தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 147 |
என்பது (சூத். 48) வரை ஏழு சூத்திரங்களுள் இறுதி நான்கில் உள்ளுறை யுவமம் ஒன்றும், முதல் மூன்று சூத்திரங்களில் தனிவேறு மூன்றுமாக நான்கு பொது இலக்கணங்களை ஒத்தகாமத்திணை ஐந்திற்கும் ஒத்த இயைபும் தொடர்பும் உடையனவாகத் தெள்ளிதிற் கொள்ளவைத்தார். இவற்றுள், முதலிரு சூத்திரங்களை (சூத். 43-44) பாலைக்கே உரியனபோல உரைகாரர் கூறுவது பொருத்தமற்றதாகும். “இரண்டறி கள்வி நங்காத லோளே; . . . . . . . . . . கான நாறவந்து நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள், கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து . . . . . . . . . . . . . . . . . அமரா முகத்த ளாகித் தம்மோ ரன்னள் வைகறை யானே”. (குறுந். 312) எனத் தலைவிபால் நிகழ்ச்சி தலைவன் தன்னுள் நினைத்தற்கு ஏதுவானதைக் கூறும் குறுந்தொகை 312ஆம் பாட்டும், “அம்ம வாழிதோழி. . . . . . . . . . மாற்றலம் யாமென மதிப்புக் கூறி நம்பிரிந் துறைந்தோர், மன்றநீ விட்டனை யோஅவ ருற்ற சூளே. ” என முன் தலைவன் நிகழ்த்தியசூளைத் தோழி தலைவியை நினைக்கச் செய்ததைக்கூறும் ஐங்குறுநூற்றுச் (227ஆம்) செய்யுளும், பாலைபற்றிய அல்ல; ஈரிடத்தும் இவை குறிஞ்சித்திணையில் “நிகழ்ந்ததைப்பின் நினைத்தற்கு ஏது”வானதையே குறித்தன. “மின்னொளிர் அவிரறல்” என்னும் குறிஞ்சிக்கலி (19ஆம்) பாட்டும் அனையதே. இனி, “தீம்பால் கறந்த கலமாற்றி” என வரும் முல்லைக்கலிச் (10ஆம்) செய்யுளும், “கொடியவும் கோட்டவும்” எனவரும் குறிஞ்சிக்கலிச் (18ஆம்) செய்யுளும் தலைவி “முன்னிகழ்ந்தது கூறி நிலையலை” உணர்த்துவன; இவை முறையே முல்லையினும் குறிஞ்சியினும் வந்தன. இவ்வாறே இவ்விரு சூத்திரக் குறிப்புக்களும், உரைகாரர் கூறுமாறு பாலைக்குத் தனியுரிமை கொள்ளாமல், ஐந்திணை அனைத்திற்கும் வந்து பயிலும். “மரபுநிலை திரியா மாட்சியவாகி விரவும் பொருளும் விரவுவதும்”, “உள்ளுறையுவமம் பயிலுவதும்”, ஒத்த காமத்திணை |