பக்கம் எண் :

152நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

என்றும், (2) அவ்வாறு காதலிருவர் தம்முள் ஆதரவுபட்டு அளவுதல் கைக்கிளை பெருந்திணைகளிலின்மையால் அவ்விரண்டையும் விலக்கி “அகனைந்திணை” என்றெண் குறித்தும், (3) பெயர்சுட்டி ‘அளவுதல்’ அன்புத்திணை அனைத்திலும் வழக்காறன்மையால் “அகனைந்திணையும்” என முற்றும்மை கொடுத்தும், இங்குத் தொல்காப்பியர் கூறிய குறிப்புத் தேறற்பாற்று.

தலைமக்கள் தம்முள் அன்பளவுதலில் மட்டும் “சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார்” எனவும், அவ்வாறு அவருள் அன்பளவுதலின் புறத்தே அகப்பகுதிகளில் ஏற்புடை யிடங்களில் பெயர்கூறப் பெறுதல் கடியப்படாதெனவும், முறையே இவ்விரு சூத்திரங்களானும் தொல்காப்பியர் விளங்கவைத்தார்.

இனி, இதுவே தமிழ்கூறும் நல்லுலகத்து வழக்கினும் செய்யுளினும் அடிப்பட்டு வந்த ஆன்றமரபா மென்பது, சான்றோர் செய்யுட்களானும் தமிழ்மக்கள் கையாளும் ஆன்ற வாக்கானும் தேறப்படும்.

சிலப்பதிகாரம் சிந்தாமணி இராமாயணம் போன்ற சான்றோர் செய்யுட்களில் இம்மரபாட்சி கண்டு தெளிக.

“மாசறு பொன்னே, வலம்புரி முத்தே,
 காசறு விரையே, கரும்பே, தேனே
 அரும்பெறற் பாவாய், ஆருயிர் மருந்தே,
 பெருங்குடி வாணிகன் பெருமடமகளே,
 மலையிடைப் பிறவா மணியே என்கோ?
 அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ”
 யாழிடைப் பிறவா இசையே என்கோ?
 தாழிருங் கூந்தல் தையால்! நின்னை. ”

என்று சிலப்பதிகாரத்தின் தலைநாட் கூட்டத்துக்குப்பின் தன் தலைவியொடு அளவளாவும் கோவலன் அவள் நலம் பாராட்டும் குறிஞ்சித் திணையில் தலைவி பெயர்சுட்டாமல் அளவுதல், அகனைந்திணையில் தலைமக்கள் அளவளாவுமிடத்து ஒருவர் பெயரை மற்றொருவர் சுட்டா மரபு காட்டும். அஃதல்லாவிடத்துப் பெயர் சுட்டும் வழக்குண்மையை:

“ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி