பக்கம் எண் :

பக்கம் எண் :440

Manimegalai-Book Content
27. சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
 

ஆன்மாவும் மனமும் ஆம்; இவற்றுள் -இவ்வொன்பதனுள்; நிலம் ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் பயில்குண முடைத்து - நிலமென்பது ஓசையும் பரிசமும் நிறமும் சுவையும் மணமு மென்று பொருந்தும் ஐந்து குணங்களையு முடையது; நின்ற நான்கும் - ஏனை நீரும் தீயும் காற்றும் விண்ணுமாகிய நான்கும்; அவை ஒரோ குணம் குறைவுடைய - அவ்வொலி முதலிய குணமைந்தனுள் முறையே ஒவ்வொரு குணம் குறைவாக வுள்ளனவாகும் எ - று.

என்றது, நீர், மண மொழிந்த நான்கும், தீ, சுவையொழித்த மூன்றும், காற்று, நிறமொழிந்த இரண்டும், விண், பரிசமொழிந்த ஒன்றுமாகவுடையன என்பதாம். ஈண்டுக் காலம், திசை, ஆன்மா, மனம் என்ற நான்கின் இயல்பு காணப்படவில்லை. ஆன்மாவும் மனமும் ஏனைப் பூதங்களைப் போலத் தொகுதிப்பொருள் என்றும், இவற்றுள் ஆன்மா ஒழிந்த ஏனையெட்டும் சேய்மை யண்மை செயற்படல் முதலிய வியல் பினவென்றும், மனமும் ஆன்மாவும் ஆகாயமும் திசையும் காலமும் அணுகாரியமென்றும், காரணமாகிய அணுக்கள் எளிதிற் புலப்புடுவன வல்லவென்றும், மனம், அணுவடிவிற் றாயினும் தன்னினின்றும் ஒன்றுந் தோன்றுதற் கேதுவாகாதென்றும், ஆகாயம், வியாபியாயினும் ஒலியைத் தன்னின்றும் தோற்றுவிக்குமென்றும் கூறுவர். மேலும், ஆன்மா ஒன்றல்ல பலவென்றும், ஒவ்வொன்றிற்கும் தனித்தனி சிறப்பு (விசேடம்) உண்டென்றும், இஃது உணருந்தன்மைத்தாயினும் மனத்தோடும் உடம்போடும் கூடினாலன்றி ஒன்றையு முணரமாட்டதென்றுன், ஒவ்வோரான்மாவும் மனத்தோடு கூடியே பல்வகைப் பிறப்புக்களையு மெடுக்குமென்றும், வடக்கு கிழக்கு முதலியவாகக் கூறப்படும் இடவகைக் கேதுவாகியது திசையென்றும், காலம் நித்தியமென்றும் "அதீதாதி வியவகாரவேது" (தருக் சங். 15) வென்றும்கூறுகின்றனர்.

252--6.  ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை - ஓசையும் பரிசும் நிறமும் நாற்றமும் சுவையும் என்பனவும்; மாசில் பெருமை சிறுமை வன்னை மென்னை சீர்மை நொய்மை வடிவம் என்னும் நீர்மை - குற்றமில்லாத பெருமையும் சிறுமையும் வன்னையும் மென்னையும் சீர்மையும் நொய்ம்மையும் வடிவமும் எனப்படும் பண்புகளும்; பக்கம் முதல் அநேகம் - இடம் வலம் என்ற பக்கம் மேன்மை கீழ்மை முன்மை பின்மை முதலிய பலவும்; கண்ணிய பொருளின் குணங்களாகும்-சொல்லப்பட்ட பொருள்களின் குணங்களாகும் எ - று.

ஓசை முதலியனவும் பெருனை முதலியனவும் பக்கம் முதலியனவும் குணமென ஒன்றாயடங்குமாயினும், சிற்சில வேறுபாடுடைமை பற்றி, இவற்றைப் பகுத்து "மாசில்" என்றும், "என்னும் நீர்மை" யென்றும் சிறப்பித்துரைத்தார். இனி, குணமாவது, "பிறிதொரு்