திருமேற்றளிப் படலம் கலி நிலைத்துறை துளிம துத்தொடைக் கடவுளர் தொழும்அம ரேசம் களிவ ரப்புகன் றனம்உருத் திரகண முதலோர் அளியி னால்தொழு தேத்தும்ஈ ரைம்பதிற் றொன்பான் தளிகள் ஈண்டெடுத் தியம்புதும் வழுத்தபு நெறியீர். 1 | குற்றங்களைக் கெடுத்தருளிய செவ்விய நெறி நிற்பிர்! தேனைத் துளிக்கின்ற மாலையை அணிந்த தேவர் தொழும் அமரேசம் மகிழ்ச்சி மீதூரக் கூறினோம். உருத்திர கண முதல்வர் அன்பால் தொழுது துதிக்கும் நூற்றுப் பதினெட்டுத் திருக்கோயில்கள் இவண் எடுத்துக் கூறுவோம். சேகு தீர்அம ரேசத்தின் சேயிடைத் தென்பால் மாக வைப்பினை உரிஞ்சிய மணிமதிற் காயா ரோக ணக்குட பாங்கர்நூற் றுப்பதி னெட்டு நாகர் போற்றிட நலங்கெழு தலங்கள்நன் குளவால். 2 | குற்றத்தைப் போக்குகின்ற அமரேசத் தலத்திற்குத் தென் திசைச் சேணிடை விண் தலத்தினைத் தீண்டுகின்ற அழகிய மதில் சூழ்ந்த காயா ரோகணத்திற்கு மேற்கில் உருத்திரர் நூற்றுப்பதினெண்மர் போற்றிட நன்மை கெழுமிய தலங்கள் சிறக்க உள்ளன. அண்டங் காத்தமர் உருத்திரர் நூற்றுவர் அருட்சீ கண்டன் வீரன்கு ரோதனே முதல்கரு தெண்மர் மண்ட லத்திறை யோர்இரு நால்வரும் வழுத்திப் பண்டு பூசனை புரிந்திடப் பட்டஅத் தளிகள். 3 | அண்டத்தைக் காவல் பூண்டு விளங்குகின்ற உருத்திரர் நூற்றுவரும், அருளொடு கூடிய சீ கண்ட ருத்திரர் வீரபத்திரர் ஆகியோரும், குரோதர் முதலிய எண்மரும், மண்டலத் தலைவராகும் எண்மரும் துதித்து முன்னம் பூசனை இயற்றப்பட்டன ஆகும் அக்கோயில்கள். திருமால் சிவசாரூபம் பெற விரும்பல் இருமை யுந்தரு மேன்மைஅத் தளிகளை என்றும் பொருவில் மெய்த்தவர் பற்பலர் அருச்சனை புரிவார் கருத ரும்புகழ் அவற்றிடைக் கண்டவர் கருநோய் ஒருவி வீடுறும் மேற்றளி என்பதொன் றுளதால். 4 | |