பக்கம் எண் :

36

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

துன்பம் சுமந்த துணிவுடை வீரர்

துணைவியைப் பிரியுதல்

பெருந்துணைவர் அபூதாலிப் பிரிவதானார்

இன்னல்கள் சூழ்ந்த போதும்
      இதயத்தில் சோரா அண்ணல்
தன்னுடைக் கொள்கை தன்னில்
      தகவுடன் நின்றார் நெஞ்சே

ஆயினும் அண்ண லுக்கே
      அருந்துணை யாயி ருந்த
தாயனை அபுதா லிப்தான்
      நோயுற்ற தாலே நெஞ்சே


கவலைதாம் அதிகம் ஆகக்
      கலக்கத்தைக் கொண்டார் நெஞ்சே!
அவலமும் பெரிதே நெஞ்சே!
      ஆற்றொணாத் துன்பம் நெஞ்சே


பற்றிய நோயின் சக்தி
      பணியாமல் நாளும் ஓங்கப்
பொற்புடை அபுதா லிப்தான்
      புகைந்திட லானார் நெஞ்சே


அபுதாலிப் - இறங்குங் காலை
      அனைவரை யும்அ ழைத்தே
நபிகளைப் பற்றிச் சொன்ன
      நன்மொழி கேளாய்! நெஞ்சே

என்னரும் குடும்பத் தோரே!
      எனக்கினி வாழ்க்கை இல்லை;
உன்னிப்பாய் ஒன்று சொல்வேன்;
      உணர்க!என் றாரே நெஞ்சே


நம்மருங் குடும்பத் துள்ளே
      நம்பிக்கை உள்ள மைந்தன்
செம்மைசேர் கொள்கை தன்னைச்
      சிறப்பிப்பீர்! என்றார் நெஞ்சே


அன்னவர் இடத்தில் நீங்கள்
      அன்புடன் நடக்க வேண்டும்;
என்றைக்கும் அவரை நீங்கள்
      எதிர்க்காதீர் என்றார் நெஞ்சே


என்னரும் தம்பி மைந்தன்
      எவ்விதக் குறைவு மின்றி
உன்னத வெற்றி கொள்ள
      உதவுவீர்! என்றார் நெஞ்சே

இம்மொழி இயம்பக் கேட்டே
      இருந்தவர் எல்லாம் ஏங்க
செம்மல்தான் அபுதா லீபும்
      சென்றதும் என்னே நெஞ்சே


அண்ணலோ உருகி விட்டார்
      ஆண்டவன் அடியி றைஞ்சிக்
கண்ணீரால் நனைந்து நின்ற
      காட்சியும் என்னே நெஞ்சே


பெரியதம் தந்தை மாளப்
      பீழையில் அண்ணல் வீழச்
சிறியவர் கூட்ட மெல்லாம்
      சிரித்ததும் என்னே நெஞ்சே


முஹம்மதைக் காத்து வந்த
      முதியவர் சென்றார் அந்த
முஹம்மதைக் கொல்வோம் என்றே
      மூர்க்கர்கள் நின்றார் நெஞ்சே


சோதனை பெருகும் போது
      சொல்லொணாத் துன்பம் நல்கும்
வேதனை வந்த தைத்தான்
      விளம்புவ தாமோ! நெஞ்சே

துணையைப் பிரிந்த தூயவர் துன்பம்


முதியவர் விட்டுச் சென்று
      மூன்றுநாள் ஆவ தற்குள்
புதியவோர் கவலை தன்னால்
      புழங்கிட லானார் நெஞ்சே


கண்களுக் கிமையைப் போலக்
      காத்துவந் திட்ட அந்தக்
கண்ணிய மனை விளக்காம்
      கதிஜாநோ யுற்றார் நெஞ்சே


பற்பல சிகிச்சை செய்தும்
      படுக்கையில் படுத்தி ருந்த
நற்குண கதிஜா அன்னை
      நலம்பெற வில்லை நெஞ்சே

நாட்டோர்கள் பகைமை ஒர்பால் -
      நலந்தரும் துணயாய் நின்ற
வீட்டுக்குத் தலைவி கொண்ட
      வேதனை ஓர்பால் - நெஞ்சே


இருமுனைத் தீயில் சிக்கி
      இருந்திடும் நிலையில் அண்ணல்
பெருகிய துன்பத் தோடு
      பெரும்பணி செய்தார் நெஞ்சே


நாட்களாய் வாட்டும் நோயில்
      நாம்மீள மாட்டோ மென்றே
ஆட்பட்ட நோயால் அன்னை
      அளவிலாத் துயரங் கொண்டார்


படுக்கையில் கதிஜா வுக்குப்
      பக்கத்தில் அண்ணல் வந்து
நடுக்கமாய் அமர்ந்தி ருந்த
      நற்துன்பம் கேளாய் நெஞ்சே


மரணம்தான் நெருங்கக் கண்டே
      மனம்கசிந் திட்ட அன்னை
அறமகன் பிரிவை எண்ணி
      அழுதிட லானார் நெஞ்சே


கதிஜாவின் அன்புக் கண்கள்
      கணவரின் முகத்தை நோக்கி
எதைஎதை யோஉ ரைக்க
      ஏங்கிட லானார் நெஞ்சே


கண்ணுக்குள் நிற்கும் அந்தக்
      கனிவுடைக் கணவ ரைத்தான்
மண்ணுக்குள் சென்றால் காண
      முடியுமோ? எனநி னைத்தார்


அருகிலே அமர்ந்தி ருந்தே
      அழுதிடும் குழந்தை கட்குப்
பெருமகன் தன்னைக் காட்டிப்
      பேசிய தென்னே நெஞ்சே


குழந்தைகள் சூழ்ந்து நிற்கக்
      கூர்ந்துமே பாத்தி மாவை
அழஅழப் பார்த்த அந்த
      அவலமும் என்னே நெஞ்சே


மெதுவாக கரத்தை நீட்டி
      மென்கொடி பாத்தி மாவை
புதுமைசேர் நோக்கு நோக்கி
      புளகமுற் றாரே நெஞ்சே


என்னரும் மக்காள்! நீவிர்
      ஏங்கிட லாமோ? உங்கள்
இன்னுயிர்த் தந்தை உள்ளார்;
      இன்னலேன்? என்றார் நெஞ்சே


இம்மொழி செவியில் வீழ
      இளகிய அண்ணல் கொண்ட
வெம்மைசேர் துன்பந் தன்னை
      விளக்குவ தாமோ? நெஞ்சே


தாயும்தம் தந்தை யாரும்
      தரையில்நீர் உகுக்கக் கண்ட
சேய்களின் நிலைய இங்கு
      செப்புவ தாமோ! நெஞ்சே

அண்ணலாரின் எண்ண அலைகள்


நினைவெனும் பாதை நோக்கி
      நேர்மைசேர் அண்ணல் சென்று
புனைமலர் கதிஜா அன்னை
      பொற்பினைக் கண்டார் நெஞ்சே


ஒன்றன்பின் ஒன்றாய் அந்த
      உயர்வுடைக் காட்சி தோன்ற
இன்னலால் அண்ண லாரின்
      இதயம்சோர்ந் ததுவே நெஞ்சே


அன்புக்கே அணிய தாகி
      அடக்கத்தின் இருக்கை யாகி
தன்னுடை வாழ்வில் சேர்ந்த
      தகவைநி னைப்பார் நெஞ்சே


அன்புடன் தமைய ழைத்தே
      ஆதர வதனை நல்கி
இன்புடன் பொறுப்ப ளித்த
      இயல்பைநி னைப்பார் நெஞ்சே


ஆருமில் நிலையில் அன்றோ
      அருமணங் கொள்ள வந்த
சீரினை எண்ணக் கண்ணீர்
      சிந்திடு வாரே நெஞ்சே


தன்னுடைக் கொள்கை ஏற்கத்
      தானென்று முந்தி வந்த
பொன்னனை மாதின் அன்பால்
      புழுங்கிட லானார் நெஞ்சே


எல்லோரும் எள்ளும் போதும்
      என்னவர் ‘மெய்ய’ ரென்ற
நல்லுளப் பாங்கை எண்ணி
      நடுங்கிட லானார் நெஞ்சே

இணையிலா மறைதான் வந்தே
      இறங்கிடும் காலை அன்னார்
அணையிலா அன்பைக் கொண்ட
      நினைவினில் ஆழ்ந்தார் நெஞ்சே


சோர்வுற்ற நிலையில் எல்லாம்
      சொல்லரும் பணிகள் செய்த
ஆர்வத்தை, அன்பை எண்ணி
      அகமுரு கிடவே செய்தார்


கொண்டதன் கொள்கை தன்னைக்
      குதூகல மாக ஏற்ற
தொண்டினை எண்ணி எண்ணி
      சோர்ந்திட லானார் நெஞ்சே


கதிஜாவின் வாழ்வுச் சாயல்
      கவிந்ததே நெஞ்சில் அண்ணல்
எதிலுமே சாரா வண்ணம்
      ஏங்கிட லானார் நெஞ்சே


உடல்,பொருள், ஆவி தன்னை
      உவந்துமே தமக்குத் தந்த
சுடர்அணை வதுவோ? என்றே
      சோர்ந்துநின் றாரே நெஞ்சே


கதீஜாவிண் கவினுறு நினைவுகள்


கதிஜாவின் ஒளிமு கத்தில்
      கணவரின் பெருமை யாலே
புதுமைசேர் மகிழ்வு தோன்றிப்
      பொலிந்ததும் வியப்பே நெஞ்சே


கணவரின் மாண்பு தன்னைக்
      கருதிய நிலையில் அன்னை
மனமதில் அமைதி கண்டே
      மகிழ்ந்திட லானார் நெஞ்சே


எதைஎதை எண்ணி னாரோ
      எல்லையில் ஒளியைச் சேர்க்கும்
புதியபுன் னகைதான் மேவப்
      பொலிந்திட லானார் நெஞ்சே

ஒருவரால் துவக்கப் பெற்ற
      உயர்வுடை இஸ்லாம் மார்க்கம்
பரவிய நிலையை எண்ணிப்
      பார்த்திருப் பாரோ நெஞ்சே


வரகாவின் வாய்ச்சொல் யாவும்
      வனப்புடன் பலிப்ப தைத்தான்
இருகண்ணால் பார்த்த தாலே
      இன்பங்கொண் டாரோ! நெஞ்சே


தான்சென்ற பின்பும் அண்ணல்
      தனித்தவர் ஆகார் என்ற
பான்மையை எண்ணி எண்ணி
      பரவசமுற் றாரோ! நெஞ்சே


இன்னும்சின் னாளில் மக்கம்
      இன்நபி கையில் என்றே
எண்ணிய எண்ணத் தாலே
      இன்பங்கொண் டாரோ ! நெஞ்சே


தம்முடை மக்க ளைப்போல்
      தகுதிசேர் இஸ்லாம் மார்க்கம்
செம்மையாய் வளர்ந்த தைத்தான்
      சிந்தைசெய் தாரோ ! நெஞ்சே


கடமைகள் எல்லாம் ஆற்றிக்
      களித்தபே ரின்பம் தன்னில்
திடமுடன் இறப்ப தற்கும்
      தெளிந்திருப் பாரோ ! நெஞ்சே


கணவரை இழந்த பின்பு
      கலங்கிடும் வாய்ப்பே இன்றி
குணமுடன் முன்பு செல்லும்
      குறிப்புணர்ந் தாரோ நெஞ்சே


இறைவனின் தூதாய் வந்த
      இணையிலா மாணிக் கத்தை
நிறைவுடன் பெற்றோ மென்றே
      நினைத்திருப் பாரோ ! நெஞ்சே

உயிரினும் இனியார் தம்மை
      உற்றஓர் துணையாய்க் கொண்டோம்
உயிர்சென்ற போதும் அந்த
      ஒளிபோதும் என்பார் நெஞ்சே


அவரால்நாம் அடைந்த இன்பம்
      அவனியில் வாய்ப்ப தாமோ
உவகையில் இவற்றை எல்லாம்
      உள்ளத்தில் கண்டார் நெஞ்சே


முகத்தினில் துன்பம் இன்றி
      முறுவலும் முகிழ்த்த தம்மா!
முகம்மதோ அருகில் செல்ல
      முனைந்திட லானார் நெஞ்சே


அண்ணலின் விழிகள் அந்த
      அருங்கொடி விழிக ளோடு
பின்னிய நிலையில் ஆங்கு
      பேசிய தெதுவோ! நெஞ்சே

அண்ணலின் நினவைக் கொண்ட
      அன்னையின் உள்ளந் தன்னில்
எண்ணிய தெதுவோ? நெஞ்சே
      எவ்வுரை செய்வேன்? நெஞ்சே


சில்லிட்ட கரத்தைப் பற்றிச்
      சிந்தையில் நொந்தே அந்த
நல்லொளித் தீபம் மங்க
      நலிந்திட லானார் நெஞ்சே


விழிகளால் இருவ ருந்தான்
      விளங்கரும் மொழிகள் பேச
எழில்நபி முகத்தைப் பார்த்தே
      எக்களிப் புற்றார் நெஞ்சே


இறைநேசர் தம்மைத் தான்தான்
      இன்புடன் மறுமை தன்னில்
நிறைவுடன் காண்போம் என்ற
      நினைப்பதோ அறியேன் நெஞ்சே

சொர்க்கத்தை அடையும் இன்பைச்
      சிந்தைசெய் ததனால் அந்த
அற்புத இளந கைத்தான்
      அரும்பிய தாமோ நெஞ்சே


உயிர்நீங்கும் போதும் கூட
      உள்ளத்தின் தெளிவி னோடே
அயர்வின்றி விளங்கி நின்ற
      அதிசயம் பெரிதே நெஞ்சே


நெஞ்சினில் நிறைந்தி ருக்கும்
      நபிமணி உருவங் கண்டு
சஞ்சல மின்றி, கொண்ட
      சாந்தியும் என்னே நெஞ்சே


மன்னவர் முகத்தைப் பார்த்தே
      மங்கையர் திலகம் கண்ணை
இன்புடன் மூடிக் கொண்ட
      இயல்பதும் என்னே நெஞ்சே

இறையவன் நாமம் தன்னை
      இயம்பிய பின்னர் நெஞ்சில்
நிறைந்ததம் கணவர் மாண்பை
      நினைந்துயிர் நீத்தார் நெஞ்சே


துணவியின் நாவில் அந்தத்
      தூயவன் பெயரொ லிக்க
அணையிலா வெள்ளம் போல
      அண்ணல்நீர் வடித்தார் நெஞ்சே


இறைவனின் அருளைப் பெற்றே
      ஏகிடும் கதிஜா தம்மின்
நிறைவுடை வாழ்வைப் பற்றி
      நெஞ்சம்நி றைந்தார் நெஞ்சே


இமைத்திரை விழுந்த தும்தான்
      இறைதூதர் கதிஜா தம்மின்
அமைதிசேர் முகத்தைப் பார்த்தே
      ஆறுதல் கொண்டார் நெஞ்சே

துணையினைப் பிரிந்த அண்ணல்
      துயரத்தில் மூழ்கித் துன்பாம்
அணையிலா வெள்ளம் தன்னில்
      ஆழ்ந்ததும் என்னே நெஞ்சே


மூண்டஅத் துக்கந் தன்னை
      மூடிட முடியா அண்ணல்
மாண்புடன் உடலை மூடி
      மயங்கியே நின்றார் நெஞ்சே


சிறிதுநே ரத்திற் குள்ளே
      சீர்மணப் பன்னீர் மொண்டு
நறுமணம் உடலுக் கூட்டி
      நலஞ்செய்த தென்னே நெஞ்சே


மண்ணறை நோக்கிச் செல்லும்
      மாண்புறு கதிஜா வின்நல்
பொன்னுடல் சென்ற போது
      புகழொலி பெரிதே நெஞ்சே


மக்களாம் கடலின் மீது
      மலரொன்று நகர்தல் போல
தக்கஅவ் வுடலம் சென்ற
      தனிக்காட்சி என்னே நெஞ்சே


வெறுமையாய்ச் சென்றி டாமல்
      நபிநேய விளக்கை ஏற்றி
மறுமையின் முதலாம் வாயில்
      மண்ணறை கதிஜா சென்றார்


கண்ணிய மிக்க அந்த
      கதிஜாவின் உடலந் தன்னை
மண்ணதன் மடியில் வைத்தே
      வள்ளலார் திரும்ப லானார்


லட்சியத் தோடு வந்து
      லட்சிய வேந்தைக் கொண்ட
லட்சிய இன்பத் தோடு
      இறந்தவர் உண்டோ? நெஞ்சே


போற்றும்இஸ் லாம்மார்க் கத்தில்
      பொலிந்திடும் கதிஜா போன்ற
ஏற்றத்தை, மாண்பைப் பெற்றோர்
      எவருண்டாம்? சொல்வாய்! நெஞ்சே


அண்ணலின் வாழ்வு தன்னில்
      அரும்ஒளி யேற்றி வந்த
பெண்குலப் பெருவி ளக்கின்
      பேரிழப் பென்னே! நெஞ்சே


அன்பொலி பாய்ச்சி வந்த
      அருவிதான் ஓய்ந்த பின்பும்
இன்பொலி உண்டோ? அண்ணல்
      ஏங்கிட லானார் நெஞ்சே


கண்ணொடு கண்ணி ழந்த
      காட்சியைப் போல அண்ணல்
கண்ணீரை வடித்து நின்ற
      கவலையும் பெரிதே நெஞ்சே

இல்லத்துத் துணையும் செல்ல
      இன்மொழி அபுதா லிப்தம்
நல்லதோர் பரிவும் நீங்க
      நலிந்திட லானார் நெஞ்சே


வளர்த்த நற் கரமும் வீழ
      வாழ்வதன் கரமும் நீங்க
தளர்ந்தநம் அண்ணல் கொண்ட
      தவிப்பதும் என்னே நெஞ்சே


ஒளியிலா வீட்டின் உள்ளே
      உட்கார மனமும் இன்றி
களியிலா நிலையில் அண்ணல்
      கலங்கிட லானார் நெஞ்சே


ஒவ்வொரு பொருளும் அந்த
      ஒளிமகள் நினைவை ஊட்ட
எவ்விதத் துணையு மின்றி
      ஏங்கிட லானார் நெஞ்சே

அன்னையை இழந்த காலை
      அடைந்திட்ட துயரில் மிஞ்சும்
இன்னலைக் கண்ட அண்ணல்
      இளகிட லானார் நெஞ்சே


ஓயாத துயரந் தன்னில்
      உட்கார, அழுத வண்ணம்
தாயினை இழந்த சேய்கள்
      தவித்ததும் என்னே நெஞ்சே


துன்பமே உருவாய் வந்தே
      துடித்திடும் குழந்தை கட்கும்
என்னநாம் உரைப்ப தென்றே
      ஏங்கிட லானார் நெஞ்சே


மக்களும் கண்ணீர் சிந்த
      மக்களைப் பார்த்துப் பார்த்துத்
தக்கநம் நாய கம்தான்
      தவித்ததும் என்னே நெஞ்சே

மக்களுள் சிறுமி யான
      மாண்புடை பாத்தி மாவும்
துக்கத்தால் அழுத காட்சி
      துன்பத்துள் துன்பம் நெஞ்சே


கதிஜாவை எண்ணி எண்ணி
      கலங்கிய அண்ணல் துன்பை
எதிர்நின்ற மக்கள் கண்டே
      ஏங்கிய தென்னே நெஞ்சே


எண்ணாத வற்றை எல்லாம்
      எண்ணிய மக்க ளுந்தான்
கண்ணீரைச் சிந்தி ஆங்கு
      கலங்கிய தென்னே நெஞ்சே


தந்தையின் இடத்தில் அந்தத்
      தகுமகள் பாத்தி மாதான்
நொந்துமே கேட்ட வற்றை
      நுவல்கின்றேன் கேளாய் நெஞ்சே

எந்தையே! எங்கள் அன்னை
      எங்குளார்? என்று கேட்க
சிந்தையில் கலங்கி அண்ணல்
      செயலிழந் தாரே நெஞ்சே


குழந்தையின் கண்ணீர் தன்னை
      குணமுடன் துடைத்து விட்டே
அழவேண்டாம் சொல்வேன் என்றே
      அவர்பதில் சொன்னார் நெஞ்சே


“சுவனத்தில் பொன்னா லான
      சுந்தர வீட்டி னுள்ளே
அவருளார்; கவலை வேண்டாம்
      அப்புறம்!”...... என்றார் நெஞ்சே


வாடிய நிலையில் நின்ற
      வனப்புறு பாத்தி மாவை
நாடியே எடுத்த ணைத்து
      ‘நானுளேன்’ என்றார் நெஞ்சே

மக்கத்தின் தலைவர் அன்று
      வருத்தத்தைக் கொண்ட நாளை
துக்கத்தின் ஆண்டாய் மக்கள்
      சொன்னதும் என்னே நெஞ்சே


கடலெனப் பெருகி வந்த
      கவலைகள் தம்மை வென்று
திடமுடன் பணிபு ரிந்த
      தீரமும் பெரிதே நெஞ்சே


இத்தகைத் துன்பத் துள்ளும்
      இதயமே சோரா வண்ணம்
புத்தொளி மார்க்கந் தன்னைப்
      புகன்றிட லானார் நெஞ்சே


இல்லறந் தாங்கி நின்றே
      இதயத்தைத் துறவில் கொண்டு
நல்லறம் புரிந்து வந்த
      நலமதற் கிணையும் உண்டோ?


துன்பிலுங் கூட இந்தத்
      தொடர்பணி வேண்டு மாமோ?
என்றுமே குறைஷி யர்கள்
      எண்ணிட லானார் நெஞ்சே


மீண்டும்தான்       மேன்மேலும் துன்பம் நல்க
வேண்டியே அவர்கள் கூட்டம்
      விரும்பிய தென்னே நெஞ்சே


இரக்கமே இல்லா வண்ணம்
      இன்னல்மேல் இன்னல் தந்தே
தரக்குறை வாக அன்னார்
      தாழ்த்திட லானார் நெஞ்சே


காலத்தைப் பார்த்து நின்ற
      கருணையில் பகைவ ரெல்லாம்
சீலமில் வழியில் செய்த
      சிறுமைகள் சிறிதோ? நெஞ்சே


ஆருயிர்த் துணையி ழந்தே
      அல்லலில் ஆழ்ந்த தந்தை
பேரவ லத்தை எண்ணி
      பாத்திமா நைந்தார் நெஞ்சே


பாத்திமா பதைப தைத்தே
      பாகென உருகு வண்ணம்
ஆத்திரச் செயல்பு ரிந்த
      அல்லலைக் கேளாய் நெஞ்சே


அண்ணலைத் தெருவில் கண்டால்
      அணுவுமே அஞ்சா வண்ணம்
மண்ணதை அள்ளிக் கொட்டி
      மகிழ்ந்ததும் என்னே நெஞ்சே


ஒட்டக நச்சுப் பையை
      உட்குடல் தன்னை அண்ணல்
பெட்புடன் சுமந்து வந்த
      பொறுமையும் பெரிதே நெஞ்சே


பார்த்ததும் துடி துடித்து
      பாத்திமா அழுது நின்ற
சீர்மையில் காட்சி தன்னைச்
      செப்புவ தாமோ ! நெஞ்சே


கோபத்தால் அறிவி ழந்த
      கொடியர்கள் செயலில் கொண்ட
பாபத்தைச் சொல்வ தாமோ?
      பகரவொண் ணாதே நெஞ்சே


தொல்லைகள் தமைப்பொ றுத்துத்
      தொன்மைசேர் கஃபா தன்னில்
வல்லவன் அருளை எண்ணி
      வணங்கிட லானார் நெஞ்சே


சிரமதைத் தரையில் தாழ்த்திச்
      செம்மையாய்த் தொழுத வர்க்குப்
பரிசென அவர்கள் தந்த
      பாதகம் கேளாய் நெஞ்சே

ஒட்டக நச்சுப் பையை
      உத்தமர் முதுகின் மீது
துட்டனாம் ஒருவன் போட்ட
      துடுக்கதும் என்னே நெஞ்சே


பையினை வீசி விட்டுப்
      பாதகன் சிரிக்கக் கண்டோர்
கையினைக் கொட்டிக் கொட்டிக்
      களித்ததும் என்னே நெஞ்சே


குறைஷியர் கூட்டம் ஆங்கே
      குதித்துமே சிரித்த தத்தான்
அறவதோ? பாவம்! பாவம்!
      அடுக்காத பாவம்! நெஞ்சே


தொழுகையில் ஆழ்ந்தி ருந்த
      தூயவர் முதுகில் வைத்த
அழுகிய நச்சுப் பையால்
      அகம்வருந் திடவே செய்தார்

தலயினைத் தூக்கு தற்குத்
      தடையாகப் பையி ருந்த
நிலையினில் அண்ணல் கொண்ட
      வேதனை என்னே நெஞ்சே


மக்களின் கொடுமைக் காக
      மனமது கசிந்து ஆங்கே
பக்தியாய் உருகி நின்ற
      பான்மையும் என்னே நெஞ்சே


இக்கொடும் செய்தி தன்னை
      இயம்பிய அளவில் கேட்டே
துக்கத்தால் பாத்தி மாவும்
      துடித்ததும் என்னே நெஞ்சே


பாத்திமா விரைந்து வந்தார்
      பார்த்தார்அக் கோலந் தன்னை
ஆத்திரத் தோடும் ஆங்கே
      அழுதிட லானார் நெஞ்சே

தந்தையைப் பார்த்துப் பார்த்துத்
      தாங்கொணாத் துன்பங் கொண்டே
எந்தையே ! என்ன கோலம் ?
      என்றழு திட்டார் நெஞ்சே


பையொடு தொழுகை செய்ய
      பார்த்துமே பாத்தி மாதான்
கையொடு அதனைப் போக்கிக்
      கலங்கிட லானார் நெஞ்சே


அழுகிய நச்சுப் பையை
      அகற்றிடும் போது மங்கை
அழுதஅவ் வழுகைக் கிங்கே
      அளவதும் உண்டோ ? நெஞ்சே


அண்ணலோ இறையை வேண்டி
      அமைதியாய் எழுவ தானார்
கண்ணீரில் மிதந்த அந்தக்
      காட்சியும் என்னே நெஞ்சே

அற்பர்கள் செயலை எண்ணி
      அகமுடைந் தாங்கே நின்ற
நற்குண பாத்தி மாவின்
      நடுக்கமும் என்னே நெஞ்சே


இத்தகைத் துன்பந் தன்னை
      இருவிழி யாலே கண்ட
உத்தம பாத்தி மாதான்
      உருகிய தென்னே நெஞ்சே


உருகிய மகளைக் கண்டே
      உள்ளத்தில் சோர்ந்த அண்ணல்
பெருமையாய் உரைத்த வற்றைப்
      பெட்புடன் சொல்வேன் நெஞ்சே


என்னருங் கண்ணே! நீதான்
      ஏங்கியே அழுவ தென்னே !
உன்னுடைத் தந்தைக் கல்லாஹ்
      உதவுவான் என்றார் நெஞ்சே

அறியாமல் செய்யும் இந்த
      அல்லல்கள் பெரிய தாமோ !
இறைவனை நம்பி வாழ்வோம்
      என்றுரை செய்தார் நெஞ்சே


அம்மொழி கேட்ட அந்த
      அருங்குண பாத்தி மாதான்
வெம்பியே எடுத்து ரைத்த
      வேதனை கேட்பாய் நெஞ்சே


எந்தையே ! என்று தாங்கள்
      எவருக்குத் தீமை செய்தீர் ?
நிந்தனை ! இதுவே என்று
      நெகிழ்ந்தழு தாரே நெஞ்சே


அன்னையும் பிரிந்து விட்டார்
      அவலமும் பெருகக் கண்டோம்
என்னென்ன பகைவர் கூட்டம்
      இழைக்குமோ ! என்றார் நெஞ்சே

பகைவர்கள் துன்பங் கண்டே
      பாத்திமா கொண்ட துன்பம்
அகமுடை யோருக் கெல்லாம்
      அவலத்தைத் தருமே நெஞ்சே


எதிரிகள் துன்பம் எங்கும்
      எல்லையில் லாமல் தோன்ற
எதிர்ப்பினை மாற்ற அண்ணல்
      எண்ணிட லானார் நெஞ்சே


இருவரும் துன்பத் தோடும்
      இல்லத்தை அடைவ தானார்
வருமிவை தம்மை வெல்ல
      வழிகாண லானார் நெஞ்சே