பக்கம் எண் :

19

Ennurai
நெஞ்சில் நிறைந்த நபிமணி
என்னுரை
 
          வள்ளல் திருநபியின் வாழ்வதனைக் கற்போரின்
          உள்ளம் இனிக்கும் உயிரினிக்கும் - விள்ளும் நூல்
          பாவினிக்கும் ஆய்வோர் அறிவினிக்கும் பாடிடுவோர்
          நாவினிக்கும் என்றிடுவேன் நான்  

தனித்தவனாகவும் தனக்குத் துணை இணை அற்றவனாகவும் தண்ணருளைப் பொழியும் பேரன்பினனான இறைவனின் இன்னருளால் உதித்த அண்ணல் நபியவர்களின் அழியாத புகழ் வாழ்வைப் பாடிப் பரவும் பனுவல்கள் பாரெங்கும் உள்ளன. அகில மொழிகள் அனைத்திலும் அவர்களின் அரும்புகழ் இசைக்கப்படுகின்றது.

மூதுலகின் மூத்த மொழிகளில் முன்னணியில் நிற்கும் நமது வண்ணத் தமிழிலும் வள்ளல் நபியின் புகழிசைக்கும் பல நூல்கள் தோன்றியுள்ளன. உரையில் பல, உயர்ந்த கவிதையில் பல என பன்னூல்கள் பைந்தமிழில் உள்ளதைப் படித்த எனக்கு நாயகம் அவர்களின் புகழை நாமும் நாவார இசைக்க வேண்டும் என்ற நாட்டம் எழுவதுண்டு. ஆனால் ஒப்பற்ற ஒரு மனிதப் புனிதரின் மாண்புறு வாழ்வைப் பாடும் பக்குவமும் அறிவும் நமக்குண்டா? என்ற வினாவும் அந்த வேட்கையுடன் இணைந்து எழுந்து நிற்கும். இறுதியில் இறைவனின் இன்னருள் நாட்டம் என்னை இப்பணியில் ஈடுபடுத்தவே ஏறத்தாழ ஐந்தாண்டுகளாக முயன்று இப்பணியை முடித்துள்ளேன்.

இப்பணியில் ஈடுபட்டு நான் நிறைவான முறையில் இக்காவியத்தை முடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளைச் சிறிதாக நேயர்களுக்கு விளக்கியாக வேண்டும்.

ஒரு சாதாரண வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டினும் எத்தனையோ கடமைகளும் பொறுப்புணர்வுகளும் நூலாசிரியனுக்கு வந்து சேர்ந்துவிடுகின்றன. அப்படி இருக்க இறைவனின் இன்னருட் தூதராக வந்த மகோன்னத மாநபியின் வாழ்க்கை வரலாற்றை முறையாக, நிறைவாக, பிறழாத நிலையில் எழுதுவது என்பது எத்துணைப் பெரிய காரியமென்பதை நான் விளக்க வேண்டுவதில்லை.

வான்நபியின் வாழ்க்கை ஒரு வாரிதிபோல் பரந்து விரிந்து கிடக்கும் வனப்புடையது. எந்தப் பகுதியை எடுத்தாலும் எல்லையில்லாத வியப்பையும் பண்பையும் உணர்த்தக் கூடியது. முழுமைபெற்ற அப்புனித வாழ்வின் பொலிவும் பொருளும் வாழ்விற்கு வாய்த்த ஒரு அழகிய முன்மாதிரி. அவைகளை எல்லாம் எப்படியும் ஒன்று திரட்ட வேண்டும் என்ற வேட்கையில் முதலில் நான் பல நூல்களைப் புரட்டலானேன். தமிழ் நூல்களைப் புரட்டலானேன். தமிழ் நூல்களைவிட அரபு நூல்களும் உருது பாரசீக நூல்களுமே எனக்குப் பெரிதும் பயன்பட்டன. நான் அதிகமாக இம்மொழி நூல்களில் குறிப்புக்களைச் சேகரிக்க முற்பட்டதர்க்குக் காரணமும் உண்டு. நமது நற்றமிழில் நாயகமவர்களைப்பற்றி அரபு, உருது, பாரசீக தொடர்பில்லாமல் அம்மொழி நூல்களைக் கேட்ட அளவில் ஆக்கிய நூல்களில் சில வரலாற்றுப் பிழைகள் நிகழ்ந்துள்ளமை இந்நூலில் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்கும் புதிய பல சம்பவங்களைப் பாடவேண்டும் என்ற வேட்கையினாலுமே அவ்வாராய்ச்சியில் ஈடுபட்டேன். அந்த உழைப்பை இந்நூலில் பல இடங்களில் நீங்கள் காணமுடியும் என்று நம்புகிறேன்.

நமது தமிழில் அண்ணல் நபியவர்களின் அரும் வாழ்வைப் பாடும் இலக்கியங்கள் பல தோன்றியுள்ளன. இந்நூலும் அவ்வரிசையிலே வருவது ஆயினும் முன்னைய காப்பியங்களைவிட இந்நூலில் இழையோடி நிற்கும் எளிமை இந்நூற் கற்றோர்க்கும் மற்றோர்க்கும் உரிமை யாக்கிவிடும் என்று நம்புகின்றேன்.

எளிமை வனப்பை ஏந்தி நிற்க வேண்டும் என்பதற்காக நான் நூலின் மொழி வனப்பைக் குறைத்துவிட விரும்பவில்லை. தமிழின் நீர்மைக்கேற்ப முடிந்தவரை தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த முயன்றுள்ளேன். அரபு, வடமொழிச் சொற்கள் அதிகம் பயிலாமல் காவியத்தைப் பாடவேண்டும் என்ற வேட்கையை நான் இறுதிவரை கடைப்பிடித்துள்ளேன்.

வள்ளல் நபியின் வாழ்வோவியத்தைப் பாடப்பாட வாயெல்லாம் தித்திக்கும்; மனமெல்லாம் தித்திக்கும் என்னும் நிலையை நானே அனுபவித்துள்ளேன். அவர்கள் வாழ்வுக்கும் வாக்குக்கும் உள்ள தொடர்பை விளக்கும் வேட்கையில் நாயகம் அவர்களின் நன்மொழிகள் பலவற்றையும் பாடி இணைத்துள்ளேன். இந்நூலைப் பாடப் புகுந்ததிலும் பாடி முடித்ததிலும் இந்நூலைப் படைத்துவக்கும் நிலையினிலும் எத்தணையோ அற்புதங்கள் இறையருளால் நிகழந்துள்ளன என்பதை யானே அறிவேன். அவற்றுள் ஒன்று நூலை முழுமையாகப் பாடி முடித்த பின்னர் பாக்களின் தொகையைப் பார்க்கும் பொழுது 3663 ஆக அமைந்து நின்றது, இதில் என்ன விந்தை என்றால் இருபக்கமும் ஒரே எண் அறுபத்து மூன்றாக 36-63 அமைந்து இருப்பதேயாகும். நமது வள்ளல் நபியின் திருவயது அறுபத்து மூன்றல்லவா? அது எப்படியோ பாக்களின் எண்ணாக அமைந்தது எனக்கே விந்தையாக இருக்கின்றது.

இந்நூலின் கவிதை அமைப்பைப் பொறுத்தவரை சில செய்திகளை விளக்கவேண்டும். எளிமை, எளிமை, எளிமை, இன்னும் எளிமை; அகவே அழகு என்ற பொன்மொழியை நான் யாப்பைப் பொறுத்தவரை கையாண்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். வலிய யாப்பில், அதிக இக்கட்டான சந்திப்புணர்ச்சிகள் இல்லாமல், அறுசீர் விருத்தத்தில் இரண்டு அடிகளாக இசையுடன் பாடுவதற்கேற்பப் பாடியுள்ளேன். இத்துறையில் உள்ள இடர்ப்பாட்டை யாப்பறிவு உள்ளவர்கள் நன்கு அறியமுடியும் என்று நம்புகின்றேன்.

பொதுவாக இந்நூல் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகில் ஒரு புது இலக்கியமாக - பொது இலக்கியமாகவே நுழைந்தாலும் நானிலம் போற்றும் நாயகம் அவர்களின் நல்லொளி வாழ்க்கையில் எனக்கெழுந்த பக்தியில்தான் இந்நூல் உருவானது என்பதை அடக்கத்துடன் இந்நூலாசிரியன் என்ற முறையில் கூறிக்கொள்கின்றேன்.

இந்நூலை வரவேற்றுப் போற்றி மிகுந்த அன்புடன் சான்றுரைகள், மதிப்புரைகள், முன்னுரை வாழ்த்துரைகளை அருளிய மாமேதைகள் எல்லோருக்கும் எனது முயற்சிகள் அனைத்திற்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த பெருமக்கள் அனைவருக்கும் எனது எளிய நன்றியை உரிமையாக்கிக் கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்நூல் என்றென்றும் நின்று தமிழுக்கு ஒரு உயிர் இலக்கியமாகி நபிகள் நாயகம் - ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் - அவர்களின் அரும்புகழை இசைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதே எனது வேட்கை. எல்லாம் வல்ல பேரருளாளனின் பெருங்கருணை இதற்குச் செய்வதாகுக ! ஆமீன் !

சென்னை-1
5-11-65
ஸதக்கத்துல்லாஹ் ஸிராஜ் பாக்கவி