பக்கம் எண் :

11

nedunchezhiyan
 

நெஞ்சில் நிறைந்த நபிமணி
மதிப்புரைகள் வழங்கிய மாமேதைகள்
 
மாண்புமிகு கல்வி அமைச்சர்
இரா. நெடுஞ்செழியன் அவர்கள்
 

‘நெஞ்சில் நிறைந்த நபிமணி, என்னும் சீரிய தொரு நூல்மலர் என்கையில் கொடுக்கப்பட்டது. இதன் தோற்றப் பொலிவு என்கண்களைப் பெரிதும் கவர்ந்தது. இதன் இதழ்கள் ஒவ்வொன்றையும் தொட்டுவிரித்தேன் கருத்து மணங்கமழக் கண்டேன்; நுகர்ந்தேன்; வியந்தேன்; மகிழ்ந்தேன்.

கருத்து மணங்கமழும் இந்த நூல்மலரை உருவாக்கியவர் மௌலவிபாஜில் ஜீ.எம்.எஸ்.சிராஜ் பாக்கவி அவர்கள் ஆவார் என்பதை அறிந்து பேருவகை கொண்டேன். அவரை வாழ்த்தி, வரவேற்றுப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் அரும்பிற்று. அதன் விளைவே இச்சொற்றொடர்கள்.

உலகைத் திருத்திய சீரியோரில் சிறந்த மிகச்சிலருள் ஒருவராக எண்ணப்பட்டுப் போற்றப்பட்டுப் பாராட்டப்பெற்று, வரவேற்கப்பட்டு, வாழ்த்தப்படும் நபிகள் நாயகம் அவர்களின் அரும்பெருஞ்சிறப்புக்களைத் தெள்ளத்தெளிய எடுத்துக்கூறும் வகையில் இந்த நூல் அமைந்திருப்பது பெருமகிழ்வூட்டுகிறது.

அறியாமை இருளில் அமிழ்ந்து கிடந்த மக்களுக்கு அறிவொளியூட்டி அவர்களைத் தேற்றிக் காட்டுமிராண்டிகளாக இருந்த மக்கட் கூட்டத்தை நாகரிகச் செப்பமுடையவர்களாக்கி, விலங்கு உணர்ச்சியோடு உழன்றுகிடந்த மக்களைப் பண்பாடுடையவர்களாகச்செய்து, மனிதப் பண்பற்று வெறியுணர்ச்சியோடு உலாவிக் கொண்டிருந்த மக்கள் அன்புடையவர்களாக - அருளுடையவர்களாக - ஈவுடையவர்களாக - இரக்கம் உடையவர்களாக - மதிப்புடையவர்களாக ஆக்கிச் செயற்கரிய பலவற்றைச் செய்துகாட்டிய நபிகள் நாயகத்தின் வரலாறு இந்நூலாசிரியரால் மிகச் சிறப்பான முறையில் விளக்கிக் காட்டப்பெறுகிறது.

நபிகள் நாயகத்தின் அரும்பெருஞ் சிறப்புக்கள், அவர்களது அறிவின் தெளிவு, ஆற்றலின் திறமை, அன்புள்ளம் அவர்கள் ஏழை எளிய மக்களிடம் காட்டிய இரக்கம்; மக்கள் நன்னெறியில் செலுத்த அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள், அவற்றின் காரணமாக ஏற்பட்ட எதிர்ப்புக்கள், கொள்கையையும் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்ட அவர்கள் போராடிய போராட்டங்கள், கொள்கையை நிலை நாட்டுவதிலே அவர்கள் கண்ட வெற்றி, அவர்கள் வகுத்துத்தந்த வாழ்க்கைநெறி, உலகை உய்விக்கும் முறை ஆகியவற்றை பாக்கவி அவர்கள் அழகாகவும் அருமையாகவும் விளக்கிக்காட்டும் திறன் பாராட்டிப் பாராட்டி இன்புறுதற்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது.

இந்நூலிலே இனிய, எளிய, அரிய, அழகுத் தமிழ்ச்சொற்கள் துள்ளிக் குதித்து களிநடனம் புரிகின்றன. இந்நூலைப் பாக்கவி அவர்கள் கவிதை நடையில் தர முன்வந்திருப்பதே அவரது அரும்பெரும் முயற்சிக்கும் திறமைக்கும் சீரிய எடுத்துக்காட்டாகும். கவிதைகள் ஆற்றொழுக்கென ஓடிக் கொண்டிருக்கின்றன. சொற்கள் குளிர்ச்சி பொருந்திய குற்றாலத்தின் நீர்வீழ்ச்சியெனத் தங்கு தடையின்றி, இனிய ஓசை நயத்துடன் துள்ளிக் குதிக்கின்றன. ஆசிரியர் எடுத்துக்கொண்ட பொருள் மிகமிகத் தெளிவாக விளக்கிக் காட்டுகிறார். இனிய, எளிய, அழகிய உவமைகளை ஆசிரியர் ஆங்காங்கு கையாளும் பாங்கு மிகவும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது. வருணனைகள் நெஞ்சைக் கவருவனவாக அமைந்திருக்கின்றன.

நபிகள் நாயகத்தைப்பற்றி நெஞ்சிற்குச் சொல்லி நபிமணியை நெஞ்சில் நிறையும்படி செய்வதில் ஆசிரியர் ஸிராஜ் அவர்கள் வெற்றி கண்டுவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பாக்கவி அவர்களின் ஆற்றல் வாழ்க! அவர் முயற்சி வளர்க! அவர் தொண்டு வெல்க!

இந்நூலைத் தமிழ்ப் பெருங்குடிமக்கள் அனைவரும் படித்துப் பயன் பெறுவார்களாக!

சென்னை-5
10-9-1963
இரா. நெடுஞ்செழியன்