188 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
இதில் புணர்ந்து என்னும் எச்சம் புணர என நின்றது. அன்றி, நின்றாங்கே கொண்டு, சேர எனப் பொருள் கொள்ளினும் அமையும். இவையாறும் ‘நடுகல்’ வகைகளாய் விழவொடு வரூஉம் துறைகளாதலின், இவற்றைக் கல்லொடு என ஒடுக் கொடுத்துப் பிரித்து, ‘இரு மூன்று வகையிற் கல்லொடு புணர’ என எண் வேறு கொடுத்துத் தொகுக்கப்பட்டன. போரில் புகழொடு பட்டானைப் பாராட்டிக் கல் நட்டு விழவொடு பழிச்சுதல் பண்டைத் தமிழர் வழக்காகும். ‘பெருங்களிற்றடியில்’ எனத் தொடங்கும் புறப்பாட்டில் (263). “. . . . . . . . . . . . . . . தொழாதனை கழிதல் ஓம்புதி. . . . . . வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக் கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லை” என வருவதால், அமரில் பட்ட பொருநர்க்குத் தமர் கல் நட்டு வழிபடும் பழைய மரபு விளங்கும். “பரலுடை மருங்கில் பதுக்கை சேர்த்தி மரல்வகுத்துத் தொடுத்த செம்பூங் கண்ணியொடு அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித் தினி நட்டனரே கல்லும். ” எனும் 264ஆம் புறப்பாட்டிலும் இறந்த மறவனுக்குப் பெயர் பொறித்துக் கல்நாட்டும் பண்டை வழக்கம் குறிக்கப்படுகின்றது. சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே = கூறப்பட்ட ஆகோள் அல்லாத வெட்சிவகைத் துறைகள் இருபத்தொன்று ஆகும். இதில் ஏகாரம் அசை. துறை ஒவ்வொன்றனோடும் வரும் உம்மை எண்ணும்மை. சூத்திரம் : 6 | | | வஞ்சி தானே முல்லையது புறனே. |
|