பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை301

செறுவும் வாவியும் மயங்கி நீரற்
றறுகோட் டிரலையொடு மான்பிணை யுகளவும்,
. . . . . . . . . . . . . . . . . . .
பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துச்
சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி
அழல்வா யோரி அஞ்சுவரக் கதிர்ப்பவும்,
. . . . . . . . . . . . . . . . . . .
வளைவாய்க் கூகை நண்பகற் குழறவும்
அருங்கடி வரைப்பி னூர்கவி னழியப்
பெரும்பாழ் செய்து மமையான்; ”

- பட்டினப்பாலை. வரி, 228 - 270

 [ முன் உழிஞைத்துறையாகச் சுட்டிய “இகன்மதிற் குடுமிகொண்ட மண்ணுமங்கலம் எயிலையழியாது கைப்பற்றிய விழவாம்; இப்பாடாண்துறை, பற்றாது பகையரணெறிந்தழித்துப் பாழ்செய்த களியாட்டைக் குறிப்பதால் இது முன்னதின் வேறாதல் வெளிப்படை. இங்கு மங்கலம் மகிழ் கூரும் விழவைக்குறிக்கும்; மண்ணு விழவெல்லாம் விழவயர்வார் நீராடித் தொடங்குமரபு பற்றிய குறிப்பு. எனவே, விழவுகள் மண்ணுமங்கல மெனப் பெறுதலறிக.  ] 

(8)  பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் = இரவலர் புரவலன் தலைவாயிலை யணுகிப் புகழ்ந்து பரிசில் கேட்கும் பெற்றியும்;

 [ கடைக்கூட்டு = தலைக்கடை சேர்தல். கடைஇய என்பது கடாவிய என்பதன் செய்யுட் சொல்: கடாவல் = கேட்டல்.

இதற்குச் செய்யுள்:

“பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்
 கயங்களி முளியுங் கோடை யாயினும்
 புழற்கா லாம்ப லகலடை நீழற்
 கதிர்க்கோடு நந்தின் சுரிமுக வேற்றை
 நாகிள வளையொடு பகல்மணம் புகூஉ
 நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்
 வான்தோய் நீள்குடை வயமான் சென்னி!
 சான்றோ ரிருந்த அவையத் துற்றோன்
 ஆசா கென்னும் பூசல் போல
 வல்லே களைமதி யத்தை, உள்ளிய