலைகள் கைக்கிளையாவ தெப்படி என்பதையும் விளக்கிலர். இவர் அவ்வாறு கூறுவது, அதற்குமுன் கூறிய நான்கு அகத்திணைப் பொதுவிலக்கணக் குறிப்புக்களுக்கும் அவற்றின் பின் கூறும் கைக்கிளை பெருந்திணைகளுக்குமுள்ள இயலியைபும் முரணும் கருதாததால் நேர்ந்ததாகும். அதனால் இச்சூத்திரத்திற்கு இளம்பூரணர் உரையும், நான்கென்னும் தொகைக்குரிய வகை தேறாமல் கூறியதன்றி, இச்சூத்திரக் கருத்தாகாமை யொருதலை. அன்றியும், இளம்பூரணர் கூறியவாறே கொள்ளினும், பெருந்திணைப்பகுதி நான்கன் முன்னிலைகள் கைக்கிளை ஒன்றற்கே அமையுமென்னும் நியதியில்லை. அந்நிலைகள் ஒத்தகாமத் திணைகளுக்கே சிறந்துரியன. ஆதலால், “முன்னதற்கென்ப” எனுந் தொடரை இங்குச் சிறிது முற்கூறிய கைக்கிளை ஒன்றற்கே உரியது போலக் கொள்ளற்கில்லை. மடலேறாமல் ‘ஏறுவேன்’ எனத் தோழிக்குக் கூறி “வெளிப்பட இரத்தலே ஏறாமடற்றிறம்”, “நலம் பாராட்டலே இளமை தீராத்திறம்”, “புணரா இரக்கமே தேறுதலொழிந்த காமத்துமிகாத்திறம்”, “நயப்புறுத்தலே மிக்க காமத்து மாறாத்திறம்”, என அம்முன்னிலை நான்கையும் இளம்பூரணர் இச்சூத்திரச் சிறப்புரையில் விளக்குகிறார். வெளிப்பட இரத்தலும், நலம்பாராட்டலும், புணரா இரக்கமும், நயப்புறுத்தலும், ஆய நான்கும் கைக்கிளையினும் ஒத்த காம ஐந்திணைகளுக்கே பெரிதும் சிறப்புரிமை உடையவாகப் பண்டைச் செய்யுள்களில் பயிலப் பார்க்கிறோம். இந்நூலாரும் ஐந்திணைத் துறைகளை விளக்குமிடத்து இவற்றினையும் ஐந்திணைத் துறைகளோடு இயைத்துக் கூறுகின்றார். ஆகவே, இந்நான்கையும் கைக்கிளைக்குச் |