பக்கம் எண் :

17

Dinakaran
நெஞ்சில் நிறைந்த நபிமணி
விமர்சனங்கள்
 
கொழும்பு 18-5-66உ “தினகரன்” அளித்த
முழுப்பக்க விமர்சனத்தின் ஒரு பகுதி
விமர்சனம் அளிப்பவர் : ம. கா. முஹம்மத் அபூபக்கர், B.A.
இருபதாம் நூற்றாண்டின்
இணையற்ற இலக்கியப் படைப்பு

ஒப்பற்ற பரிசிலொன்றைக் கைம்மாறு கருதாது தமிழுலகுக்கு வழங்கியுள்ள மாமேதையாம் இக்கவிஞருக்குச் சமுதாயத்து மக்கள் இறுக்கவேண்டிய கடனும் ஒன்றிருக்கிறது. கவிஞரைப் பாராட்டுவதன் மூலம் மட்டும் அக்கடன் தீர்ந்துவிடாது. அன்னார் மேற்கொண்டுள்ள அரும்பணி வளர ஆக்க ரீதியில் நாம் உதவியளிக்காவிடில், எம்மைப் பார்த்துஉலகம் “நன்றி கொன்ற மகன்” எனக்கூறி எள்ளிநகையாடும்.

15 ரூபாயென்ன? 150-ம் - 1500-ம் கொடுத்து வாங்கத் தகுதியுடைய நூல் இது. ஒருவர் கையில் இந்நூலின் பிரதி ஒன்று இருப்பது கொண்டே அவருக்குப் பெருமை ஏற்பட வழிவகுக்கும் வனப்பு வாய்ந்தது . சமுதாயத்து மக்கள் தம் கடமையைத் தவறாது புரிகின்றனராவென்பதை அவதானிக்க எங்கும் நிறைந்த பரம்பொருள் ஒன்று இருக்கிறது என்பதை மறந்துவிடாது, இன்றே சென்று நூலின் பிரதி ஒன்றேனும் வாங்கிக் கடனிறுப்பீராக!

ஐந்தாண்டுக் காலம் அயராதுழைத்து அற்புதக் காவியச் சிற்பம் ஒன்றை நம்முன் வைத்துள்ள ஆலிம் கவிஞர் மௌலானா சிராஜ் பாக்கவியார் அவர்களுக்கு எது செய்தாலும் அது அவர் செய்துள்ள செயற்கரிய செயலுக்கு ஈடாகமாட்டாது. இறைவனின் இன்னருளும் எம்பெருமானாரின் கிருபா கடாட்சமும் அன்னாருக்கு உண்டாவதாக!

             நெஞ்சில் நிறைந்த நபிமணி வாழ்க !
             செஞ்சொற் கவிஞர் சிராஜ் வாழ்க !