பக்கம் எண் :

37

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

துன்பம் சுமந்த துணிவுடை வீரர்

நாயகரைச் சோதித்த தாயிபு


*தாயிபு நகரில் சின்னாள்
     தங்கியே வருவோ மென்று
நேயஞ்சேர் நபிகள் நாதர்
     நினைத்திட லானார் நெஞ்சே

(Tha-iff)

மக்காவில் இருந்தே அண்ணல்
     மாண்புறு ஜைதி னோடு
துக்கம்மேல் துக்கம் கண்டும்
     தொடர்ந் தெழுந்தாரே நெஞ்சே


எழுபது கற்கள் காலால்
     எல்லையில் துன்பத் தோடு
விழுமிய அண்ணல் சென்ற
     வேதனை கேளாய் நெஞ்சே


கொள்கையைப் பரப்ப வேண்டி
     கொதிக்கும்அப் பாலை யுள்ளே
வள்ளல்தான் நடந்து சென்ற
     வன்மையும் என்னே நெஞ்சே


விசையுறு பந்தைப் போல
     வீழ்ந்திடா வேகங் கொண்டு
நசையுடன் நாய கம்தான்
     நடந்திட லானார் நெஞ்சே


வாகனம் ஏதும் இன்றி
     வனாந்தரம் தன்னில் அண்ணல்
வேகமாய்க் காலால் சென்ற
     வேதனை கேளாய் நெஞ்சே


நீருமே நிழலும் அற்ற
     நெடியதாம் பாலைக் குள்ளே
சோர்ந்துமே அண்ணல் சென்ற
     சோகமும் என்னே நெஞ்சே


தாய்நிகர் நபிகள் நாதர்
     தம்துணை ஜைதி னோடு
தாயிபு நகரஞ் சேர்ந்து
     தங்கிட லானார் நெஞ்சே


தாயிபு நகருக் குள்ளே
     தம்முடைப் பணியைச் செய்ய
ஆயத்த மாகி அன்பு
     மார்க்கத்தை அறைந்தார் நெஞ்சே

மக்கத்தில் இருந்து வந்தேன்
     மணிகளே! நீங்கள் கொள்ளத்
தக்கதைச் சொல்வேன்; செவியைச்
     சாய்ப்பீர்என் றாரே நெஞ்சே


நம்மிடை நிலவு கின்ற
     நலமிலாப் பீடை கட்கு
வெம்மைசேர் மூட மான
     விதிகள்தாம் என்றார் நெஞ்சே


இணைகளை வைக்க வேண்டாம்
     இன்னலுள் ஆழ்தல் வேண்டாம்
இணையற்ற ‘அல்லாஹ்’ வுக்கோ
     இணையில்லை என்றார் நெஞ்சே


இவைகளை விட்டு நீங்கி
     இனப்பகை யாவும் போக்கி
அவனது பாதை நோக்கி
     அணுகுவீர் ! என்றார் நெஞ்சே

ஒருவனே இறைவன் என்ற
     ஒப்பிலாக் கொள்கை ஏற்றுக்
கருணைஇஸ் லாமிற் சேர்வீர்;
     களிப்பீரென் றுரைத்தார் நெஞ்சே


இறைவனின் தூதாய் வந்தே
     இம்மொழி உரைப்ப தானேன்
முறைமையென் றிதனை ஏற்பீர்;
     முயல்வீரென் றாரே நெஞ்சே


இம்மொழி கேட்ட அந்த
     இருள்மன மக்கள் ஆங்கே
செம்மைசேர் நபியைக் கேலி
     செய்திட லானார் நெஞ்சே


*பனிஸகீப் மக்கள் அண்ணல்
     பாங்கினை அறியா வண்ணம்
நனிவருத் தத்தைத் தந்து
     நகைத்ததும் என்னே நெஞ்சே


* பனீஸகீப் - தாயிபு நகரத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய ஓர் செல்வக் குடும்பத்தினர்.

தூதராய் அனுப்பு தற்கோ
     தூயவர் பலரி ருக்க
ஏதுமில் உம்மைத் தானா
     அனுப்பினான் இறைவன்? என்றார்


வழியதன் பயணத் திற்கோர்
     வாகனம் ஏதும் இல்லா
அழகுதான் என்னே! என்றே
     அன்னவர் நகைத்தார் நெஞ்சே


உம்மொழி உயர்ந்த தென்றால்
     உண்மையில் உயர்ந்தோ ராவீர்;
உம்மிடம் நாங்கள் பேசத்
     தகுதிதாம் உண்டோ ? என்றார்


உம்மொழி பொய்மை யாயின்
     உம்மோடு பேசு தற்கே
இம்மியும் விரும்ப வேண்டாம்
     ஏகுக! என்றார் நெஞ்சே


உதவாத கருத்தைச் சொல்ல
     ஊரைவிட் டிங்கு வந்தாய்!
இதயத்தைக் குழப்பு தற்கிங்
     கிடங்கொடோம் என்றார் நெஞ்சே


சொற்களால் வதைத்த பின்னும்
     சோர்வின்றி சிறுவர் கையால்
கற்களை வீசச் செய்து
     களித்திட லானார் நெஞ்சே


பேசிய பேச்சால் உள்ளம்
     பெரிதுமே வாட ஆங்கு
வீசிய கல்லால் அண்ணல்
     மேனிவா டிற்றே நெஞ்சே


ஓய்வின்றி கற்கள் வீச
     ஊரைவிட் டேது ரத்த
பாய்ந்திட்ட குருதி வெள்ளம்
     பகர்ந்திடும் அளவோ ? நெஞ்சே

வீதியின் மருங்கில் நின்று
     மெய்யரின் உடலின் மீது
நீதியில் லாமல் கற்கள்
     வீசிய தென்னே நெஞ்சே


கொட்டிய குருதி கண்டும்
     கொஞ்சமும் இரக்க மின்றித்
திட்டியே தெருவின் கண்ணே
     துரத்திய தென்னே நெஞ்சே


கால்களில் காயம் பட்டுக்
     கணக்கிலாக் குருதி கொட்ட
தோலுறை நிறமும் மாறித்
     தோன்றிடச் செய்தார் நெஞ்சே


காலணி சிவந்த தாகக்
     கால்வழி குருதி கொட்ட
மேலெலாம் புண்ணாய் மாறி
     மெய்தளர் வுற்றார் நெஞ்சே

ஓடவும் முடியா தாராய்
     உள்ளமும் சோர்ந்த அண்ணல்
வாடிநின் றோரி டத்தில்
     வந்தமர்ந் தாரே நெஞ்சே


துரத்தியே வந்த மக்கள்
     தூயவர் அமரக் கண்டே
இரக்கமே இல்லா வண்ணம்
     எழுப்பிட லானார் நெஞ்சே


அமரவும் ஒட்டா வண்ணம்
     அடித்துமே துரத்திச் சென்று
இமைப்பொழு துந்தான் இங்கே
     இருக்காதே என்றார் நெஞ்சே


துயரத்தைத் தாளா வண்ணம்
     துவண்டுமே விழுந்த அண்ணல்
அயர்வினை அறிந்தும் பின்னும்
     அடித்தனர் அந்தோ! நெஞ்சே

விழுந்தவர் தோளைத் தூக்கி
     விரட்டிய தென்னே நெஞ்சே
அழுந்தியே துன்பில் அண்ணல்
     ஆழ்ந்ததும் என்னே நெஞ்சே

ஊருக்குள் தங்கா வண்ணம்
     ஓடுக! என்றே சொல்லிப்
பாருக்குத் தலைவர் தம்மை
     பதைத்திடச் செய்தார் நெஞ்சே

ஊரினைத் தாண்டிச் சென்றும்
     உளமிரங் காத மக்கள்
சீர்மிகு அண்ண லுக்குச்
     செய்ததைச் சொல்வேன் நெஞ்சே


இறைவனின் பெயரைச் சொல்லி
     ஏய்ப்பவன் நீயென் றோதி
குறைமதி மக்கள் செய்த
     கொடுமையென் சொல்வேன்! நெஞ்சே

சேரிடம் அறியா தாராய்
     ஸைதும்நன் நபியும் செல்ல
கூரிய கற்கள் வீசிக்
     கொடுந்துயர் தந்தார் நெஞ்சே


கொட்டிடும் குருதி யோடு
     குணமிகு நமது அண்ணல்
இட்டடி எடுத்து வைத்த
     இன்னலும் சிறிதோ! நெஞ்சே


ஒருவருக் கொருவர் ஆங்கே
     உறுமியே போட்டி யிட்டுப்
பெருமகன் மீது கற்கள்
     பெய்திட லானார் நெஞ்சே

 

மாசிலா நபியைக் காத்த
     மாண்புறு ‘ஸைத்’மு கத்தில்
வீசிய கற்கள் பட்ட
     வேதனை என்னே நெஞ்சே

 

ஸைதும்தான் நபிக ளின்பால்
     சபியுங்கள் கொடியோர் தம்மை;
இதயமில் லாத மக்கள்
     இரியட்டும் என்றார் நெஞ்சே

 

வேதனை யாலே ஸைது
     விடுத்தஅம் மொழியக் கேட்டு
போதனை செய்த அண்ணல்
     பொற்பதைக் கேளாய் நெஞ்சே


என்னுளம் நிறைந்த நண்ப!
     என்னமாற் றத்தைச் சொன்னீர்?
உன்மொழி கேட்ட தாலே
     ஒடிகின்றேன் என்றார் நெஞ்சே


மக்களை அழிக்க என்னை
     மண்ணதற் கனுப்ப வில்லை
துக்கத்தைப் பொறுப்போ மென்றே
     தூயவர் சொன்னார் நெஞ்சே

கோபத்தை அடக்கு வோனே
     குவலயந் தன்னில் வீரன்;
கோபத்தை விடுப்பாய் என்றே
     குணவுரை தந்தார் நெஞ்சே


நகைப்பது கொடுமை என்றால்
     நாமதைப் பொறுக்க வேண்டும்
சகிப்பதே பெரிய தென்று
     சாற்றிய தென்னே நெஞ்சே


கடுமையை அவர்கள் கொண்டால்
     கனிவதைக் கொள்வோம் நாமே
கொடுமையை அன்பால் வெல்லும்
     குணம்வேண்டும் என்றார் நெஞ்சே


காயவே மனமில் லாமல்
     கருணையால் கவர வந்த
நாயகம் மேலும் ஆங்கே
     நடந்திட லானார் நெஞ்சே


மூன்றுகல் தூரம் வந்து
     மூர்க்கமாய்த் துரத்தி விட்டே
பான்மையில் அந்தக் கூட்டம்
     பழித்ததும் என்னே நெஞ்சே


ஓடவே எண்ணா வண்ணம்
     ஒதுங்கிய பெருமான் ஆங்கே
வாடிய நிலையில்கொண்ட
     வருத்தம்என் சொல்வேன் நெஞ்சே


இருவரும் அனுப வித்த
     இன்னலை விரித்துச் சொல்லின்
பெருகிடும் துன்ப வெள்ளம்
     பேராழி யாகும் நெஞ்சே


கற்களால் தாக்கப் பட்டும்
     கண்ணிமை போன்று காத்த
அற்புத ஸைதிற் காக
     அண்ணலார் உருகி நின்றார்

மடமைசேர் மக்கள் தந்த
     மாபெரும் துன்பத் தாலே
நடக்கவும் முடியா தாராய்
     நம்நபி சோர்ந்தார் நெஞ்சே


சகிக்கொணாத் துன்பத் தாலே
     ஸைதுடல் சோர்ந்து வீழ
நகரவும் முடியா தாராய்
     நாயகம் ஆனார் நெஞ்சே


அருகில்ஓர் மரத்தின் கீழே
     அண்ணலார் அமர்ந்தி ருந்து
பெருகிய துன்பந் தன்னால்
     பெரியோனை வேண்டி நின்றார்


புண்பட்ட நிலையில் அண்ணல்
     பொற்புடன் மண்டி யிட்டே
விண்ணோக்கிக் கரங்கள் நீண்டி
     வேண்டிய தென்னே நெஞ்சே

கல்லதும் கரையும் வண்ணம்
     கையேந்தி நின்ற அண்ணல்
நல்லுள மாண்பு தன்னை
     நானுரைப் பதுவோ! நெஞ்சே


இதயம் உருகக் கேட்ட வேண்டுகோள்


கல்லடி பட்டு நைந்த
     கருணைசேர் வள்ளல் ஆங்கே
அல்லாஹ்வின் இடத்திற் சொன்ன
     அருமொழி கேளாய் நெஞ்சே


இறைஞ்சுவோர்க் குதவும் அல்லாஹ்!
     இவ்வுல கத்தோர் சொல்லும்
முறையீட்டைக் கேட்போய் என்னை
     முன்வந்து காப்பாய் என்றார்


இறைவா!நான் ஏதும் இல்லேன்
     என்செய்வேன் உன்னை இன்றித்
தரையினில் துணையும் உண்டோ?
     தவிக்கின்றேன் என்றார் நெஞ்சே

உன்னருள் வேண்டும் என்னை
     ஒன்னலார் வளைப்பா தாமோ?
இன்னருள் ஈவாய் என்றே
     இறைஞ்சிட லானார் நெஞ்சே


பகைவர்பால் என்னைச் சேர்த்தால்
     பலமிலேன் என்ன செய்வேன் !
அகமதைக் காட்டி விட்டேன்
     ஆண்டவா! என்றார் நெஞ்சே


என்மீது கோபம் தானோ?
     ஏதும்நான் அறியேன் என்னை
வன்மக்கள் இடத்தில் காக்க
     வாராய்என் றுரைத்தார் நெஞ்சே


மக்களின் இருளை நீக்கும்
     மாபெரும் பணியில் என்னை
நிற்கவே வைத்து விட்டாய்
     நிற்கின்றேன் என்றார் நெஞ்சே

உன்னருள் ஆணை வண்ணம்
     உறுபணி ஆற்ற லானேன்
இன்னல்கள் வருவ தானால்
     ஏற்கின்றேன் என்றார் நெஞ்சே


உன்னருட் துணையா லன்றோ
     உயருளம் தாங்கு கின்றேன்
என்செயல் ஒன்றும் இல்லை
     எல்லாம்நீ என்றார் நெஞ்சே


தனியனாய் நின்றே உன்றன்
     தாகத்தால் பணிசெய் கின்றேன்
இனியென்ன அனைத்தை யும்தான்
     இனிதேநீ அறிவாய் என்றார்


எவ்விதத் துன்பம் வந்தே
     எனையழித் திட்ட போதும்
செவ்வியப் பணியில் நீங்கேன்
     என்றவர் செப்பி நின்றார்


அல்லல்கள் பெருகும் வேளை
     அணைப்பதுன் கடமை யாகும்
எல்லாம்உன் ஆணை வண்ணம்
     ஏற்றனன் என்றார் நெஞ்சே


அறிவிலா நிலையால் இந்த
     அல்லலைத் தந்த மக்கள்
முறையிலா மக்கள் என்றே
     முனியற்க! என்றார் நெஞ்சே


இரக்கமே உளத்தில் இல்லா
     இந்தவன் மக்கள் எல்லாம்
திருந்திநல் வழியில் சேர
     வேண்டுகின் றேனே என்றார்


அண்ணலின் வேண்டு கோளை
     அறிந்ததும் ஜிப்ரீல் வந்தே
கண்கவர் ஒளியைச் சிந்திக்
     கவினுறத் தோன்ற லானார்


நல்லுள நபியே! உங்கள்
     நலமிகு பொறுமை தன்னை
அல்லாஹ்வும் கண்டான் என்றே
     அறைந்து,பின் சொன்னார் நெஞ்சே


கொடுமையின் உருவாய் வந்த
     குணமிலா மக்கள் தந்த
படுதுய ரதையும் அல்லாஹ்
     பார்த்தனன் என்றார் நெஞ்சே


வருத்தத்தை விடுவீ ராக!
     வானவர் ஒருவர் உங்கள்
விருப்பத்தை நிறைவு செய்வார்;
     விளம்புக! என்றார் நெஞ்சே


வானவர் துணையைக் கொண்டு
     வலியநும் பகைவர் தம்மை
நாணவே செய்வீ ரென்று
     நவின்றதும் என்னே நெஞ்சே

அம்மொழி கேட்ட அண்ணல்
     அன்பதன் வெள்ளம் பொங்கச்
செம்மையாய் எடுத்து ரைத்த
     சீர்மொழி கேளாய் நெஞ்சே


வானவர்க் கரசே! என்னை
     வருத்திய மக்க ளுக்கு
நானொன்றும் செய்யேன் என்றே
     நவின்றிட லானார் நெஞ்சே


வன்முறை யாலே என்னை
     வாட்டியே வதைத்த போதும்
அன்னவர் இடத்தில் நானோ
     அன்புற்றேன் என்றார் நெஞ்சே


பொறுக்கொணாத் துன்பந் தன்னைப்
     பொறுத்துளேன்; எனவே மீண்டும்
ஒறுத்திட மாட்டேன் என்ற
     உறுதியும் என்னே நெஞ்சே


புன்மைகள் செய்தா ரேனும்
     பொற்பின்றி நடந்தா ரேனும்
அன்பதற் கொருநாள் அன்னார்
     அடிமைதான் என்றார் நெஞ்சே


அவர்களின் அறியா மைக்கென்
     அகத்துளே வேண்டு கின்றேன்
தவறுணர்ந் தொருநாள் மீண்டும்
     திருந்துவார் என்றார் நெஞ்சே


இவர்கள்தாம் திருந்தா ரேனும்
     இவர்களின் வழியா ரேனும்
உவப்புடன் நமது மார்க்கம்
     ஒழுகுவோர் என்றார் நெஞ்சே


ஆதலின் இவர்கள் தந்த
     அல்லலை மறந்தே னென்றே
பூதலம் புரக்க வந்த
     பொதுநபி சொன்னார் நெஞ்சே

அம்மொழி கேட்ட ஜிப்ரீல்
     அளவிலா மகிழ்ச்சி யுற்றே
செம்மலை வாழ்த்தி வானஞ்
     சென்றிட லானார் நெஞ்சே


எல்லையில் துன்பம் தந்தே
     ஏகுஏ கென்ற வர்க்கும்
நல்லருள் புரிந்த வள்ளல்
     நல்லுளம் பெரிதே நெஞ்சே


துன்பத்தைச் சுமந்த அந்தத்
     துணிவுடை வீரர் நெஞ்சில்
அன்பதன் வெள்ளம் வந்த
     அதிசயம் என்னே நெஞ்சே


அன்புரு வான அண்ணல்
     அம்மரத் தடியை விட்டே
இன்னலாம் சுமையு டன்தான்
     எழுந்திட லானார் நெஞ்சே


துன்பிலும் அன்பைப் போற்றித்
     துலங்கிய தூய அண்ணல்
நன்மக்கம் அடைய எண்ணி
     நடந்திட லானார் நெஞ்சே


வழியினில் உள்ள தான
     வனப்புடை ‘ஹிரா’கு கைக்குள்
வழிநடை அயர்வைப் போக்க
     வந்தமர்ந் தாரே நெஞ்சே


பழமையாம் காட்சி கள்தாம்
     பலப்பல உளத்தில் தோன்ற
எழுந்தவர் இல்லம் நோக்கி
     ஏகிட லானார் நெஞ்சே


அபுதாலிப் பிரிந்து சென்ற
     அல்லலைத் தினம்நி னைந்து
நபியவர் கொண்ட துன்பை
     நவின்றிட லாமோ நெஞ்சே

அன்னவர் பிரிவோர் பக்கம்
     ஆருயிர் மனைவி சென்ற
இன்னலோ மற்றோர் பக்கம்
     எதனைச்சொல் வதுவோ! நெஞ்சே


இருவரும் பிரிந்த தாலே
     எதிரிகள் அண்ண லுக்குப்
பெரும்துன்பம் தந்த தைத்தான்
     பேசிட லாமோ ? நெஞ்சே


தாங்கொணாத் துன்பத் தோடு
     தாயிபு சென்றார் ஆங்கே
ஓங்கிய துன்பங் கண்டே
     உத்தமர் திரும்ப லானார்


மலர்முகம் அதனைக் காட்டி
     மகிழ்வுடன் அழைப்ப தற்கோ
அழகுடை கதிஜா அன்னை
     அங்கிருந் தாரோ நெஞ்சே

இருபத்தைந் தாண்டு காலம்
     இன்புடன் இணைந்தி ருந்த
அருங்குணக் குன்றை எண்ணி
     அயர்ந்திட லானார் நெஞ்சே


இல்லத்தின் அழகை ஈட்டி
     இருந்தொளி செய்த அந்த
நல்லியல் விளக்கை எண்ணி
     நாயகம் சோர்ந்தார் நெஞ்சே


மாறுதல் முகத்தில் கண்டால்
     மனமிகு வருந்தி வந்தே
ஆறுதல் தரும்க தீஜா
     அருங்குணம் என்னே நெஞ்சே


கதிஜாவின் துணையி லாது
     கழிந்திடும் நாளை எண்ணி
அதிதுக்கம் கொண்டே அண்ணல்
     அமர்ந்திட லானார் நெஞ்சே


இத்தகு செல்வந் தன்னை
     இழந்துமே நின்ற அண்ணல்
புத்தொளி முகத்தில் சோர்வு
என்னே நெஞ்சே


அல்லலில் ஆழ்ந்த அண்ணல்
     அருகினில் வந்த மர்ந்தே
பிள்ளைகள் அழுது நின்ற
     பீழையும் என்னே நெஞ்சே


அன்னையைப் பற்றி அந்த
     அன்புடை மக்கள் கேட்க
என்னநாம் சொல்வ தென்றே
     ஏங்கிட லானார் நெஞ்சே


அன்னையை மீண்டும் நாமும்
     அடைவோமா? என்று கேட்க
துன்பத்துள் அண்ண லாரும்
     துடித்திட லானார் நெஞ்சே

பாத்திமா கேள்வி யாலே
     பரிவுடைத் தந்தை யாரும்
நேர்த்திசேர் மக்க ளுந்தான்
     நெகிழ்ந்ததும் என்னே நெஞ்சே


இளமையில் தந்தைக் காக
     ஏங்கிய தமது வாழ்வை
உளமதில் நினைத்தே அண்ணல்
     உருகிட லானார் நெஞ்சே


குழந்தைகள் நிலையை எண்ணிக்
     கொற்றவர் கொண்ட துன்பை
எழுதுவ தாமோ நெஞ்சே
     எல்லையில் துன்பம் நெஞ்சே


பேணுநர் இல்லா வண்ணம்
     பிள்ளைகள் தவிப்ப தைத்தான்
காணவும் முடியா வண்ணம்
     கலங்கிட லானார் நெஞ்சே

இத்தகைத் துன்பந் தன்னில்
     இருந்திட்ட நபிக ளுந்தான்
எத்தகை அயர்வும் இன்றி
     ஏகனை வணங்கி நின்றார்


வந்திடும் துயரை எல்லாம்
     வரவேற்போம் என்றே சொல்லி
விந்தைசேர் பணிகள் செய்த
     வீரமும் பெரிதே நெஞ்சே


பேரழகு வாய்ந்த பெருநபி

துணைவியை இழந்து நிற்கும்
     தூயவர் நிலையை றிந்தே
மணங்கொளப் பலர்நி னைந்தும்
     இருந்ததும் என்னே நெஞ்சே


எண்ணரும் அழகு வாய்ந்த
     ஏந்தலை அடைவ தற்குப்
பெண்களும் நினத்த தும்தான்
     பிழையென ஆமோ? நெஞ்சே

ஒப்பிலா அழகு வாய்ந்த
     உயர்குண வள்ள லுக்கே
ஒப்பிய துணையென் றாக
     உன்னினோர் சிலரோ? நெஞ்சே


அண்ணல்தாம் தெருவிற் சென்றால்
     அவருடை அழகைக் காண
எண்ணிலாக் கண்கள் பூத்தே
     இருந்ததும் என்னே நெஞ்சே


நடைக்கெனப் பார்ப்போ ருக்கும்
     நகைக்கெனப் பார்ப்போ ருக்கும்
உடைக்கெனப் பார்ப்போ ருக்கும்
     உள்ளமும் என்னே நெஞ்சே


ஏக்கமாய்ப் பார்ப்போர் சில்லோர்
     ஏக்கத்தை மறைத்துக் கொண்டு
நோக்காமல் நோக்கி ஆங்கே
     நொந்தவர் பலராம் நெஞ்சே

கொடுத்ததைத் திருப்பி வாங்காக்
     கொடையாளி கரத்தைப் போன்றே
விடுத்தகண் விடுத்த தாக
     வனிதையர் நின்றார் நெஞ்சே


குன்றனை தோளில் வீழ்ந்து
     குளித்தெழு கண்கள் ஆங்கே
சென்றுபின் ஒன்றைக் காணச்
     சிந்தைகொண் டிடுமோ? நெஞ்சே


அண்ணலின் முகத்தை நோக்கி
     அனைத்தயும் மறந்து நின்ற
கண்கள்தாம் ஒன்றோ நெஞ்சே?
     கணக்கதற் கில்லை நெஞ்சே


கட்டுடல் அழகு தன்னைக்
     கண்டுபின் கண்டு கண்டு
கட்டுண்டோர் தொகைக்கு மிங்கு
     கணக்கதும் இலையே நெஞ்சே

அழகெலாம் திரண்ட ஒன்றை
     அவரவர் காண்ப தைப்போல்
உழன்றஅந் நிலையை இங்கே
     உரைத்திட லாமோ நெஞ்சே


முடியினைக் கண்டோ ரெல்லாம்
     முடியையே காண்பார் நெஞ்சே
அடியினைக் கண்டோ ரெல்லாம்
     அடியையே காண்பார் நெஞ்சே


கையினைக் காண்போ ரெல்லாம்
     கையையே காண்பார் என்றால்
மெய்யதன் முழுமை கண்ட
     மென்கொடி யாரே? நெஞ்சே


அண்ணலின் முழுமை வண்ணம்
     அரிவையர் காணா ரேனும்
கண்பெற்ற பயனை எய்திக்
     களித்திட லானார் நெஞ்சே

ஆயிரம் நயனம் அண்ணல்
     அழகினைக் கண்ட போதும்
தாயனை நபியின் கண்கள்
     தரையையே நோக்கும் நெஞ்சே


உருவினில், ஒளியில் அண்ணல்
     ஓங்கியே ஒளிரு கின்ற
பெருமை‘ந பித்து வ’த்தால்
     பெற்றிட லானார் நெஞ்சே


இத்தகு நிலையில் அண்ணல்
     இடத்தினில் ஒருவர் வந்தே
புத்தொளிச் செய்தி ஒன்றைப்
     புகன்றிட லானார் நெஞ்சே


தன்துணை யைஇ ழந்து
     தக்கதோர் காப்பே இன்றி
இன்னலில் வீழ்ந்த ‘சௌதா’
     இல்நிலை கேட்டார் நெஞ்சே

தாய்மையின் நலத்தி னோடு
     தண்ணருள் பொழிந்த சௌதா
சேய்களின் நினைவைத் தூண்ட
     சிந்தனை செய்தார் நெஞ்சே


விதவையாம் சௌதா கொண்ட
     வேதனை யைத்து டைத்தே
உதவிட எண்ணங் கொண்ட
     ஒருவரும் உண்டோ? நெஞ்சே


கணவர்தான் இருக்கும் போதே
     களிப்புடன் இஸ்லாம் மார்க்கம்
இணைந்ததால் சௌதா வுக்கோ
     இன்னல்கள் பலவாம் நெஞ்சே


துன்பத்தைப் பொறுத்தி டாத
     தூதரும் - சௌதா கொண்ட
துன்பத்தைப் பொறுப்பா ராமோ?
     துடிதுடித் தாரே நெஞ்சே


குறைஷியர் அவருக் கீந்த
     கொடுமையைக் கண்ட அண்ணல்
நிறைவுடன் காப்ப தற்கு
     நினைத்திட லானார் நெஞ்சே


அண்ணலின் வேட்கை தன்னை
     அறிந்திட்ட சௌதா, வாய்த்த
புண்ணியம் தன்னை எண்ணிப்
     புளகமுற் றாரே நெஞ்சே


அண்ணலின் பணிகள் ஓங்க
     அருந்துணை யாகும் பேற்றை
எண்ணியே அடைந்த இன்பிற்
     கெல்லையுண் டாமோ? நெஞ்சே


குணவள்ளல் கவலை நீங்கக்
     குடும்பத்தைக் காப்போம் என்றே
மணங்கொள்ள இசைவ ளித்த
     மாண்பதும் என்னே நெஞ்சே

செல்வத்தில், அழகில் மிஞ்சும்
     சேயிழை யாரி ருக்க
அல்லலில் ஆழ்ந்த பெண்ணை
     அருமணங் கொண்டார் நெஞ்சே



இம்மணச் செய்தி கேட்ட
     இரக்கமில் பகைவர் கூடச்
செம்மன அண்ணல் பற்றிச்
     சிந்திக்க லானார் நெஞ்சே


வள்ளலின் உள்ளத் தின்கண்
     வாரிதி போலெ ழுந்த
உள்ளன்பின் ஆற்றல் கண்டே
     உவந்திட லானார் நெஞ்சே


வறியவன் புதையல் கண்ட
     வனப்பதைப் போன்றே சௌதா
நிறைவுற்ற மகிழ்ச்சி தன்னில்
     நீந்திட லானார் நெஞ்சே



பெறற்கரும் பேறாய் அந்தப்
     பெருங்குண சௌதா அன்பாய்
அறப்பணி ஆற்றி வந்த
     அருமையும் என்னே நெஞ்சே


இருவரும் இணைந்த தாலே
     இளமைசேர் குழந்தை யெல்லாம்
பெருங்களி கொண்ட தென்றே
     பேசவேண் டுங்கொல்! நெஞ்சே


துணைகொண்ட தூய வர்தான்
     தொடர்ந்ததும் பணிக ளாற்றி
இணையிலா இறைவன் மார்க்கம்
     இயம்பிட லானார் நெஞ்சே


அண்ணலின் நிழலைப் போல
     அபுபக்கர் இருந்தார் என்ற
உண்மையை நீதான் முன்பே
     உணர்ந்திருப் பாயே நெஞ்சே


அண்ணலின் உறவும் இன்னும்
     ஆலென ஊன்று தற்குப்
புண்ணியர் அவர்நி னைத்த
     நினை வைக்கேள் நெஞ்சே


தம்மரும் மகளாம் போற்றும்
     தனியெழில் ‘ஆயி ஷா’வை
செம்மலுக் கேய ளிக்க
     சிந்தைதான் கொண்டார் நெஞ்சே


நாயகம் இடத்தில் வந்தே
     நாட்டத்தை உரைக்க அண்ணல்
தூயவர் அன்பைத் தள்ளத்
     துணிந்திடு வாரோ நெஞ்சே


இளவய துடைய வர்க்கே
     இயல்புறு மதியும் நல்ல
தெளிவதும் இருக்கும் என்றே
     தேர்ந்திட லானார் நெஞ்சே


ஆகவே அவரைக் கொண்டால்
     அரும்பயன் உண்டா மென்றே
ஆகட்டும் கொள்வோம் என்றே
     அறைந்திட லானார் நெஞ்சே


ஆயிஷா தன்னை அன்பு,
     அறிவதற் காக ஏற்க
நாயகம் இசைவ ளித்தே
     நன்மணங் கொண்டார் நெஞ்சே


ஆயிஷா தன்னை கொண்ட
     அருமணச் சிறப்பு பற்றி
வாயினால் சொல்வ தாமோ
     வனப்புறு மணமாம் நெஞ்சே


நபியவர் உறவை நாமே
     நலமுடன் பெற்றோ மென்றே
அபுபக்கர் உள்ளத் தின்பை
     அளந்துரைப் பதுவோ நெஞ்சே


ஆயிஷா வாழ்வைப் பற்றி
     அபுபக்கர் எண்ணும் போது
நேயத்தின் வெற்றி என்றே
     நினைத்திட லானார் நெஞ்சே


உலகெலாம் போற்று கின்ற
     உத்தம நபிக ளுக்கு
நலமிகு துணைய ளித்த
     நலத்தினில் மகிழ்ந்தார் நெஞ்சே


அன்புறு வாழ்க்கை தன்னில்
     ஆயிஷா ஒளிர்வா ரென்றே
இன்புடன் எண்ணி எண்ணி
     இருந்திட லானார் நெஞ்சே


புண்ணியர் வாழ்வி னுக்குப்
     பொற்புறு பணிக ளாற்றும்
வண்ணத்தை மகளார் பெற்ற
     வாய்ப்பினால் மகிழ்ந்தார் நெஞ்சே


வாய்மையும் வாக்கும் போல
     வாழ்க்கையில் ஒன்றி அன்னார்
தூய்மைசேர் பணிபு ரிந்து
     துலங்கிட லானார் நெஞ்சே


அண்ணலின் துணைவி யாருள்
     ஆயிஷா ஒருவர் மட்டும்
கன்னிப்பெண் மற்றோ ரெல்லாம்
     கணவரை இழந்தோர் நெஞ்சே


விதவைகள் துன்பங் கண்டே
     வேந்தராம் நாய கம்தான்
உதவியே மகிழ்வ ளித்த
     உயர்வதும் என்னே நெஞ்சே


விதவைகள் துயரம் இந்த
     விரிவுல கத்தில் நீங்க
முதன்மையில் வழிவ குத்த
     முன்னவர் அவரே நெஞ்சே


இவ்வித மாக அண்ணல்
     இல்வாழ்க்கை மூல மாக
செவ்விய நெறிகள் தம்மைச்
     செய்திட லானார் நெஞ்சே


ஆசையை, பற்றை, இன்பை
     ஆய்ந்தவர் மெய்ம்மை கண்டு
மாசிலா மணியைப் போல
     மகிழ்ந்திட லானார் நெஞ்சே


துன்பத்தில், துயரந் தன்னில்
     துவண்டவர் மெய்ம்மை ஓர்ந்து
அன்பதன் பெருமை கண்டே
     அரும்பணி செய்வ தானார்


வாழ்க்கையின் எல்லை கண்டே
     வாய்மையின் விளக்க மாகி
ஆழ்ந்தநற் கருத்து முத்தை
     அளித்திட லானார் நெஞ்சே


வாழ்க்கையின் தத்து வத்தை
     வனப்புடன் மக்க ளுக்கு
வாழ்வாசா னாக நின்றே
     வழங்கிட லானார் நெஞ்சே


அன்னவர் மொழிகள் தம்மை
     அணுகியே கேட்டோ ரெல்லாம்
பின்பற்றத் தக்க கொள்கை;
     பிறிதில்லை என்றார் நெஞ்சே


கேட்டவர் எல்லாம் அண்ணல்
     கேண்மைக்கே அடிமை யாகி
நாட்டுக்கே மறும லர்ச்சி
     நல்கினார் என்றார் நெஞ்சே