பக்கம் எண் :

21

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி

நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இருளை அகற்றிய இன்னொளிச் செல்வர்

தாயைப் பிரிந்தார்

ஆமினா அதனைக் கண்டே
     அவலத்தில் வீழ்ந்த தைத்தான்
நாமிங்கு ரைப்ப தென்றால்
     நானிலம் ஏங்கும் நெஞ்சே


தந்தையின் உருவைக் காணாத்
     தனையனின் முகத்தி னோடும்
அந்தமாய் நின்ற அந்த
     அறையையும் பார்த்தார் நெஞ்சே


ஒருமாத காலம் ஆங்கே
     ஒருவாறி ருந்து பின்பு
திரும்பியே மக்கா செல்ல
     ஆமினா எழுந்தார் நெஞ்சே


சேயொடும் செவிலி யோடும்
     சென்றுகொண் டிருக்கும் போது
நோய்க்கிறை யாகி அன்னை
     நொந்ததும் என்னே நெஞ்சே


பாலையின் நடுவே அந்தப்
     பாவையர் மணியின் துன்ப
ஓலத்தைக் கேட்ப தற்கே
     ஓர்துணை உண்டோ? நெஞ்சே


செவிலிதான் அந்த வேளை
     செய்தபல் சிகிச்சை யாவும்
அவியாத தீயின் நெய்யாய்
     ஆனதும் என்னே நெஞ்சே


தாயினைத் தவிர வாழ்வில்
     தகுதுணை இல்லா வண்ணம்
தூயஅச் சிறுவர் கொண்ட
     துயரமும் என்னே நெஞ்சே


தாய்முகந் தன்னைக் கண்ட
     தனயனின் நிலையும் அன்புச்
சேய்முகங் கண்ட தாயின்
     துயரமும் சிறிதோ? நெஞ்சே


மரணமாம் கன்னி, தன்னை
     மகிழ்வுடன் அணைப்ப தற்கு
விரைவினில் வருவ தைத்தான்
     விளங்கிக்கொண் டாரே நெஞ்சே


இறைவனின் துணையே யின்றி
     இங்குவோர் துணையும் மைந்தன்
குறையினைப் போக்கா தென்றே
     கூறிட லானார் நெஞ்சே


ஆருமில் நிலையில் ஆங்கே
     ஆமினா இறையை எண்ணிப்
பேரவ லத்தில் வீழ்ந்த
     துன்பமும் பெரிதே நெஞ்சே


இளமையில் துணை இழந்தேன்
     எண்ணிலாத் துன்ப முற்றேன்
வளமையில் நிலைதான் அந்தோ
     வந்ததேன்? என்றார் நெஞ்சே

பெற்றவோர் மகவைக் கூடப்
     பேணியே வளர்ப்ப தற்கும்
உற்றவோர் வாய்ப்பும் இங்கே
     இல்லையோ? என்றார் நெஞ்சே


தந்தையைப் பிரிந்த தோடு
     தந்தையை அறியா இந்த
மைந்தனைக் காப்பாய் என்றே
     மாத்துயர் கொண்டார் நெஞ்சே


ஆண்டவா! என்னை மௌத்தும்
     அழைத்திட நான்என் செய்வேன்?
காணரும் மைந்த னைத்தான்
     காப்பாயே! என்றார் நெஞ்சே


பேசிட முடியா வண்ணம்
     பிதற்றிய மனை விளக்கு
மாசிலா மகனை மார்பில்
     வைத்தழு தாரே நெஞ்சே

 

ஆண்டவன் காப்பான் என்றே
     அகமதில் எண்ணங் கொண்டு
மாண்புடைக் கண்க ளைத்தான்
     மூடியே மாண்டார் நெஞ்சே


மாமலர் அனைய மைந்தன்
     மனமது கலங்கி ஏங்க
மாமணி ஆமி னாதான்
     மறைந்ததும் என்னே நெஞ்சே


தாயுயிர் சென்ற பின்பு
     தாயினை நோக்கிப் பேசி
வாய்ஓய்ந்த மைந்த னுக்கு
     வார்த்தையும் உண்டோ? நெஞ்சே


பணிப்பெண்ணோ இதனைக் கண்டே
     பாகென உருகி வாடி --
தணியாத துக்கம் கொண்டு
     தவித்தழு தாரே நெஞ்சே


கண்ணீரால் கழுவி மைந்தன்
     கல்லறை அமைக்க வேண்டிப்
புண்ணுற்ற நெஞ்சத் தோடு
     புழுங்கிய தென்னே நெஞ்சே


துன்பமாம் கடலில் வீழ்ந்தே
     துடித்தஅவ் வழகு மந்தன்
அன்னைகல் லறைஅ மைத்த
     அவலமும் என்னே நெஞ்சே


தந்தைகல் லறையைக் காணத்
     தாயொடு வந்து தாய்க்கே
அந்தக்கல் லறையைக் கட்ட
     ஆனதும் என்னே நெஞ்சே


கண்களுக் கிமையைப் போலக்
     காத்ததம் அன்னை தன்னை
மண்ணுக்குள் வைக்கக் கண்டே
     மலைத்தழு தாரே நெஞ்சே


எடுத்தமண் குழிய தற்கே
     எழிலன்னை யைஅ ளித்தே
வடித்தகண் ணீரைப் பற்றி
     வார்த்தையால் சொல்லேன் நெஞ்சே


அன்னயை அடக்கம் செய்ய,
     அவனியை இழந்த தைப்போல்
அண்ணாந்து சிறுவர் வானை
     அளந்ததும் என்னே நெஞ்சே


தாயினை இழந்த கன்று
     தத்தளித் தழுவ தைப்போல்
சேய்நின்ற காட்சி தன்னைச்
     செப்புதற் கெளிதோ! நெஞ்சே


சுழல்விழி கள்இ ரண்டும்
     சொல்லொணாத் துன்பத் தாலே
அழகிய தாயைத் தேடி
     அலைந்ததும் என்னே நெஞ்சே


வானத்தை நோக்க லானார்
     வையத்தை நோக்க லானார்
மோனத்தை அன்றி அங்கு
     மற்றவை உண்டோ? நெஞ்சே


அன்னையைப் பார்க்க எங்கும்
     காணாஅச் சிறுவர் ஆங்கே
மண்ணைநீ ராட்டி நின்ற
     மாத்துயர் என்னே நெஞ்சே


தாயின்நல் மேனி தன்னைத்
     தழுவிய பொற்க ரங்கள்
காய்ந்தமண் ணறையைத் தொட்டுக்
     கசிந்ததும் என்னே நெஞ்சே


அன்புடைத் தந்தை வாய்த்த
     அன்னையை இழந்த என்றன்
துன்பத்தின் துணையில் வேறு
     துணையிலேன் என்றார் நெஞ்சே


அவலம்ஈ தென்று சொல்லும்
     அவருள்ளம் தன்னில் கொண்ட
கவலையின் பெருக்கத் தைநான்
     கழறிட லாமோ நெஞ்சே


பிறக்குமுன் தந்தை சென்றார்
     பிறந்ததும் அன்னை சென்றார்
சிறுவரின் வாழ்வு தன்னில்
     சேர்ந்ததே சோகம் நெஞ்சே


ஆறேழு வயதுக் குள்ளே
     ஆருமில் அனாதை யாகி
ஆராத துயர முற்ற
     அவர்நிலை என்னே நெஞ்சே


நீருமே நிழலும் இல்லா
     நெடியஅப் பாலை போல
யாருமில் தமது வாழ்வை
     எண்ணிட லானார் நெஞ்சே


அன்னையைப் பறிகொ டுத்த
     ‘அப்வாஉ’ எனுமி டத்தை
அன்னவர் பிரிவ தற்குள்
     அலறிய தென்னே நெஞ்சே


ஆறுதல் மொழிகள் சொல்லும்
     அன்புறு செவிலிக் கும்தான்
ஆறுதல் இல்லை யென்றால்
     அவலமும் சிறிதோ நெஞ்சே


வழியிலுள் காட்சி தன்னை
     வாஞ்சையாய் செவிலி காட்ட
விழியினால் அன்னை தன்னை
     விழைந்தவர் பார்ப்பார் நெஞ்சே


துக்கத்தைக் தூக்கும் அந்தத்
     தூய்மைசேர் பால ரைத்தான்
பக்குவ மாகத் தூக்கிப்
     பாலையுள் வந்தார் நெஞ்சே


தந்தைகல் லறையைக் காணத்
     தாமும்தம் தாயும் சென்ற
முந்தைய காட்சி எண்ண
     முகமும்மா றியதே நெஞ்சே


ஆயினும் செவிலி அந்த
     அவலத்தை நன்கு ணர்ந்து
தாயினும் இனிய சொல்லால்
     தாங்கிடு வாரே நெஞ்சே


பாலையைக் கடந்த போதும்
     பாலரின் நெஞ்சத் துள்ளே
பாலைபோல் படர்ந் திருந்த
     பரிதாபம் சிறிதோ நெஞ்சே


மக்கத்தை வந்த டைந்த
     மகனைஅன் புடனே ஏற்று
துக்கத்தைப் போக்க வல்ல
     துணையதும் உண்டோ நெஞ்சே


செவிலியும் துன்பத் தோடு
     சிறுவரைத் தூக்கி வந்தே
தவித்திடும் பாட்ட னார்பால்
     தங்கிட வத்தார் நெஞ்சே


சிந்திய கண்ணீ ரோடும்
     சிவந்த முகத்தி னோடும்
வந்தமர் பேர னுக்கு
     வாயுரை உண்டோ நெஞ்சே


மூடிய வான மென்ன
     மூரல்இல் லாத பேரன்
வாடிய முகத்தைக் கண்டு
     வருந்திய தென்னே நெஞ்சே


ஆறுதல் பலவும் சொன்னார்
     அஞ்சற்க! துணைநா னென்றே
ஆருமில் முஹம்ம துக்கே
     அருந்துணை யானார் நெஞ்சே