பக்கம் எண் :


திருநகரப் படலம் 63


மதில்

எழுசீரடி யாசிரிய விருத்தம்

கம்பை யைத்த டுத்த பின்பு கம்ப னார ழைத்தலும்
பம்பி ஆர்த்தொ ருங்கு பௌவம் ஏழு முற்று மாறுணர்ந்
தம்பை அண்ட பித்தி காறும் ஆக்கு மாத்த டைபொர
வம்ப லர்க்கி டங்கு சூழ்ந்த மல்லல் நொச்சி ஓங்குமே.    38

     கம்பாநதியைத் தடுத்துத் தோல்வியுறச் செய்த பின்பு, திருவேகம்பப்
பெருமானார் அழைத்த அளவிலே எழுகடலும் செறிந்து ஆரவாரித்து ஒரு
சேர வளைக்கும் வகையை அறிந்து, இறைவி அண்டச் சுவர் அளவும்
ஆக்கும் பெருந்தடையை ஒப்ப மணந்தங்கிய மலர்களையுடைய அகழி சூழ
வலிமை பொருந்திய மதில் உயர்ந்து நிற்கும். அழைத்தலும் உம்மை
உடனிகழ்ச்சி. காறும்-அளவும். நொச்சி-(பகைவரை) வருத்துதலின் வந்த
பெயர்.

திருக்கி ளர்ச்சி யிற்செ ருக்கு தேவ நாடு பாதலத்
தருக்கு நோக்கி வெஞ்சி னந்த லைக்கொள் காஞ்சி யவ்வலி
முருக்க எண்ணி முன்பு போய்வ ளைப்ப ஏவி மூண்டென
மருக்கி டங்கும் இஞ்சி யும்வி யத்த கும்வ ளத்தவே.    39

     செல்வம் மிக்கு இறுமாக்கின்ற விண்ணுலகையும், இறுமாக்கின்ற
பாதல உலகையும் நோக்கி கொடுங்கோபம் மீக்கொண்ட காஞ்சி, அவற்றின்
வலிமையை அழிக்கக் கருதி முன்சென்று வளைப்ப ஏவினமையால் மூளுதல்
என மணமுடைய கிடங்கும், மதிலும் அதிசயிக்கத் தகும் வளமுடையன.

     திருக்கிளர்ச்சியின் தருக்கு எனவும் கூட்டுக. முன்பு போய்-முன் பொடு
போய் (முன்பு-வலிமை) எனவும் கொள்க. ‘வலிமுன்பின் வல்லென்ற யாக்கை’
(கலித்-4-1)

கிடங்கின் எல்லை காண்ப தன்று கீழும் மேலு மாகநீள்
விடங்கர் தாள ணிந்த விண்டு நோக்க மேவி யன்மதில்
தடங்கொள் எல்லை காண்ப துந்த லைவர் தஞ்ச டைத்தலை
இடங்கொள் வெண்ட லைய லாமல் ஏவர் காண வல்லரே.   40

     அகழியின் ஆழத்தளவைப் பிறர் காண்டற் குட் படுவதன்று; கீழும்
மேலுமாகவும் நீண்ட அழகராகிய பெருமான் திருவடியில் மலராகச் சாத்தப்
பெற்ற திருமாலின் விழியே காணும் இயல்பினது. அகன்ற மதில் இடங்
கொண்ட உச்சியை அறிவதும் அம்முதல்வர் தம் சடை முடியைத் தனக்கு
இடமாகக் கொண்ட வெள்ளிய தலைமாலையே அன்றிக் காண வல்லவர்
எவர்.

     திருமால் விழியை மலராகத் திருவடியிலிட்டமை திருமாற்பேற்றுப்
படலத்திலும், வெண்டலைமாலை அணிந்தமை கந்த புராணம் ததீசி உத்தரப்
படலத்திலுங் காண்க.