தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 491 |
நாவலரோ, “செய்யுள் உறுப்பாம் மெய்ப்பாட்டுணர்வுகள், மேற்கூறியாங்கு நந்நான்காய் எண்வகை இயனெறி பிழையாது வருவனவேயன்றி, எவ்வெட்டாய்த் தொக்கு வகைப்பட வரும் தன்மைய பிறவும் உள” என்று கூறுவர். இதற்குச் சான்றாக ‘ஆங்கவை யொருபா லாக வொருபால்’ எனும் நூற்பாவைக் காட்டி ‘உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு’ என எவ்வெட்டாய் முப்பத்திரண்டு எண்ணி முடித்துக் காட்டப்படுதலையும் விளக்குவர். “பண்ணைத் . . . நானான் கென்ப” என்பது தொகைச் சூத்திரம் “நகையே . . . டென்ப” என்பது வகைச் சூத்திரம். “எள்ளல் . . . கென்ப” முதலாயின விரிச்சூத்திரங்கள். இவ்வாறே, “நாலிரண்டாகும் பாலுமா ருண்டே” என்பது தொகைச் சூத்திரம். “ஆங்கவை யொருபாலாக . . . கடையே” என்பது விரிச் சூத்திரம் எனப் புத்துரைகாணும் நாவலர் திறம் அறிந்து இன்புறத் தக்கது! இனி, இதே நூற்பாவுக்கு நாவலர், மற்றொரு நயவுரையும் நவில்கின்றார்: “உய்த்துக்கொண்டுணர்தல், இரட்டுற மொழிதல் எனும் உத்திகளால் இச்சூத்திரத்திற்குப் பிறிதும் ஒரு பொருள் கொள்ளுதலும் பொருந்தும். இதில் ‘நாலிரண்டு’ என்பதை உம்மை தொக்க கூட்டெண்ணாக்கி, நாலும் இரண்டும் எனக் கூட்டி, அறுவகைப்படும் இயல்புடைய அகத்துறை மெய்ப்பாடுகளும் உளவெனப் பொருள் கூறி, அவ்வாறும் முறையே ‘புகுமுகம் புரிதல் . . . மொழிப’ என்று தொடங்கிப், ‘புலம்பிய நான்கே ஆறென மொழிப’ என எண்ணிமுடிக்கும் மெய்ப்பாட்டுத் தொகை ஆறுமாமென அமைத்துக் கோடலும் தவறாகாது!” நாவலர் நயவுரை இனி, நூற்பாக்களுக்கு நாவலர் காணும் நயவுரைகளும் பலவாகும். அவற்றுட் சில : (1) “எள்ளல் . . . . . . கென்ப” என்ற நூற்பாவுக்கு, “எள்ளல் . நகைமொழி, அஃதாவது கேலி; இளமை - மழவு. |