பக்கம் எண் :

மூன்றாவது மருதம்453

14 வரிதேற்றாய் நீயென வணங்கிறை யவன்பற்றித்
தெரிவேய்த்தோட் கரும்பெழுதித் தொய்யில்செய்தனைத்தற்கோ
புரிபுநம் மாயத்தார் பொய்யாக வெடுத்தசொல்
லுரிதென வுணராய்நீ யுலமந்தாய் போன்றதை;
எனவாங்கு;
19 அரிதினி யாயிழா யதுதேற்றல் புரிபொருங்
கன்றுநம் வதுவையு ணமர்செய்வ தின்றீங்கே
தானயந் திருந்த திவ்வூ ராயி னெவன்கொலோ
நாஞ்செயற் பால தினி.

இஃது "அச்ச நீடினும்" (1) என்றதனாற் கூட்டமுண்மை உணர்ந்த தோழிக்கு உண்மைகூறுதற்கு அஞ்சிய அச்சம் நீட்டித்துத் தலைவி கூறியது. இது "திணை 1மயக் குறுதலுங்கடிநிலையிலவே" என்னும் (2) சூத்திரவிதியான் மருதத்துக் குறிஞ்சி வந்தது.

இதன் பொருள்.

புனையிழை நோக்கியும் புனலாடப் புறஞ்சூழ்ந்து
மணிவரி தைஇயுநம் மில்வந்து வணங்கியு
நினையுபு வருந்துமிந் நெடுந்தகை திறத்திவ்வூ
ரினையளென் றெடுத்தோதற் கனையையோ நீயென
(3) வினவுதி யாயின் விளங்கிழாய் கேளினி

எ - து: கைசெய்த பூண்களைக் கிடக்கும் முறைமையிலே கிடக்கத் திருத்தியும் நாம் நீரிலே விளையாட நமக்கு ஓரேதம் வாராமற் புறத்தே சூழ்ந்து திரிந்தும் அழகிய தொய்யிலெழுதியும் நம்முடைய சிற்றிலிலே வந்து ஏவற் றொழிலைச் செய்தும் கூட்டத்தை 2நினைந்து வருந்துகின்ற இந்தப் பெரிய தகுதிப்பாட்டையுடையவனிடத்தே கூட்டத்தையுடையளென்று இவ்வூரிலுள்ளார் பலகாலுங் கூறுதற்கு நீ அங்ஙனம் ஒருகூட்டத்தையுடையையோவென்று கேட்கின்றாயாயின், விளங்குகின்ற இழையினையுடையாய்! இப்பொழுது யான் கூறுகின்றதனைக்கேள். எ - று.


1. தொல். கள. சூ. 20. இச்சூத்திர வுரையிலும் இச்செய்திக்கே இக்குறிப்போடு இச்செய்யுளை இவர் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

2. தொல். அகத். சூ. 12. இச்சூத்திரத்தின் இவருரையிலும் மருதத்துக் குறிஞ்சி மயங்கியதற்கு இச்செய்யுள் மேற்கோள்.

3. "வினவுதி யாயிற் கேண்மதி" ஆசிரிய. 'ஒளிவிடு'

(பிரதிபேதம்) 1மயங்குறுதலும், 2நினைந்தும் நின்ற.