தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 145 |
சிறந்துரியவாக இங்குக் கொள்வது பொருந்தாது; அது இந்நூற் கருத்துமன்று. அதனாலும் அவருரை இச்சூத்திரப் பொருளாகாது. இனி, இவ்வியலில் மேற்கூறிய நான்கு அகத்திணைகளின் பொதுவிலக்கணங்கள், இவ்வகத்திணையியலில் விளக்கிய உரிப் பொருளான ஒத்தகாமத்திணை ஐந்திற்கே உரியனவா? அவற்றின் பின்னர்க் கூறும் திணைகள் இரண்டிற்குந் தொடர்புடையனவா?எனுமையமகற்றித் தெளிப்பது இன்றியமையாததாகும். ஆகவே, இச்சூத்திரத்தால் இந்நூலார் அவ்வினாக்களுக்குரிய விடையிறுத்து விளக்கலாயினர், என்பதை இங்குத் தெளிதல் எளிது. இதில் “முன்னதற்கென்ப” என்பது காலம்பற்றி முன்னதையே குறிப்பதாகக் கொண்டு, இதற்கு முற்கூறிய திணையிரண்டனுள் பெருந்திணைக்கு முன்னதான கைக்கிளையைச் சுட்டும் என்று நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் பொருள் காணுதலால், அம்முறையே இச்சூத்திரத்தில் வரும் “முன்னைய நான்கும்” என்ற சொற்றொடரும் காலத்தால் இதற்கு முற்பகுதியில் கூறப்பெற்ற நான்கே யாதல் வேண்டும் என்பது தேற்றமாகும். அவ்வாறு கூறிய நான்கு குறிப்புக்கள் பெருந்திணை கைக்கிளைகளை விளக்கும் இரு சூத்திரங்களுக்கும் முன் கூறப்பெற்றுள. ஆதலால் அவற்றையே இங்கு “முன்னைய நான்கும்” என்று சுட்டினர் இந்நூலார் எனத் துணிவதே பொருத்தமாகும். அவற்றின் விவரமும் பொருத்தமும் இனி ஆராய்வோம். கைக்கிளை பெருந்திணைகளின் இலக்கணம் கூறும் முன்னும், அன்பினைந்திணைகளின் பொது இலக்கணப் பகுதி கூறிமுடிந்த பின்னும், அவ்வைந்திணைகளுக்குப் பெருவரவினவாய் வந்துதவும் நான்கு செய்திகளைப் பற்றி விதிமுகத்தானும் விலக்குவகையானும் இந்நூலார் விளக்கிச் சில சூத்திரம் யாத்துளர் என மேலே காட்டினோம். அவை, 1. | “நிகழ்ந்தது நினைத்தற் கேதுவாதல் (சூத். 43) | 2. | “நிகழ்ந்தது கூறி நிலையல்” (சூத். 44) | 3. | “மரபுநிலை திரியாது விரவும் பொருள் விரவல்” (சூத். 45) | 4. | “உள்ளுறை உவம ஆட்சி” (சூத். 46 முதல் 49 வரை) |
என்ற நான்கும் முன் ஒத்தகாமத்திணை ஐந்திற்கும் ஒத்து வழங்கும் பொது இலக்கணங்களாகக் கூறப்பெற்றன. இந்நான்கிலக்கணங்களும் |