பக்கம் எண் :

35

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

துன்பம் சுமந்த துணிவுடை வீரர்

அபூதாலிப் பிரியுதல்

நூற்றியோர் முஸ்லிம் மக்கள்
     நொந்துமே பகைவ ராலே
வேற்றிடம் பெயர்ந்து சென்ற
     வேதனை கேளாய் நெஞ்சே


நபிவழி ஏந்தி நின்ற
     நல்லஅம் மக்கள் எல்லாம்
அபிஸீன நாட்டைத் தேர்ந்து
     அடைக்கலம் சென்றார் நெஞ்சே


சென்றிடும் செய்தி கேட்டே
     சினமுடைப் பகைவ ரெல்லாம்
கொன்றிடும் எண்ணங் கொண்டே
     கொதித்தெழுந் தாரே நெஞ்சே


எழுந்தஅப் பகைவர் ஆங்கே
     ஏகிடு வோரைக் கொல்ல
விழுந்தெழுந் தோடி வந்த
     விந்தையைச் சொல்வேன் நெஞ்சே

முஸ்லிம் அகதிகள் 101-ல் ஆண்கள் 83, பெண்கள் 18


பகைவர்கள் நெருங்கு முன்னம்
     பாய்ந்துமே முஸ்லிம் மக்கள்
தகவுடன் கப்ப லேறித்
     தாவிட லானார் நெஞ்சே


கப்பலில் முஸ்லிம் மக்கள்
     கடந்தனர் என்று கேட்டு
செப்பரும் கோபங் கொண்டே
     சீரியே எழுந்தார் நெஞ்சே


தூதொன்றை விட்டே அந்தத்
     தூயகோன் நெஞ்சை மாற்றி
ஆதர வில்லா தாக்க
     அவர்நினைத் திட்டார் நெஞ்சே


அகதிக ளுந்தான் அந்த
     அபிசீன நாட்டி னிற்குள்
பகைவர்கள் வலையில் தப்பிப்
     பாங்குடன் சேர்ந்தார் நெஞ்சே


தூயகோன் - நஜ்ஜாஷிமன்னர்


அகதிகள் நாங்கள் - என்றே
     அன்புடை மன்ன னின்பால்
அகத்தினைத் திறந்து சொல்லி
     ஆறுதல் பெற்றார் நெஞ்சே


குறைஷியர் குழுவோர் நல்லோர்
     கொண்டிடும் பரிசி லோடு
அறம்வளர் அபிசீ னாவை
     அடைந்திட லானார் நெஞ்சே


அமைச்சர்கள் தம்மைக் கண்டே
     அன்புடன் பரிசு நல்கி
எமைமன்னர் காணும் வண்ணம்
     உதவுக! என்றார் நெஞ்சே


ஓரிரு நாளில் அன்னார்
     உதவிகள் தம்மைப் பெற்று
சீர்மைசேர் மன்ன வைக்குச்
     சென்றிட லானார் நெஞ்சே


மன்னர்நஜ் ஜாஷி யின்பால்
     மடைதிறந் ததுவே என்னை
புன்னுரை பகர்ந்த தைத்தான்
     புகன்றிட லாமோ :நெஞ்சே


தொன்மைசேர் கொள்கை தம்மைத்
     தொலைத்திட வேண்டு மென்றே
துன்பத்தை நபிக ளுந்தான்
     தருகின்றார் என்றார் நெஞ்சே


உருவத்தை நீக்க வேண்டி
     உபதேசம் செய்வ தானார்
ஒருவனே அல்லாஹ் என்றே
     உரைக்கின்றார் என்றார் நெஞ்சே


குறைஷியர் வாக்கை யெல்லாம்
     கூர்ந்துமே கேட்ட மன்னர்
நிறைவிலா நெஞ்சத் தோடு
     நிலைகுலைந் தாரே நெஞ்சே


தயங்கிய நிலையில் மன்னன்
     திகழ்ந்ததைக் கண்ட துந்தான்
அயரற்க! ஆய்வோம் என்றே
     அமைச்சர்கள் சொன்னார் நெஞ்சே


குறைஷியர்க் குதவி யாகக்
     கூறவே வேண்டும் என்று
நிறைவுளம் கொண்டு நின்ற
     நீசமும் என்னே நெஞ்சே


அமைச்சர்கள் --‘சரணாய் வந்த
     அப்பெரும் மக்கள் தம்மை
அமைவுடன் குறைஷி யர்பால்
     அனுப்புவோம்’--என்றார் நெஞ்சே


மன்னர்அக் கருத்தைக் கேட்டு
     முஸ்லிம்கள் தம்மை என்றன்
முன்னாலே அழைப்பீ ரென்று
     மொழிந்திட லானார் நெஞ்சே


அகத்தொளி பெற்ற அந்த
     அகதிகள் அனைவ ருந்தான்
முகத்தொளி வீசும் வண்ணம்
     முன்வந்து நின்றார் நெஞ்சே


கண்பார்த்தே கணிக்கும் அந்தக்
     கலைத்திறன் படைத்த மன்னன்
பண்பார்ந்த அகதி கட்காய்ப்
     பரிவுகொண் டாரே நெஞ்சே


அடைக்கல மாக வந்த
     அன்புளீர்! குறைஷி யர்க்கு
விடையென்ன சொல்வீர்? என்றே
     வினவிட லானார் நெஞ்சே


முஸ்லிம்கள் மன்ன னின்பால்
     முகமதில் பெருமை தன்னை
விஸ்வாசத் தோடு சொல்லி
     விளக்கிட லானார் நெஞ்சே


கம்பீர மாய்எ ழுந்தே
     கனிவுடை *ஜஃப ருந்தான்
செம்மைசேர் மார்க்கம் பற்றி
     செப்பிய தென்னே நெஞ்சே

* ஜஃபர் - JAFAR - அபூதாலிப் அவர்களின் இளயமைந்தர்

ஓரிறைக் கொள்கை தன்னை
     உவப்புடன் ஏற்றுக் கொண்டோம்
பாரெலாம் ஒன்றே என்றே
     வாழ்கின்றோம் என்றார் நெஞ்சே


பெண்களை அடிமை யாக்கும்
     பீழையில் மீட்சி யுற்றுப்
பண்பட்ட வழியைக் கொண்டே
     பாங்குற்றோம் என்றார் நெஞ்சே


பழமையில் ஆழ்ந்தி டாத
     பாங்கினைப் பெற்ற தாலே
இழந்தனம் நாட்டை; உம்மை
     நாடினோம் என்றார் நெஞ்சே


வல்லவன் அருளால் குர்ஆன்
     வான்மைறை தன்னைப் பெற்ற
நல்லவர் நபிகள் மாண்பை
     நவிலுவ தாமோ என்றார்


இறையவன் நினைத்த வேளை
     இன்மறை நபியின் மீது
முறையாக வருமென் றாங்கே
     மொழிந்திட லானார் நெஞ்சே


முன்மறை பெற்ற வர்க்கும்
     முடிவுநாள் வரையுள் ளோர்க்கும்
இன்மறை பிறக்கு தென்றே
     இயம்பிட லானார் நெஞ்சே


எம்முடை நபிமு ஹம்மத்
     ஏற்றத்தை எடுத்து ரைத்தால்
இம்மட்டோ பெருகு மென்றே
     இயம்பிட லானார் நெஞ்சே


அனைத்தையும் கேட்ட மன்னர்
     அன்புடை ஜஃப ரின்பால்
இனிப்புடை குர்ஆன் தன்னை
     இயம்புக! கேட்போம்! என்றார்


தெய்வீக இசையில் கேட்போர்
     தியங்கியே உருகும் வண்ணம்
மெய்யொளிர் மறையி சைத்த
     மேன்மையும் என்னே நெஞ்சே


சொன்னயத் தோடு நல்ல
     பொருள்நயம் வாய்ந்த அந்த
இன்மறை தன்னை ஆங்கே
     இசைத்திட லானார் நெஞ்சே


கேட்டவர் உள்ளந் தன்னைக்
     காந்தமாய் இழுக்கும் வண்ணம்
நாட்டமாய் ஓதி நின்ற
     நலமதும் என்னே நெஞ்சே


மாமறை யதனை ஆங்கு
     மதிப்புடை ஜஃபர் ஓத
தூமறை யால்அ மைதி
     துலங்கிய தென்னே நெஞ்சே


இசையுடன் மறையை ஒத
     இறைமொழி யதனைக் கேட்டோர்
அசையாது அவையின் கண்ணே
     அமர்ந்திருந் தாரே நெஞ்சே


ஓதிடும் இசையால் நெஞ்சின்
     உட்புகும் மறையின் மாண்பை
ஓதுவ தாமோ! நெஞ்சின்
     உட்கலந் தினிக்கும் நெஞ்சே


தொடர்ந்தவர் ஓத, ஓத
     தூமனங் கொண்டோ ரெல்லாம்
இடந்தனில் அமர்ந்த வண்ணம்
     இதயங்கொ டுத்தார் நெஞ்சே


வான்மறை ஓதக் கேட்டு
     வசமதை இழந்த மன்னன்
தேன்விழு வண்டைப் போலத்
     தியங்கிய தென்னே நெஞ்சே


மன்னவர் மறையைக் கேட்டு
     மகிழ்ச்சியாம் கடலில் வீழ்ந்தே
என்றுமில் லாத இன்பை
     எய்திட லானார் நெஞ்சே


பேரவை அமைதி கொள்ள
     பிறகுஅம் மன்னர் ஆங்கே
சீருடன் எடுத்து ரைத்த
     செம்மொழி கேளாய் நெஞ்சே


உண்மைசேர் ஜஃப ரே!நீர்     
     ஓதிய மறையைக் கேட்டேன்;
உண்மையை உணர்ந்தே னென்றே
     உரைத்திட லானார் நெஞ்சே


ஏசுநா தர்க்க ளித்த
     எழில்மறை *இன்ஜீ லைநான்
மாசின்றிக் கற்றே னென்றே
     மன்னவர் சொன்னார் நெஞ்சே


* இன்ஜீல் - பைபிள் Bible என்னும் மறை


அம்மறை தன்னை ஈந்த
     அருட்கட லனையான் இந்தச்
செம்மறை தந்தான் என்றே
     செப்பிட லானார் நெஞ்சே


இன்ஜீலென் றோது கின்ற
     இணையிலா மறையும் சொன்ன
இன்மறை இதுதான் என்றே
     இயம்பிட லானார் நெஞ்சே


இரண்டையும் இறைவன் ஒன்றாய்
     இன்புடன் தந்தான் போலும்
திரண்டஇம் மறையின் மாண்பை
     செப்புவ தாமோ! நெஞ்சே


வையகம் போற்ற வந்த
     வள்ளல்நும் தலைவர் ஆமாம்!
ஐயமே இல்லை என்றே
     அறைந்திட லானார் நெஞ்சே


அன்புள்ளம் கொண்டோய்! நீரும்
     அடுத்துவந் திட்டோர் தாமும்
என்னுடை நாட்டின் கண்ணே
     இருப்பீர்கள்! என்றார் நெஞ்சே


இம்மியும் உங்க ளுக்கே
     இன்னல்கள் ஏற்ப டாமல்
செம்மையாய்க் காப்போம் என்றே
     செப்பிட லானார் நெஞ்சே


இறைமறை அதனை என்பால்
     இனிமையாய் வந்தே ஓத
இறைஞ்சியே கேட்க லானேன்
     *வருக!நீர் என்றார் நெஞ்சே


*மன்னர் விருப்பினுக்கேற்ப ஜஃபர் தினமும் வந்து திருமறை ஓதினார்: ஒருநாள் மனமுவந்து ஜஃபர் முன்னிலையில் மன்னர் இஸ்லாமில் இணந்து விட்டார். இந்த நற்செய்தியை அறிந்த அண்ணலார் அகமகிழ்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.


குறைஷியர் மற்று முள்ள
     குருக்களும் அமைச்சர் தாமும்
குறைபட்ட நெஞ்சத் தோடு
     குமைந்திட லானார் நெஞ்சே


குறைஷியர் கூட்டம் நோக்கி--
     குணநபி யாரைப் பெற்றும்
குறையுற்றீர் போற்றா வண்ணம்--
     என்றவர் கூற லானார்


நல்லுளம் வாய்ந்த இந்த
     நலமுடை முஸ்லிம் மக்கள்
அல்லவை செய்யும் உம்பால்
     அணுகிடார் என்றார் நெஞ்சே


பரிசெலாம் ஏற்க மாட்டேன்;
     பாவத்தைச் சுமக்க மாட்டேன்
விரைவுடன் செல்வீ ரென்றே
     விளம்பிட லானார் நெஞ்சே


குறைஷியர் முகத்தி லெல்லாம்
     கோபத்தின் குறியே தோன்ற
விரைவுடன் திரும்ப லானார்;
     வேதனை கொண்டார் நெஞ்சே


தொங்கிய முகத்தி னோடும்
     தோல்வியின் வருத்தத் தாலும்
தங்கிட மனமே யின்றித்
     தாவிட லானார் நெஞ்சே


கோபம் கொதித்தெழுந்தது


குறைஷியர் திரும்பி வந்த
     கொடுமையைக் கேட்ட மற்ற
குறைஷியர் கொண்ட கோபம்
     கொஞ்சமோ கேளாய்! நெஞ்சே


கூட்டத்தைக் கூட்ட லானார்
     கூட்டத்தில் அபுஜ ஹில்தான்
வேட்டெழும் சிங்கம் போல
     விளம்பிய தென்னே நெஞ்சே


குறைஷிய மக்காள்! உம்பால்
     குவிந்துள சக்தி எங்கே?
அறைகின்றேன் எழுமின்! என்றே
     ஆர்த்திட லானான் நெஞ்சே


முகம்மதின் கொட்டந் தன்னை
     முனந்துநாம் அடக்கா விட்டால்
இகமதில் வாழ்ந்து மென்ன
     எழுக!என் றானே நெஞ்சே


கொட்டஞ்செய் முகம்ம தின்நல்
     தலையதைக் கொண்டு வந்தால்
ஒட்டகம் நூறுண் டென்றே
     உரைத்திட லானார் நெஞ்சே


இவ்வுரை கேட்டி ருந்த
     இளைஞராம் ஒருவர் தோன்றி
அவ்வணம் நானே செய்தால்
     அளிப்பீரா? என்றார் நெஞ்சே


நிச்சயம் பரிச ளிப்பேன்;
     நீசெல்க! என்று ரைக்க
நச்சனை கோபத் தோடு
     நடந்திட லானார் நெஞ்சே


வாளொடு வீரர் சென்ற
     காட்சியைக் கண்ட மக்கள்
தாளிட்டு மூடிக் கொண்ட
     தன்மையும் என்னே நெஞ்சே


எதிருற வந்த தோழன்
     எங்குபோ கின்றாய்? என்ன
சதியதை எடுத்து ரைத்துத்
     தடுக்காதே என்றார் நெஞ்சே


அம்மொழி கேட்ட தோழன்,
     அவரைநீ கொல்லு முன்னம்
உம்முடைத் தங்கை யைநீ
     மாற்றுக என்றான் நெஞ்சே

வீட்டினில் குறையைத் தேக்கி
     வைத்துக் கொண் டேவீ ணாக
நாட்டினைத் திருத்தல் என்றும்
     நகையாகும் என்றான் நெஞ்சே


பரிசுக்குத் தலையைக் கொய்யப்
     பாய்ந்திடும் வீர! உன்றன்
பரிதாபம் அதனைப் போலப்
     பார்த்திலேன் என்றான் நெஞ்சே


செவியில்அம் மாற்ற மும்போய்ச்
     சேரஅவ் விளைஞ ருக்கோ
அவித்திடும் தீயாய்க் கோபம்
     அடர்ந்தெழுந் ததுவே நெஞ்சே


முகம்மதின் நெறியில் *தங்கை,
     மைத்துனர் வீழ்ந்தார் அந்தோ
பகை!பகை! என்றே சொல்லிப்
     பறந்திட லானார் நெஞ்சே

கோபத்தின் உருவ மாகிக்
     கொதித்தெழும் அவரைக் கண்டோர்
ஆபத்து! ஆபத்து தென்ன
     அலறிய தென்னே நெஞ்சே


விழிகளில் எரிப றக்க
     வீறுவீ றென்று செல்ல
வழியினில் வந்தோ ரெல்லாம்
     வழிவிடச் சென்றார் நெஞ்சே


வேட்டெழும் சிங்கம் போல
     விரிகனல் ஒளியெ ழுப்பிப்
பாட்டையில் சென்ற அந்தப்
     பயங்கரம் கொடிதே நெஞ்சே


தங்கையின் வீடு சென்றார்
     தாளிட்ட கதவைக் கண்டார்
அங்கெழும் இசையக் கேட்க
     ஆவல்தான் கொண்டார் நெஞ்சே


இல்லத்துக் குள்ளே *‘கப்பாப்’
     என்றுசொல் அறிஞர் குர்ஆன்
மெல்லிசை எழுப்பி இன்பில்
     மிதந்திட லானார் நெஞ்சே


கதவினை இடிக்க லானார்
     கலக்கத்தைக் கொண்ட தங்கை
இதயத்தில் அச்ச முற்றே
     இன்னலால் துடித்தார் நெஞ்சே


ஓதிய மறையை அன்னார்
     ஒதுக்கமாய் மறைத்து வத்தே
யாதுறும்? என்றே அஞ்சி
     இருந்ததும் என்னே நெஞ்சே


நடுங்கிய நிலையில் என்ன
     நடக்குமோ? என்றே அஞ்சி
ஒடுங்கியே மறந்து நின்றே
     உட்தாளைத் திறந்தார் நெஞ்சே

பாய்ந்தனர் புயலைப் போல
     பாவைஎன் றெண்ணா வண்ணம்
தீய்த்திடும் கோபத் தாலே
     திட்டிட லானார் நெஞ்சே


ஓரிறைக் கொள்கைக் கும்மை
     விற்றுவிட் டீரா? உன்னைப்
பாரிதோ என்று காய்ந்தே
     பார்த்திட லானார் நெஞ்சே


பேசவே முடியா வண்ணம்
     பேரவ லத்தில் ஆழ்ந்தே
வீசிய கோபத் தீயின்
     வெம்மையும் என்னே நெஞ்சே


தாங்கொணாக் கோபத் தாலே
     தங்கையைக் கணவ ரோடே
ஓங்கியே இழுத்த டித்த
     கொடுமையை உரைப்ப தாமோ?


குருதியாம் கடலுக் குள்ளே
     குற்றுயி ராக வீழ்ந்தே
இருவரும் கிடந்த தைத்தான்
     இயம்புவ தாமோ? நெஞ்சே


அப்பெரும் துன்பத் துள்ளும்
     அருமறை நெறியைப் போற்றும்
ஒப்பரும் காட்சி யாலே
     உளமது சோர்ந்தார் நெஞ்சே


துன்புறும் நிலையில் கூட
     துயரமே இல்லா வண்ணம்
வன்மைசேர் உரைக ளாற்றும்
     வியப்பினில் ஆழ்ந்தார் நெஞ்சே


உயிரது பிரிந்த போதும்
     உறுதியில் மாறார் என்றே
அயர்ந்தவர் தெளிவு பெற்றும்
     ஆய்ந்திட லானார் நெஞ்சே


அறிவுடைத் தங்கைக் கிந்த
     அதிசய மான தான
உறுதிவந் ததுஎவ் வாறோ?
     உணர்கிலேன் என்றார் நெஞ்சே


இட்டதைச் செய்ய வல்ல
     இதயத்தைப் பெற்ற தங்கை
கட்டுண்ட தெதனால்? என்றே
     கலங்கிட லானார் நெஞ்சே


நம்பணி மறுத்தி டாத
     நல்லவள் உள்ளம் மாற்றும்
அம்மொழி எதுவோ? என்றே
     ஆய்ந்திட லானார் நெஞ்சே


உளமதை மாற்று மந்த
     உரைகளில் ஏதோ சக்தி
உளதென எண்ணி எண்ணி
     உணர்ந்திட லானார் நெஞ்சே


அவ்வித சக்தி ஏதும்
     அம்மொழிக் கில்லை யாயின்
செவ்விய தங்கை நெஞ்சம்
     சிதறுமோ? என்றார் நெஞ்சே


அதனுடைச் சக்தி தன்னை
     ஆய்ந்துநாம் பார்ப்போ மென்றும்
இதயத்தில் எண்ணங் கொண்டே
     இயம்பிட லானார் நெஞ்சே


தங்கையை மீண்டும் நோக்கி
     தணியாத வியப்பி னோடே
அங்கவர் உரைத்த வற்றை
     அறைந்திடக் கேளாய் நெஞ்சே


ஓதிய மறையை நானும்
     உற்றுநோக் கிடுவேன்; நீங்கள்
ஓதிய மறையை என்பால்
     உவந்துமே தருக என்றார்


எவ்விதம் அளிப்ப தென்றே
     எண்ணத்தில் தெளிவில் லாமல்
எவ்விதச் செயலு மின்றி
     ஏங்கியே தங்கை நின்றார்


மிக்கவும் கலக்க முற்று --
     மேன்மைசேர் மறையைத் தந்தால்
அக்கண மேஅ ழிப்பார்
     என்றவர் அஞ்சி நின்றார்


கொடுத்திட அச்ச முற்ற
     குறியினைக் கண்ணால் கண்டும்
‘எடுத்துநான் அழியேன்’ என்றே
     இளைஞரோ இயம்ப லானார்


பாராளும் மறையை நீவிர்
ஓது முன்னர்
நீராட வேண்டு மென்றே
     நீதமாய்த் தங்கை சொன்னார்


தங்கையின் உரையின் வண்ணம்
     தண்ணீரில் மூழ்கி வந்தே
அங்கவர் மறையை ஏந்தி
     ஆய்ந்திட லானார் நெஞ்சே


நம்பிக்கை கொண்டே ஆங்கு
     நன்மறை குர்ஆன் தன்னை
செம்மைசேர் குரலைக் கொண்டே
     செப்பிட லானார் நெஞ்சே


படித்தஅவ் வாச கத்துள்
     பதிந்துள சொல்லின் மாண்பு
துடிப்பினைத் தந்த தென்று
     தொடுத்துரைப் பேனோ நெஞ்சே


விந்தைசேர் மறைதான் தந்த
     விரிபொருள் தன்னைக் கண்டு
சிந்தையைப் பறிகொ டுத்தே
     திகழ்ந்திட லானார் நெஞ்சே


கனலுமிழ் கண்கள் எல்லாம்
     கனிவுடைக் கண்க ளாகிப்
புனல்வரு அருவி போன்றே
     பொலிந்ததும் என்னே நெஞ்சே


உள்ளத்தை உருக்கி ஆங்கே
     உள்ளொளி ஏற்றும் அந்த
வல்லவன் மறையின் மாண்பை
     வாயினால் உரைப்ப தாமோ


உள்ளத்தில் பெரிதும் மாறி
     ஒப்பிலாத் தங்கைக் கேதன்
நல்லன்பைப் பார்வை மூலம்
     நல்கியே நோக்க லானார்


உள்ளத்தில் அன்பே பொங்க
     உயர்முகம் களிப்பில் பொங்க
வெள்ளமாய்ப் பெற்ற இன்பால்
     வியந்திட லானார் நெஞ்சே


அவருடைய உள்ளந் தன்னை
     அருமறை கவர்ந்தி ழுத்த
உவப்புறு காட்சி யாலே
     உலகையே மறந்தார் நெஞ்சே


வணங்குதற் குரியோன் அல்லாஹ்
     வழங்கிய நபிமு ஹம்மத்;
‘இணங்குவீர்’ என்ற எண்ணம்
     எழுந்துதம் வியப்போ நெஞ்சே


உள்ளத்தில் மாற்ற முற்ற
     உவப்பினில் தங்கை யின்பால்
நல்கினர் மறையை; அந்தோ!
     நடந்திட லானார் நெஞ்சே


அண்ணனின் அகம் புகுந்த
     அருமறை ஆற்றல் தன்னை
எண்ணியே பார்த்துத் தங்கை
     எக்களித் தாரே நெஞ்சே


முகம்மதைக் காண வேண்டி
     முனைந்தவர் நடக்க லானார்
அகமதில் மாற்ற முற்ற
     அவர்செயல் என்னே நெஞ்சே


அண்ணலோ அன்பு மிக்க
     *அர்க்கமின் இல்லந் தன்னில்
இன்னுரை பகர்ந்த வண்ணம்
     இருந்திட லானார் நெஞ்சே

* அர்க்கம் - அண்ணலார் மார்க்கம் தழுவிய அன்புறு தோழர்.


கருவிய தோற்றத் தோடு
     காளையாம் ஒருவர் கையில்
உருவிய வாளைக் கொண்டு
     வருவதை உரைத்தார் நெஞ்சே


இறைவனின் நாட்ட மின்றி
     ஏதுமே நடப்ப தில்லை
குறையுற வேண்டாம் என்றே
     குணநபி மொழிந்தார் நெஞ்சே


இவ்வாறு பேசுங் காலை
     இளைஞரும் வரவே அந்தச்
செவ்விய நபித்தோ ழர்கள்
     சிந்தைக லங்கி நின்றார்.


கதவினைச் சாத்த லானார்;
     காளையோ தட்ட லானார்
பதறியே நின்ற அன்னார்
     நிலையதைப் பகர்வ தாமோ?


கலக்கமில் அண்ணல் ஆங்கே
     “கதவினைத் திறக்க” ... என்றே
உளமதில் அச்ச மின்றி
     உரைத்திட லானார் நெஞ்சே


இளைஞரோ அமைதி யாக
     இல்லத்தின் உள்ளே வந்தார்
இளைஞர்யார் என்றே அண்ணல்
     இலகுவாய் நோக்க லானார்

இளைஞர்அவ் ‘வுமரே’ என்றும்
     இருந்தவர் இயம்ப லானார்
இளைஞரோ நாய கத்தின்
     எழிலதில் வீழ்ந்தார் நெஞ்சே


அண்ணலின் ஆணைக் காக
     அனைவரும் காத்து நிற்க
அண்ணலோ கோப மின்றி
     அன்புடன் பேச லானார்


உமரே!உம் உள்ளந் தன்னை
     உணர்ந்தனன் அச்சம் வேண்டாம்
அமருக! என்றே சொல்லி
     அறிவுரை தந்தார் நெஞ்சே


மெய்ம்மையை அறிந்தி டாமல்
     வெறுமையாய் எத்த னைநாள்
பொய்ம்மையில் களிப்பீ ரென்றே
     புகன்றிட லானார் நெஞ்சே


ஓரிறை என்று சொல்லும்
     ஒப்பிலாக் கொள்கை தன்னை
நேருறை ஏற்று வாழும்
     நெஞ்சங்கொள்! என்றார் நெஞ்சே


உபதேசம் கேட்ட பின்போ
     உமரவர் நபிய நோக்கி
அபிமானத் துடனே சொன்ன
     அருமுரை கேட்பாய்! நெஞ்சே


அண்ணலே! தாங்கள் சொல்லும்
     அருளுடை மார்க்கந் தன்னை
எண்ணியே இங்கு வந்தேன்
     ஏற்க! என் றாரே நெஞ்சே


உங்களைக் கொல்வ தற்றே
     உருவிய வாளைக் கொண்டேன்;
தங்களால் அருமை இஸ்லாம்
     தழுவினேன் என்றார் நெஞ்சே


திருமறை படித்த தாலே
     திருந்திய உள்ளத் தின்கண்
அருமணி வாக்கும் ஊன்ற
     அகமும்மா றியதே என்றார்


பகைவிட்டு வந்தேன் தூதே!
     பாலொளி வீசும் உங்கள்
நகைமுகம் மேலும் என்னை
     நட்பினில் ஆக்கு தென்றார்


அல்லவை செய்வ தற்கே
     அகமொத்து வந்தேன் என்னை
நல்லாற்றில் சேர்த்தீர் என்றே
     நவின்றதும் என்னே நெஞ்சே


சூளுரை உரைத்த வண்ணம்
     சூழ்ந்துமே கொல்ல வந்தேன்
வாளினை நழுவ விட்டு
     வணங்கிநிற் கின்றேன் என்றார்


வாளேந்தி வந்தோ ருக்கும்
     வாய்மையாம் நெறியைக் காட்டித்
தாளேந்தும் வண்ணம் செய்த
     தன்மையும் பெரிதே என்றார்


அல்லாஹ்வின் கருணை தன்னை
     அனைவரும் கண்டு ணர்ந்தே
நல்லுளத் தோடு சொன்ன
     நயனுரை என்னே நெஞ்சே


வீரரைப் பலரும் வாழ்த்த
     விண்ணிறைத் தூதர் மார்பில்
ஆரவே தழுவி நின்ற
     அதிசயம் என்னே நெஞ்சே


அண்ணலின் நெஞ்சத் தோடே
     அன்புள்ள உமரின் நெஞ்சம்!
வண்ணமாய் இணைந்த தைத்தான்
     வாழ்த்தச்சொல் உண்டோ? நெஞ்சே


மிஞ்சிய அன்பின் வெள்ள
     மேன்மையைக் கண்டோ ரெல்லாம்
நெஞ்சொடு நெஞ்ச ணைத்து
     நெகிழ்ந்திட லானார் நெஞ்சே


உமருடை உள்ளம் மாற்றி
     உறுதுணை யாக்கி வைத்தான்
எமதுநல் அல்லாஹ் என்றே
     இறைதூதர் கூற லானார்


உமரவர் இஸ்லாம் மார்க்கம்
     ஊன்றினார் என்ற செய்தி
இமைப்பொழுது க்குள் மக்கம்
     எங்கும்சென் றதுவே நெஞ்சே

காட்டுத்தீ யதனைப் போல
     கலக்கிய செய்தி யாலே
வீட்டுக்கு வீடு கூட்டம்
     விரைந்ததும் என்னே நெஞ்சே

பகைவர்கள் கூட்டத் துள்ளே
     பலமுடை அபுஜ ஹீலின்
அகமதும் சோர்ந்த தென்றால்
     அடுத்ததைச் சொல்வேன்? நெஞ்சே

ஊரெலாம் ஓய மக்கள்
     உள்ளங்கள் துன்பில் ஆழ
ஆரவா ரங்கள் இன்றி
     அமைதியே எங்கும் நெஞ்சே


நாற்பதாம் நிலையில் அந்த
     நல் ‘உமர்’ இணைய இஸ்லாம்
ஏற்றத்தை, நிறைவு தன்னை
     ஏற்றதும் என்னே நெஞ்சே


உமரவர் இஸ்லாம் மார்க்கம்
     ஊன்றிய தாலே ஆங்கே
அமர்பல வென்ற தைப்போல்
     ஆனந்தங் கொண்டார் நெஞ்சே


முன்னிலும் பன்ம டங்கு
     முஸ்லிம்கள் ஆர்வங் கொண்டு
நன்மைசேர் கொள்கை தம்மை
     நாட்டிட லானார் நெஞ்சே


பகிரங்க மாக ‘கஃபா’
     பேரருள் ஆல யத்துள்
மகிமைசேர் அல்லாஹ் வைத்தான்
     வணங்கிட லானார் நெஞ்சே


நாயகம் தொழுகைக் காக
     நடந்துமே செல்லும் அந்தத்
தூயநற் காட்சி தன்னைத்
     தொடுத்திட லாமோ நெஞ்சே


இருபக்கம் உமரும் அந்த
     இணையில்*‘ஹம் ஸா’வும் காக்க
பெருமையாய் அண்ணல் சென்ற
     பேரெழில் என்னே நெஞ்சே

* ஹம்ஸா - அண்ணலாரின் மற்றுமொரு பெரிய தந்தை

ஆலயத் துள்ளே சென்று
     அமைதியாய் மக்க ளுக்குக்
கோலஞ்செய் கொள்கை தம்மைக்
     கொடுத்ததும் என்னே நெஞ்சே


தோல்விமேல் தோல்வி கண்ட
     துடுக்குடை குறைஷி யர்கள்
மேல்எழும் கோபத் தீயில்
     மேலும்நொந் தாரே நெஞ்சே


ஆயிரம் வழிகள் கண்டும்ள் கண்டும்
     அண்ணல்தாம் வெற்றி காண
ஆயிற்று! ஆயிற் றென்றே
     அகமுடைந் தொடிந்தார் நெஞ்சே


குறைஷியர் தலைவர் எல்லாம்
     கூட்டமாய்க் கூடி ஆங்கே
மறையுடை முஸ்லிம் தம்மை
     விலக்கியே வைப்போம் என்றார்


வர்த்தகம், பேச்சு வார்த்தை
     வாய்த்தநல் உறவில் எல்லாம்
நிர்ப்பந்த மாய் விலக்க
     நினைத்திட லானார் நெஞ்சே


முகம்மது வழியில் செல்வோர்
     முகத்தினில் விழிக்க வேண்டாம்
பகையவர் உறவை நீக்கிப்
     பார்ப்போம்என் றுரைத்தார் நெஞ்சே


கொடுப்பதும் இல்லை; அன்னார்
     கொடுப்பதை ஏற்ப தில்லை
எடுப்போம்இம் முடிவை என்றே
     எல்லோரும் சொன்னார் நெஞ்சே


முடிவதைக் கேட்ட தாலே
     முறையிலாக் குறைஷி யர்தாம்
அடிமன மகிழ்ச்சி யாலே
     ஆர்த்தெழுந் தாரே நெஞ்சே


முகம்மதைத் தள்ளி வைக்கும்
     முடிவினை அறிக்கை யாக்கி
அகமகிழ்ந் திடவே அன்னார்
     ஆடிட லானார் நெஞ்சே


அறிக்கையைக் கஃபா என்னும்
     ஆலய முற்றந் தன்னில்
உரிமையாய்க் கட்டி வைத்தே
     உவகைகொண் டாரே நெஞ்சே


அறிக்கையின் வாயி லாக
     அனைவர்க்கும் முடிவு தன்னை
அறிவித்துக் கட்டுப் பாடாய்
     அகன்றிட லானார் அன்னார்


பேசவும் கூடா தென்றே
     பிரித்துமே வைத்து - முன்னாள்
நேசத்தைக் கொன்ற அந்த
     நீசமும் என்னே நெஞ்சே


பலவற்றில் தப்பிக் கொண்டார்
     பார்ப்போம்நாம் இதிலே என்றே
கலகத்துக் காரர் எல்லாம்
     களித்ததும் என்னே நெஞ்சே


சிக்கினர் வலையில் ஆமாம்
     சீரழிந் திடுவார் என்றே
கெக்கெக்கே என்று தீயோர்
     கிளத்திய தென்னே நெஞ்சே


எதிரிகள் எல்லாம் -- ‘முஸ்லிம்
     எல்லோரும் வீழ்வார்’ என்றே
மதியினில் கோட்டை கட்டி
     மகிழ்ந்திட லானார் நெஞ்சே


திடுக்கிடும் அறிக்கை தன்னைத்
     திண்ணிய நபிகள் கண்டே
இடுக்கணில் வீழ்ந்தே மேலும்
     இதயம்சோர்ந் தாரே நெஞ்சே

முரடர்கள் ஓர்பால் ஆனார்
     முஸ்லிம்கள் ஓர்பா லானார்
இருபிரி வாக மக்கள்
     இருந்திட லானார் நெஞ்சே


முஸ்லிம்கள் எல்லாம் அண்ணல்
     முஹம்மதின் மீது கொண்ட
விஸ்வாசம் தன்னை விட்டு
     விலகிடு வாரோ? நெஞ்சே


ஆயிரம் தொல்லை வந்தே
     ஆட்டியே வைத்த போதும்
தாயினும் இனியார் பாலே
     தங்குவோம் என்றார் நெஞ்சே


அன்புறு நல்லார் போற்றும்
     அபுதாலி பவரோ மைந்த!
துன்பத்தை மறக்க நானும்
     துணையுளேன் என்றார் நெஞ்சே

பகையினை வெல்வோம் இந்தப்
     பண்பிலாச் செயலுக் காக
நகையினை இழப்ப தாமோ ?
     நடக்கட்டும்! என்றார் நெஞ்சே


நமக்கென்றே உரிமை யான
     நல்லதோர் பள்ளத் தாக்கில்
அமைதியாய்ச் சென்று வாழ்வோம்
     அயரற்க! என்றார் நெஞ்சே


மக்காவுக் கருகில் உள்ள
     வளமான பள்ளத் தாக்கை
தக்கதோர் அரணாய்க் கொண்டு
     தங்குவோம் என்றார் நெஞ்சே


வள்ளலார் தலைமை தன்னில்
     வாஞ்சையாய் முஸ்லிம் மக்கள்
பள்ளத்தாக் கதனை நோக்கிப்
     பாசமாய் நடந்து சென்றார்

ஒருமித்த உறுதி யோடே
     உத்தம முஸ்லிம் மக்கள்
பெருமகன் வழியில் கண்ட
     பேரின்பம் என்னே நெஞ்சே


“வாழினும் நபியே வேண்டும்;
     வாஞ்சையில் லாதோர் துன்பால்
வீழினும் அவரே” -- என்று
     விளம்பிய தென்னே நெஞ்சே


ஓர்குலக் காயைப் போல
     ஒன்றித்த முஸ்லிம் மக்கள்
சீர்மையாய் இயந்து நின்ற
     சிறப்பதும் என்னே நெஞ்சே


முஸ்லிம்கள் பிரிவா ரென்றே
     முனப்புடன் இருந்தோ ரெல்லாம்
விஸ்வாசத் தோடு அன்னார்
     மிளிர்ந்ததால் நொந்தார் நெஞ்சே


ஒன்றினை நினத்தோம் இங்கோ
     ஒன்றன்றோ கண்டோம்! என்று
கன்றிய நிலையில் அன்னார்
     கலங்கிட லானார் நெஞ்சே


முஸ்லிம்கள் உண்ப தற்கு
     முடியாமல் செய்ய வேண்டும்
விஸ்வாசம் அதனை யெல்லாம்
     வீழ்த்துவோம் என்றார் நெஞ்சே


அன்பிலா அபுஜ ஹில்தான்
     அண்ணலைச் சேர்ந்தோ ருக்கே
இன்னல்கள் தந்த தைத்தான்
     இயம்பிட லாமோ! நெஞ்சே


முற்றுகை இட்ட வண்ணம்
     மூர்க்கர்கள் ஒன்று பட்டுச்
சற்றுமே இரக்க மின்றி
     சஞ்சலம் தந்தார் நெஞ்சே

பெரியவர் பசியைத் தாங்கிப்
     பொறுமையாய் இருந்த போதும்
சிறியதம் குழந்தைக் காக
     சிந்தையே கலங்கி நின்றார்


கவலையில் குழந்தை கள்தாம்
     கண்ணீரைச் சிந்தும் போது
துவளாத நெஞ்சங் கூட
     துவண்டிடும் அன்றோ? நெஞ்சே

சிறுவர்கள் ஓலந் தன்னை
     சிந்தென எண்ணிக் கொண்டு
சிறுமதி யாளர் கொண்ட
     சிரிப்பதும் சிறிதோ? நெஞ்சே


எண்ணவே முடியா வண்ணம்
     எல்லோரும் கலங்கி நின்ற
இன்னலைச் சொல்லக் கேட்டால்
     இரும்பதும் உருகும் நெஞ்சே


காய்ந்ததோல் துண்டு தன்னைக்
     கருக்கியே நீரில் சேர்த்தே
ஓய்ந்திடும் பசியென் றெண்ணி
     உண்டதும் என்னே நெஞ்சே


பசியதன் கொடுமை யாலே
     பாவம்அம் முஸ்லிம் மக்கள்
புசித்திட்டார் இலையை என்றால் --
     புரியாதோ துன்பம் நெஞ்சே


இத்தகைக் கொடுமை யுள்ளும்
     இதயம்தான் சோரா வண்ணம்
உத்தம நபிகள் செய்த
     உயர்பணி கேளாய் நெஞ்சே


ஓயாது மக்க ளுக்கே
     உயர்வுடை மார்க்கம் பற்றித்
தூயவர் சொல்லி வந்த
     தூய்மையும் என்னே நெஞ்சே

வழியிலே செல்வோ ருக்கும்
     வனப்புடை மார்க்கம் பற்றி
எழிலுடன் அண்ண லும்தான்
     எடுத்தோதி நின்றார் நெஞ்சே


எண்ணிலாத் துன்பந் தன்னை
     எய்திய நிலையில் கூட
அண்ணலின் பணிநோக் கத்தை
     அறிந்திட லானார் நெஞ்சே


எத்துணைத் துன்பம் வந்து
     இடுக்கிய போதும் அந்த
உத்தம ரோடு வாழ
     உறுதிகொண் டாரே நெஞ்சே


தோன்றிய பகைவர் துன்பம்
     தொடர்ந்திட முஸ்லிம் கள்தான்
மூன்றாண்டு காலம் ஆங்கே
     முகிழ்த்திருந் தாரே நெஞ்சே


பகைவர்கள் மாறு பட்டார்
     பலகுழு வாக ஆனார்
முகம்மதின் வழியில் நின்றோர்
     முழுமையாய் ஆனார் நெஞ்சே


பகைவருள் நல்லார் சில்லோர்
     பாசத்தால் முஸ்லிம் மக்கள்
மிகவுமே வாடும் துன்பால்
     வேதனை கொண்டார் நெஞ்சே


துன்பத்தால் வருத்த முற்றோர்
     துடித்துமே பதைப தைத்தே
அன்புறு அபுதா லீபின்
     அருமரு கர்பால் சென்றார்


அன்பரே! நீரோ இங்கே
     அடிசில்கள் உண்ணு கின்றீர்
துன்பத்தால் மாமன் ஆங்கே
     துடிக்கின்றார் என்றார் நெஞ்சே


கொள்கையின் உறுதி தன்னால்
     கொடுந்துயர் படுகின் றோரை
கொள்கையால் வென்றி டாமல்
     கொடுப்பதோ துன்பம்? என்றார்


அபுஜஹில் பேச்சைக் கேட்டே
     அறமதைக் கொன்றோ மென்றால்
அபகீர்த்தி அடைவோ மென்றே
     அறைந்திட லானார் நெஞ்சே


பகைவருள் முளைத்தெ ழுந்த
     பரிவுடைக் கூட்டம் ஒர்நாள்
தகைமையாய் ‘கஅபா’ சென்று
     சாற்றிய தென்னே நெஞ்சே


மக்கமா நகரின் மக்காள்!
     மாபாவம் செய்து விட்டோம்;
தக்கஇத் தருணம் தன்னில்
     தயைசெய்வீர்! என்றார் நெஞ்சே

மக்களுள் சிலபேர் வாழ
     மற்றவர் துன்பில் ஆழல்
தக்கதோ? சொல்வீர்! என்றே
     தலைவர்தாம் கேட்டார் நெஞ்சே


உண்ணவும் வழியில் லாமல்
     ஒருசிலர் வாடு கின்றார்
தண்ணீரும் இன்றி ஆங்கே
     தவிப்பது பாவம் என்றார்


பரிவினைப் பலரும் கொள்ள
     பாவம்என் றேப கர்ந்து
சரியல இதுவென் றோதி
     சஞ்சலம் கொண்டார் நெஞ்சே


மருகரோ எழுந்து நின்று --
     மனம்விட்டுச் சொல்லு கின்றேன்
பெரும்பிழை இழைத்து விட்டோம்
     பெட்பல்ல என்றார் நெஞ்சே


தீமைசெய் *குழுவில் கொண்ட
     தொடர்பினைத் தீர்த்துக் கொண்டு
நாமும்அம் முஸ்லிம் கட்கு
     நல்லன்ப ராவோம் என்றார்

* தீமை செய்குழு - அபூஜஹிலின் கூட்டத்தார்.


அன்புடை இந்தச் சொற்கள்
     அபுதாலிப் மருகர் நெஞ்சில்
இன்னொளி கூட்ட ஆங்கே
     எழுந்திட லானார் நெஞ்சே


குறைஷியர் குழுவில் சில்லோர்
     குணமுடன் அவர்பால் சேர
நிறைவுடன் மருகர் ஆங்கே
     நின்றுரை நிகழ்த்த லானார்


வெவ்வேறாய்ப் பிரிந்த தாலே
     வாணிபம் நடக்க வில்லை
இவ்விதப் பிரிவைப் போக்கி
     இணையலாம்


மக்களுள் சிலரை மட்டும்
     மனத்துளே வெதும்ப வைத்தல்
தக்கதோ? வேண்டாம்! என்றே
     தகவுடன் சொன்னார் நெஞ்சே


வேண்டாத உடன் படிக்கை
     விதிகளை அழிப்போம் என்றே
நீண்டதோர் உரை நிகழ்த்தி
     நின்றிட லானார் நெஞ்சே


அம்மொழி கேட்ட தும்தான்
     அபுஜஹில் கோபம் கொண்டே
இம்மொழி நடப்ப தாமோ?
     இயலாதென் றுரைத்தான் நெஞ்சே


அபுஜஹில் கூட்டம் ஓர்பால்
     அன்புளோர் கூட்டம் ஓர்பால்
அபிமானத் தாலே வேறாய்
     ஆனதும் என்னே நெஞ்சே

இதயத்தால் ஒன்று பட்டோர்
     இடத்தினில் பிரிவை நல்க
உதித்தஅச் சூழ்ச்சி எல்லாம்
     ஒழிந்ததும் என்னே நெஞ்சே


பரிவுடை மக்கள் கூட்டம்
     பாசத்தால் பெருகும் போது
நெறியிலார் கொடுமை எல்லாம்
     நின்றிடு மாமோ? நெஞ்சே


ஒற்றுமை தனைக்கெ டுத்த
     ஒப்பந்தத் தைக்கி ழிக்க
*வெற்றுரை கூட்டத் தார்கள்
     வெதும்பிட லானார் நெஞ்சே

* அபூஜஹிலின் கூட்டத்தார்கள்

ஆயுதம் தாங்கிச் சென்றே
     அபுதாலிப் மருகர் கூட்டம்
நேயமாய் அண்ண லாரை
     அழைத்ததும் என்னே நெஞ்சே

 

தூயநம் நபிகள் நாதர்
     தொடர்ந்திட லானார்; மக்கள்
பாய்ந்திடும் வெள்ளம் போன்றே
     பாசமாய்த் வந்தார் நெஞ்சே


துன்பத்தால் பண்பட் டேநம்
     தூயவர் மார்க்கங் கொண்ட
அன்புற்ற மக்கள் அல்லாஹ்
     அருள்கண்ட தென்னே நெஞ்சே


அவரவர் இல்லந் தன்னில்
     அன்புடை முஸ்லிம் மக்கள்
உவப்புடன் இணைந்து நின்ற
     உற்சாகம் என்னே நெஞ்சே