பக்கம் எண் :

22

NABIGAL  
நெஞ்சில் நிறைந்த நபிமணி

நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இருளை அகற்றிய இன்னொளிச் செல்வர்

பாட்டனை இழந்தார்


ஒருகுறை இல்லா வண்ணம்
     உளத்தமர் முஹம்ம தைத்தான்
பெருமையாய் வளர்த்து வந்த
     பெற்றியும் பெரிதே நெஞ்சே


சோதனை தொடர்ந்து வாழ்வில்
     சொல்லொணாத் துக்கம் தந்தே
வாதனை அளிப்ப தேதான்
     வாழ்வது போலும் நெஞ்சே


உத்தமர் முத்த லீபும்
     உடல்நல வளமி ழந்தே
மெத்தவும் வருத்த முற்றே
     மேனித ளர்ந்தார் நெஞ்சே


கண்ணுக்குள் மணியைப் போலக்
     காத்துவந் திட்ட பேரன்
எண்ணத்தால் ஏக்க முற்றே
     ஏதேதோ உரைத்தார் நெஞ்சே


எட்டாண்டு வயதை அன்னார்
     எட்டியே பிடித்த போதும்
ஒட்டிய துன்பங் கொண்ட
     உளத்தோடு நின்றார் நெஞ்சே


பக்கலில் முஹம்ம தைத்தான்
     பரிவுடன் அமர வைத்தே
துக்கத்தால் வருந்தி அங்கு
     துடிதுடித் தாரே நெஞ்சே


தன்னரும் மக்க ளுக்குள்
     தகுதியும் அன்பும் வாய்ந்த
இன்‘அபு தாலி’ பின்பால்
     இணைத்திட லானார் நெஞ்சே


முகம்மதைக் காப்ப தற்கு
     முனைந்துமே ஆர்வ முற்ற
தகவுடை அபுதா லீபின்
     தன்மையும் என்னே நெஞ்சே


பேரனை அவர்பால் தந்து
     பிரியமாய் வளர்க்கச் சொல்லிப்
பாரினை நீத்தே அன்னார்
     பறந்திட லானார் நெஞ்சே


பாட்டனை இழந்தே அங்கு
     பார்ப்பவர் உருகு வண்ணம்
வாட்டமுற் றாரே செல்வர்
     வாழ்க்கையும் என்னே நெஞ்சே


உற்றவர் எவரு மின்றி
     உள்ளத்தில் சோர்ந்த போதும்
மற்றவர் இறைவ னாலே
     மகிழ்ச்சியைக் கொண்டார் நெஞ்சே

இறையருள் வலிமை யாலும்
     இதயத்தின் ஒளியி னாலும்
குறையிலும் குறையே இன்றி
     கோமகன் வளர்ந்தார் நெஞ்சே

 

தன்னிடம் வந்த மைந்தன்
     தாய்,தந்தை அற்றோர் என்றே
அன்புடன் அபுதா லீபும்
     அணைத்துளம் மகிழ்ந்தார் நெஞ்சே


அன்பினில் தாயைப் போல
     அணைப்பினில் தந்தை போல
இன்புடன் அபுதா லீபும்
     இருந்துவந் தாரே நெஞ்சே


எங்கவர் சென்ற போதும்
     ஏற்றமாய் அழைத்துச் சென்றே
அங்குள புதுமை பற்றி
     அறைந்திட லானார் நெஞ்சே


ஆவும்நற் கன்றும் போல
     அன்புடன் இணைந்தி ருந்த
மேவிய காட்சி தன்னை
     விளக்கிட லாமோ நெஞ்சே