பக்கம் எண் :


744காஞ்சிப் புராணம்


     தென்புலத் தவர்தாம் அயன்தரு மரீசி முதலியோர் சிறுவர்
அங்கவருள், இன்புறு மரீசி விராட்டுவை முதலோர் ஈன்றவர் சுராசுரர்
முதலோர்க், கன்புடைப் பிதிர ராகுவர் கவியோ டங்கிரா புலத்தியன்
வசிட்டன், என்பவர்க் குதித்தோர் மறையவர் அரசர் வணிகர்வே
ளாளருக் கியைவர்.                                      50

     பிதிரர் என்போர் பிரமனார் தம் மக்களாகும் மரீசி முதலானோருடைய
மக்கள் ஆவர், அவர் தம்முள் மரீசி விராட்டு முதலாமவர் மைந்தர்கள்
தேவர் அசுரர் முதலோர்க்கும் கவி, அங்கிரா, புலத்தியன், வசிட்டன்
எனப்பெறும் முனிவரர்தம் மக்கள் முறையே வேதியர்க்கும், அரசர்க்கும்,
வணிகர்க்கும், வேளாளர்க்கும் பிதிரராவர்.

     முனிவரிற் பிறந்தார் தென்புலத் தவர்அம் முதல்வரிற் சுராசுரர்
பிறந்தார், புனிதவிண் ணவரிற் சராசரம் அனைத்தும் புகரறத்
தோன்றின முறையால், இனையசீர்ப் பிதிரர் தமைக்குறித் தீசன்
இணையடிக் கன்புடை மறையோர், நனியுளங் களிப்ப உறுதியாற்
காஞ்சி நகர்வயின் ஊட்டுதல் கடனே.                       51

     முனிவரரிடத்துப் பிதிரரும், அப்பிதிரரிடத்துச் சுராசுரரும்,
தேவரிடத்துச் சராசரங்களும் பிறந்தன ஆகலின் அப் பிதிரர்களை
உளங்கொண்டு சிவபெருமான் திருவடிக் கன்புடைய வேதியர்
பெரிதும் உள்ளம் மகிழும்படி அவர்தம்மைக் காஞ்சியில் உண்பித்தல்
இல்வாழ்வார்க்குக் கடப்பாடாம்.

அறுசீரடி யாசிரிய விருத்தம்

இம்முறை இல்லின் வைகி இடைப்படுங் காற்கூ றாயுள்
செம்மையிற் கழிப்பிப் பின்னர்ச் செறிமயிர் நரைப்புக் காணும்
மம்மரின் அறிவு மிக்கார் மனைவியை மகன்பால் வைத்து
வம்மென உடன்கொண் டேனும் வனத்திடைச் சேறல் வேண்டும்.  52

     இவ்வாறு இல்லறத்தின் வழுவா தொழுகி ஆயுளின் நான்கிலொரு பங்கு
காலம் நன்முறையிற் கழித்த பின்பு மயிரில் நரைதோன்றி மயக்கு நிலையின்
அறிவு மிக்கவர் மனைவியை மகனிடத்து வைத்தேனும் அன்றி
உடன்கொண்டேனும் வனத்தினை அடைக.

விழைதரு காஞ்சி மூதூர்ப் புறனில வரைப்பின் மேவித்
தழைபொதி சாலை வைகி வேனில்ஐந் தழலின் நாப்பண்
மழையினிற் பனியில் நீருள் வதிந்துமா தவங்க ளாற்றிக்
குழைவுறு மனத்தான் உஞ்ச விருத்திகொண் டுறைக மாதோ.   53

     விரும்பத்தகும் காஞ்சிக்கு அயலே சென்று பன்னசாலை அமைத்து
வாழ்க்கையில் இளவேனில் முதுவேனிற் பருவ காலங்களில் பஞ்சாக்கினி