பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை293

வகைகளன்றித் துறைகளாகாமை தெளிவாகும். இன்னும், பாடாண் “நாடுங்காலை நாலிரண்டு (சிறப்பு வகை) யுடைத்”தென முன்னே எண் கொடுத்துத் தெளியக் கூறியதாலும், இங்கு முதலில் ஏழைத் தனித்தனி எண்ணிவிட்டு இறுதியிலொருபரிசான இந்நான்கை “உளப்படத் தொகைஇத் தொக்க நான்கும் உள” எனப்பிரித்து வேறு கூறியதாலும், இது பாடாணின் சிறப்பு வகை எட்டையே சுட்டுவது தேற்றமாகும். ஏத்தலும் பழித்தலும் வெவ்வேறு பரிசுடைமை மேற்காட்டிய சான்றோர் செய்யுட்களாலறிவதாலும் அது பொருந்தாமை தெளிவாகும். இன்னும் முன் “நாலிரண்டுடைத்து” என்பதைத் திணைவகையன்றித் துறைகளையே சுட்டுவதாய்க் கொள்ளின், இதிலும் இதையடுத்த சூத்திரத்தும் முறையே கூறப்பெறுவன தனித்தனியே எட்டிறந்தனவாமாதலானும் அது பொருந்தாமை ஒருதலை. அதனாலுமது தொல்காப்பியர் கருத்தாகாது.

இனி, (1) வாயுறை வாழ்த்து, பாடாணாதற்குச் செய்யுள் வருமாறு :

“எருமை யன்ன கருங்கல் லிடைதோ
 றானிற் பரக்கும் யானைய முன்பிற்
 கானக நாடனை நீயோ பெரும!
 நீயோ ராகலின் நின்னொன்று மொழிவல்;
 அருளு மன்பு நீக்கி நீங்கா
 நிரயங் கொள்பவரொ டொன்றாது, காவல்
 குழவி கொள்பவரி னோம்புமதி;
 அளிதோ தானேஅது பெறலருங் குரைத்தே”

- புறம். 5

(2)  செவியறிவுறூஉ பாடாணாய் வருமாறு : “வடாஅது பனிபடு நெடுவரை” எனும் காரிகிழார் புறப்பாட்டில்,

“பணியிய ரத்தைநின் குடையே, முனிவர்
 முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே;
 இறைஞ்சுக பெருமநின் சென்னி, சிறந்த
 நான்மறை முனிவர் ஏந்துகை யெதிரே;
 வாடுக இறைவநின் கண்ணி, ஒன்னார்
 நாடுசுடு கமழ்புகை எறித்த லானே;
 செலீஇய ரத்தைநின் வெகுளி, வாலிழை
 மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே;