பக்கம் எண் :

20

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இருளை அகற்றிய இன்னொளிச் செல்வர்

பெற்றோர் சிறப்பு

வர்த்தகத் துறையில் ஓங்கி
     வாழுவோர் என்று சொல்லும்
அர்த்தங்கொள் குறைஷி யர்தம்
     அருங்குடி ஒன்றாம் நெஞ்சே


அக்குடி விளக்க மென்ன
     அரும்பெரும் புகழை யுற்று
மக்கத்தில் அப்துல் லாதான்
     மகிழ்ந்திருந் தாரே நெஞ்சே


ஓப்பிலா அழகி னோடும்
     உயர்குணப் பொலிவி னோடும்
அப்துல்லா திகழ்ந்து மக்கள்
     அகமதைக் கொண்டார் நெஞ்சே


சீர்மிகு மதினா தன்னில்
     ‘ஜுஹரா’க்கு டும்பத் துள்ளே
ஏர்மிகு ஆமி னாதான்
     ஏற்றமாய் ஒளிர்ந்தார் நெஞ்சே


அறிவும்நல் அன்பும் ஒன்றாய்
     அமர்ந்தொளி தருதல் போல
நெறிமிகு அவர்க ளும்தான்
     நெஞ்சத்தால் கலந்தார் நெஞ்சே


அன்புடன் அறிவும் சேர்ந்த
     அதிசயம் என்று சொல்ல
இன்பமக் கா,ம தீனா
     இணைந்ததும் என்னே நெஞ்சே


ஆமினா அப்துல் லாவின்
     அன்புறு வாழ்வின் மாண்பை
நாமிங்கு மொழிக ளாலே
     நவில்வதும் எளிதோ? நெஞ்சே


கற்பெனும் பெயர தொன்றும்
     கவினதன் முழுமை யொன்றும்
நற்பெரும் தவத்தா லொன்றாய்
     இணைந்ததே நலமாய் நெஞ்சே


கொம்புடன் இணைந்து நின்று
     கொழுமையால் புவியை ஈர்க்கும்
செம்மைசேர் பண்பைக் காட்டி
     ஆமினா திகழ்ந்தார் நெஞ்சே


அன்பின்நல் ஆற்ற லாலே
     அகமொத்து நின்ற அந்த
இன்புறு மக்க ளின்நல்
     இன்னொளி பெரிதே நெஞ்சே


பாலொடு தேன்க லந்த
     பான்மையை உரைப்ப தாமோ
சீலஞ்சேர் அவர்கள் வாழ்வை
     செப்புதற் கெளிதோ? நெஞ்சே


நகத்தோடு சதையென் றோதும்
     நயமிலா உவமை தன்னை
அகமொத்த அவர்க ளுக்கே
     அறைந்திட லாமோ? நெஞ்சே

இவ்வாறே இன்ப மிக்க
     இல்லறம் தன்னில் நின்று
செவ்விய பணிக ளாற்றும்
     சிறப்புற்ற போது நெஞ்சே


வாணிபப் பணிக ளாலே
     வண்புகழ் ஸிரியா வுக்கே
ஆணெழில் மன்னர் செல்ல
     ஆமினா பிரிந்தார் நெஞ்சே


ஸிரியாவில் வாணி பத்தால்
     சிறிதுநாட் தங்கி விட்டுப்
பிரியாத அப்துல் லாதான்
     பிரியமாய் வந்தார் நெஞ்சே


விரைந்தவர் திரும்புங் காலை
     விரவிய நோயி னாலே
நிறைந்தஆழ் துன்ப முற்று
     நின்றதும் என்னே நெஞ்சே


மைத்துனர் இல்லஞ் சென்று
     மதினாவில் இருந்த காலை
இத்துயர் வருமென் றேதான்
     எண்ணிய துண்டோ? நெஞ்சே

அப்துல்லா உடலில் வந்த
     ஆற்றல்சேர் நோயி னாலே
இப்புவி வாழ்வை அன்னார்
     இழந்ததும் என்னே நெஞ்சே


வரும் வரும் என்றே எண்ணி
     வழியிலே விழியாய் நின்ற
அருங்கனி ஆமி னாவின்
     அவலமும் சிறிதோ? நெஞ்சே


செய்தியை அறிந்த பின்பு
     செந்தீயில் புழுவைப் போல
உய்விலா நிலையில் அந்த
     உயர்மணி துடித்தார் நெஞ்சே


எழும்,விழும், ஏங்கி ஏங்கி
     என்செய்வேன் என்று ரைத்தே
அழு,பின் ஓயும், பின்பும்
     அழுமதைச் சொல்லேன் நெஞ்சே


கருவுற்ற கன்னி நானோ
     கண்ணீரில் மிதக்க லானேன்
ஒருதுணை இல்லேன் என்றே
     உரைத்ததும் என்னே நெஞ்சே

சிறகிலாப் பறவை போலத்
     திகைத்தனர் அம்மா அந்த
அறமகள் உற்ற துன்பை
     அறைந்திடல் எளிதோ நெஞ்சே


இருதிங்கள் கழிந்த பின்னர்
     இணையிலாக் குழந்தை யொன்றைப்
பெருமையாய் ஈன்றெ டுத்துப்
     பேரின்பம் கொண்டார் நெஞ்சே


வையகம் வியந்து போற்ற
     வானகம் மகிழ்ச்சி கொள்ள
மெய்யொளிக் குழந்தை வந்த
     மேன்மையும் என்னே நெஞ்சே


பெருந்திரு வாக வந்த
     பெருமைசேர் மகவு தன்னை
அரும்‘முஹம் மது’வென் றன்றே
     அழைத்துளம் மகிழ்ந்தார் நெஞ்சே


இன்னொளிச் செல்வத் தோடும்
     இணையிலா அழகி னோடும்
முன்னோனைத் தொழுத வண்ணம்
     முஹம்மதும் பிறந்தார் நெஞ்சே


குப்புற்றுத் தவழ்ந்த செல்வம்
     குறுகுறு என நடக்க
அப்பெருங் காட்சி தன்னில்
     ஆமினா ஆழ்ந்தார் நெஞ்சே


ஆயினும் அவருள் ளத்தில்
     அழுந்திய துன்பந் தன்னால்
தாயெனும் நிலையில் கூடத்
     தவித்திட லானார் நெஞ்சே


குமுதவாய் பொழியும் அந்தக்
     குதலையக் கேட்டுக் கேட்டே
அமைதியைச் சிறிது காண
     ஆமினா மகிழ்ந்தார் நெஞ்சே


சிறப்பினை அணியாய்ப் பூண்ட
     செவிலியாம் ஹலிமா வின்பால்
சிறுமகன் வளர்வ தற்குச்
     சென்றனர் அறிவாய் நெஞ்சே


ஹலிமாவின் இடத்திற் சென்றே
     அகங்கவர் முஹம்ம தும்தான்
பொலிவுடன் வளர்ந்து வந்த
     பொற்பதும் என்னே நெஞ்சே


செவிலியின் இடத்தில் நான்கே
     ஆண்டுகள் சென்ற பின்பு
செவிகுளிர் மொழிக ளோடு
     சிறுவரும் வந்தார் நெஞ்சே


கண்டனர் ஆமி னாதான்
     களித்தனர்; அழகில் வீழ்ந்தார்;
கொண்டனர் இன்ப மென்றே
     கூறநான் விழையேன் நெஞ்சே


கணவரின் அழகு யாவும்
     கண்ணனை முஹம்ம தின்பால்
குணமுடன் ஒளிரக் கண்டு
     குளிர்ந்ததும் என்னே நெஞ்சே


மகனிடம் உள்ள தான
     மாண்எழில் சாயல் வந்தே
அகமதில் அவர் நினப்பை
     அளித்ததும் வியப்போ நெஞ்சே

மணவாளர் நினப்பி னாலே
     மைந்தனின் முகத்தை நோக்கித்
தணியாத துன்பத் தோடு
     தவித்தழு தாரே நெஞ்சே


காணரும் அழகைக் கொண்ட
     கணவர்மண் ணறையை மைந்தன்
காணவே வேண்டு மென்ற
     கருத்தினைக் கொண்டார் நெஞ்சே


அண்ணனை வழியில் கண்டே
     ஆறுதல் பெறுவ தற்கும்
எண்ணியே மதினா மீது
     எழுந்தனர் ஒன்றாய் நெஞ்சே


அடிமைப்பெண் துணையி னோடும்
     அரும்பெரும் செல்வ ரோடும்
குடிவிளக் காமி னாதான்
     கூம்பியே சென்றார் நெஞ்சே

இடுக்கண்கள் யாவும் தாண்டி
     இன்னுயிர்க் கணவ ருக்கு
எடுத்தகல் லறையக் கண்டே
     ஏங்கியே நின்றார் நெஞ்சே


கல்லறை அதனைக் காணக்
     கணவரின் எண்ணம் தோன்ற
கல்லாக ஆமி னாவும்
     காட்சிதந் தாரே நெஞ்சே


கணவரும் தாமும் வாழ்ந்த
     காட்சிகள் ஒவ்வொன் றாக
இணந்துமே இதயந் தன்னில்
     எழுந்ததும் என்னே நெஞ்சே


மைந்தனின் இடத்தில் தந்தை
     மரணத்தை எடுத்து ரைக்கச்
சிந்தையில் தளர்வே எய்தி
     சிறுவரும் நின்றார் நெஞ்சே

ஆறுதல் பலவு ரைத்தும்
     அன்னையின் அமுத வாக்கால்
தேறுதல் இல்லா வண்ணம்
     தேம்பியே அழுதார் நெஞ்சே


மைந்தனின் முகத்தைப் பார்ப்பார்
     மண்ணறை தன்னைப் பார்ப்பார்
நைந்த தம் நிலைய எண்ணி
     நிலத்தில்நீர் வடிப்பார் நெஞ்சே


அன்னையின் துயரைக் கண்டே
     அகமதில் துன்ப முற்ற
சின்னஅக் குழந்தை கண்ணீர்
     சிந்திய தென்னே நெஞ்சே


தரையினில் கண்ணீர் கொட்ட -
     தலையது குனிந்த வண்ணம்
அரற்றியே அழுத அன்னை
     அவலமும் பெரிதே நெஞ்சே


அன்னையின் தலை நிமிர்த்தி
     அமைதியாய் மைந்தன் சொன்ன
அன்புறு மொழியைக் கூட
     அவர்கேட்க வில்லை நெஞ்சே


அன்னையின் இடத்தில் அந்த
     அழகுடைச் சிறுவர் சொன்ன
இன்னுரை தன்னைச் சொன்னால்
     இன்னல்தான் பெருகும் நெஞ்சே


அன்னையே! ‘என்று தந்தை
     அன்புடன் வருவார்?’ என்றே
இன்மொழி பாலர் கேட்க
     இன்னலுற் றாரே நெஞ்சே


என்னரும் தாயே! இந்த
     இடத்தினில் நானும் தங்கி
என்னரும் தந்தை கூட
     இருக்கின்றேன் என்றார் நெஞ்சே


அம்மொழி தன்னைக் கேட்ட
     ஆமினா நிலையச் சொல்ல
எம்மனோர்க் கியலு மாமோ?
     எடுத்துரைத் திடுவாய் நெஞ்சே


தாயினைச் சேய ணைத்துத்
     தாங்கொணாத் துக்கங் கொள்ளச்
சேயினத் தாய ணைத்துச்
     செயலிழந் தாரே நெஞ்சே


ஆருமில் நிலையில் மைந்தன்
     அலறிய நிலையக் கண்ட
சீர்மிகு ஆமி னாதான்
     சிவந்தழு தாரே நெஞ்சே


கூம்பிய முகத்தி னோடும்
     குவிந்தகண் பார்வை யோடும்
தேம்பியே சிறுவர் நின்ற
     திகைப்பதும் என்னே நெஞ்சே