பக்கம் எண் :


244காஞ்சிப் புராணம்


     பெரிய விளக்கொளியாகி விளங்கி வளங்கொண்ட கருணையுடன்
பெரிய யானையை (கசேந்திரனை)க் காத்த திருமால் எழுந்தருளியுள்ள
தலமாகிய அத்திகிரிக்கு மேற்றிசையில் ஆதீபித ஈசம் என்னும் அவ்விடத்தில்
ஒப்பற்ற சிவலிங்கத் திருவுருவம் நிறுவியே,

பூசை யாற்றிப் புரிவரம் பெற்றெழுந்
தோசை நீத்தந் தடுத்துயர் வேள்விகாத்
தாசை ஆடை யவன்எதிர் வைகினான்
வீசு சோதி விளக்கொளி அண்ணலே.           5

     பூசனை வலம் உண்டாகச் செய்து விரும்பிய வரத்தைப் பெற்று
எழுச்சியொடு சென்று பேரொலியுடன் வந்த வெள்ள நீரைத் தடை செய்து
உயர்ந்த யாகத்தினை இடையூறு நீக்கிக் காவல் செய்து திசையை
ஆடையாகவுடைய விளக்கொளிப் பெருமான் திருமுன்னர் விளக்கொளிப்
பெருமாள் என்னும் திருப்பெயருடன் எதிரில் வீற்றிரா நின்றனர்.

செங்கண் மால்தொழும் ஆதீபி தேச்சரம்
பொங்கு காதலிற் போற்றப் பெறுநர்தாம்
இங்கண் வேண்டும் வரங்களும் எய்திமற்
றங்கண் முத்திப் பதமும் அடைவரால்.           6

     செந்தாமரை மலர்போலும் கண்களையுடைய திருமால் வணங்கும்
ஆதீபிதேச்சரப் பெருமானை மிகுகின்ற பேரன்பில் வழிபாடு செய்வோர்
இவ்வுலகில் வேண்டும் நலங்களையும் பெற்று வாழ்ந்து அவ்வுலக நலமாகிய
முத்திப்பேற்றினையும் அடைவர்.

ஆதீபிதேசப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம். 797

முத்தீசப் படலம்

கலி விருத்தம்

கற்றைச் செஞ்சடைக் காமரு கொள்கையீர்
அற்றம் நீத்தருள் ஆதீபி தேச்சரஞ்
சொற்ற னம்புள் ளரசு தொழுதுசீர்க்
கொற்றம் உற்றமுத் தீச்சரங் கூறுவாம்.       1