பக்கம் எண் :

146நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

அன்பினைந்திணைகளுக்கு உரியவாதலேயன்றி, அவற்றின்பின் கூறிய கைக்கிளைக்கும் ஒத்த உரிமை உடையனவாகும்; பெருந்திணைக்கு அவ்வாறு அமைந்தியையா; என்பதை வரையறுத்து, அச்சூத்திரம் இரண்டிற்கும் பின் புறனடையாக அக்கருத்தை விளக்க இச்சூத்திரம் எழுந்தது. இத்தொடர்பியைபுகளை நன்குணர்தற்கு இவ்வியலில் கூறும் சூத்திரத்தொகை வகைகளின் வைப்புமுறைப் பாகுபாடுகளை உய்த்துணர்தல் அவசியமாகும்.

இவ்வியலில், முதற் சூத்திரத்தால் அகத்திணை ஏழென இந்நூலார் தொகுத்து விளக்கினார். இரண்டாம் சூத்திரத்தால் அத்திணைகள் ஏழனுள் முதலும் இறுதியும் ஆய கைக்கிளை பெருந்திணையெனக் குறித்த இரண்டும் கழித்து இடைநின்ற ஐந்தும் ஒத்தகாம உரித்திணைகள் என்றும், அவ்வைந்தின் நடுநின்ற பாலை யொழிய மற்றைய நான்கும் குறிஞ்சிமுதலிய நானிலங்களுக்கும் முறையே சிறப்புரிமையுடையன என்றும் கூறினார். பிறகு “முதல், கரு, உரி”, யெனும் மூன்றாஞ் சூத்திர முதல் “எஞ்சியோர்க்கும்” எனும் நாற்பத்திரண்டாஞ் சூத்திரம்வரை அந்நடுவணைந் திணைகளின் பாகுபாடுகளும், அவ்வவற்றின் சிறப்பிலக்கணங்களும் வகைபெறக்கூறினார். பிறகு “நிகழ்ந்தது நினைத்தற்கு” எனும் (42ஆம்) சூத்திர முதல் “ஏனைஉவமம்” எனும் (48ஆம்) சூத்திரம் வரை அவ்வைந்திணைகளுக்கும் அமைய வந்து பயிலும் நான்கு பொது இலக்கணங்களைக் கூறி முடித்தார். பிறகு “காமஞ்சாலா” எனும் (49ஆம்) சூத்திரத்தில் கைக்கிளையையும், அதன் பிறகு “ஏறிய மடற்றிறம்” எனும் (50ஆம்) சூத்திரத்தில் பெருந்திணையையும் விளக்கினார். அவற்றின் பின் “முன்னைய நான்கும்” என்னும் இச்சூத்திரத்தை நிற்கவைத்தார். இவற்றுள் மூன்றாம் சூத்திரத்தால் அன்பினைந்திணைகளும் முதல் கரு உரியென வகைபெற வழங்கும் எனக்கூறி, அவ்வகைகளை விளக்கப் புகுந்தவர் “புணர்தல் பிரிதல்” எனும் 14ஆம் சூத்திரத்தில் உரிப்பொருள்களை வகுத்து, அதுமுதல் “எஞ்சியோர்க்கும்” எனும் 41ஆம் சூத்திரம்வரை அவ்வுரிப்பொருள்களுள் ஒவ்வொன்றன் தனிச்சிறப்பிலக்கணங்களையும் அவ்வத்திணையொடு நிரலே வகைபட விளக்கினர்.

இவையெல்லாம் அன்புரித்திணைகள் ஐந்தில் ஒவ்வொன்றற்கே சிறப்புரிமையுடையனவாதல் கூறி, இவற்றின்பின் “நிகழ்ந்தது நினைத்தற்கு” என்பது (சூத். 42) முதல் “ஏனையுவமம்”