பக்கம் எண் :

30

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இலட்சியம் வகுத்த இன்னருட் கொண்டல்

கொள்கை காத்த குவலயத் தலைவி
 

என்துறம் தயக்க முற்றே
     எழிலொளி பெற்ற செல்வர்
சொன்னதும் என்னே நெஞ்சே
     சோர்வதும் என்னே நெஞ்சே


நான்கேட்ட வாச கத்தை
     நம்புவோர் உண்டோ? என்றே
தேன்மொழிச் செல்வர் ஆங்கே
     திகைத்திட லானார் நெஞ்சே


கொள்கை காத்த வீரப்பெண்மணி

அஞ்சற்க! என்று சொல்லி
     அறிவொளிக் கதிஜா ‘வல்லோன்
செஞ்சொலை ஏற்றேன்’ என்றே
     செப்பிய தென்னே நெஞ்சே


“மனிதர்கள் வணங்கு தற்கிங்
     கொருவனே; அவனின் தூதர்
புனிதமிக் குடையீர் நீவிர்”
     என்றவர் புகன்றார் நெஞ்சே


இறையாட்சிக் கொள்கை தன்னை
     இன்புடன் முதலில் ஏற்ற
முறைமைபெண் ணுலகத் திற்கே
     முற்றிலும் சொந்தம் நெஞ்சே


ஏகதத் துவமென் றோதும்
     எழிலுடைக் குழந்தை தன்னை
தாகமுற் றேவ ளர்க்கும்
     தாய்பெற்ற தென்னே நெஞ்சே


நங்கையர் உலகின் சார்பாய்
     நலமிகு கதிஜா கொண்ட
மங்களப் பிரமா ணத்தின்
     மாண்பதும் என்னே நெஞ்சே


இறைவனின் கொள்கை தன்னை
     இன்புடன் ஏற்றுக் கொண்ட
நிறைமதி யாலே அண்ணல்
     நெஞ்சுவந் தாரே நெஞ்சே


குணக்கரம் நீட்டி அன்று
     குடும்பத்தைக் கொண்ட தைப்போல்
இணங்கியே கொள்கை ஏற்க -
     இன்பத்துள் ஆழ்ந்தார் நெஞ்சே


ஈருடல் உயிரொன் றாக
     இருந்தஅவ் விருவ ரைத்தான்
பேரருள் ‘இஸ்லாம்’ மார்க்கம்
     பிணைத்துக்கொண் டதுவே நெஞ்சே


வரக்காவும் அந்த நேரம்
     வந்தெதிர் நிற்க அண்ணல்
இறைமறை பெற்ற தைத்தான்
     இயம்பிட லானார் நெஞ்சே


இயம்பிய தூதர் தம்மை
     இன்புடன் வரக்கா நோக்கி
நயமிகு மறையின் மாண்பை
     நவின்றிட லானார் நெஞ்சே


ஒப்பிலாக் குணம்ப டைத்த
     உயர்வழி காட்டி யே!நீர்
இப்பெரும் பேறு பெற்ற
     இன்பதும் என்னே! என்றார்


இறைவன்மேல் ஆணை யாக
     இயம்பிடு கின்றேன் நீவிர்
இறைமறை பெற்ற தூதே
     என்றுரைத் தாரே நெஞ்சே


‘ஓதுக!’ என்ற சொல்லின்
     உயர்துவக் கத்தால்* ‘குர்ஆன்’
மேதினி யைக் கவர
     மிளிர்ந்ததே என்றார் நெஞ்சே

* குர்ஆன்-வல்ல இறைவன் அல்லாஹ்வினால் ஜிப்ரீல் என்னும் வானவர்க் கரசர் வாயிலாக இறுதித் தூதர் முஹம்மது நபி பெருமானார் அவர்களுக்கு அருளப்பட்ட பொதுமறை.


ஓதுக! என்ற தான
     உயர்வழி முகிழ்த்தெ ழுந்த
கோதிலா மறையின் மாண்பும்
     கொஞ்சமோ! என்றார் நெஞ்சே


அறிவுக்கே ஆக்கம் நல்கும்
     அருமறை வாச கத்தின்
செறிவினைச் செப்பு தல்தான்
     சிறப்பாகும் என்றார் நெஞ்சே


படிப்பதன் பயனை இந்தப்
     பாரகம் உணர்ந்தே உய்யத்
துடிப்புறு சொல்லைக் கொண்டே
     துவங்கிய தென்றார் நெஞ்சே


நேர்த்திசேர் இஸ்லாம் உம்மால்
     நிறைவுறும் என்று ரைத்தே
ஆரவே தழுவி வாழ்த்தி
     அகன்றிட லானார் நெஞ்சே


இவ்வித நிலையில் மீண்டும்
     இன்னொளி உருவம் தோன்றிச்
செவ்விய குர்ஆன் ஓதி
     நின்றதே சீராய் நெஞ்சே


தொழுகையின் முறையை இங்கு
     துவக்கிவைக் கின்றேன் என்னைத்
தழுவுவீ ரென்றே ஜிப்ரீல்
     சாற்றிட லானார் நெஞ்சே


நான்தொழும் முறையை நீவிர்
     நன்றாகக் கூர்ந்து நோக்கிப்
பான்மையாய்த் தொழுவீ ரென்றே
     பகர்ந்திட லானார் நெஞ்சே


வானவர் தொழுத வண்ணம்
     வள்ளலும் *‘தொழுகை’ செய்தே
மாணெழில் ஒளியைக் கொண்டு
     மலர்ந்ததும் என்னே நெஞ்சே


இவ்வாறு நபிக ளாரும்
     இன்கொள்கைத் துணவி யாரும்
செவ்விய தொழுகை தன்னில்
     சிறந்தொளிர்ந் தாரே நெஞ்சே


அண்ணலார் இறைய ளித்த
     அரு‘நபி’ப் பட்டங் கொள்ளப்
பெண்மணி கதிஜா இல்லில்
     பேரொளி கண்டார் நெஞ்சே


உளமொத்த அவர்க ளின்பால்
     உயர்‘இஸ்லாம்’ ஊன்றி நின்ற
வளமதும் என்னே நெஞ்சே!
     வனப்பதும் என்னே நெஞ்சே


மூன்றாண்டு காலம் அன்று
     முகிழ்த்தெழு இஸ்லாம் அந்தப்
பான்மைசேர் குடும்பத் திற்குள்
     பல்கிய தென்னே நெஞ்சே


மூடத்தைத் தகர்த்தெ றிந்த
     முதற்பெரும் குடும்ப மாகிப்
பீடுடன் நின்ற அன்னார்
     பெருமையும் என்னே நெஞ்சே