பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை181

[‘கழல்’ என்பது போர் வென்றிப் பெருமிதக் குறியாக மறம்பேணுந் திறலுடையார் காலில்பூணும் ஒரு அணி வகை. இதில் எண்ணும்மை தொக்கது. ]

“ஓடாத் தானை ஒண்தொழிற் கழற்கால்
 செவ்வரை நாடன் . . . . . . ”

எனும் பெரும்பாணாற்றுப்படை அடிகளில், மறக்குறியாகத் தானை காலில் கழலணியும் பரிசு கூறப்படுதல் காண்க.

(7) ஓடா உடல் வேந்து உளப்பட அடுக்கிய உன்ன நிலையும் = பின் வாங்காது மலையும் வேந்தன் வெற்றியை உளத்தெண்ணி, சார்த்து வகையால் உன்ன மரத்தில் நிமித்தங்கொள்ளும் உன்ன நிலையும்:

[‘உடல்வேந்து’ என்பது பொருபடை என்பது போன்றதோர் வினைத்தொகை; உடலும் வேந்து என விரியும். உடலுதல் = சினந்து பொருதல்; பகைத்தலுமாம].

உன்னம் = சிற்றிலையும் பொற்பூவுமுள்ளதோர் மரவகை. பண்டைத் தமிழ் மறவர் போர்க்கெழுமுன் உன்னமரக் கோட்டில் மாலைகளை அடுக்கி நிமித்தங்கொள்ளுவது வழக்காறு. [இனி, குறி பார்ப்பவர் தம் மன்னற்கு ஆக்கம் எனின் அம்மரக்கோடு தழைவதும், கேடுளதேல் அழிவதும் ஆகிய ஒரு கடவுட்டன்மையுண்டென்றும், அதனால் பொருநர் போருக்குமுன் அம்மரத்தைப் பரசிக் குறி கேட்பரென்றும், அவ்வாறு கேட்டலே உன்ன நிலையென்றும் உரைப்பாருமுளர்].

“முன்னங் குழையவும் கோடெலா மொய்தளிரின்
 றுன்னங் குழையொலித் தோங்குவாய் - மன்னரைக்
 கொன்று களங்கொள்ளுங் கொல்யானை வேந்தனை
 வென்றுகளங் கொள்ளுமேல் வேந்து. ”

எனும் பழம்பாட்டு இவ் வுன்னநிலைத் துறையை விளக்குத லறிக.

(8) மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில் தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் = மாயோன் விரும்பும் நிலைத்த பெரிய சிறப்பினையுடைய கெடாத உயர்ந்த புகழினைக் குறிக்கும் காயாமலரால் நிமித்தங்கொள்ளும் பூவை நிலையென்னும் துறையும்;