பக்கம் எண் :

52

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

வெற்றியில் நிறைந்த வியத்தகு மேதை

அலி,பாத்திமாவின் அன்புத் திருமணம்


பத்ருவெற் றியினால் இஸ்லாம்
    பாங்குறு அரபின் கண்ணே
நித்திய வாழ்வைப் பெற்ற
    நிலையதை அறிவாய்! நெஞ்சே


குறைந்ததோர் பலத்தைக் கொண்டு
    குறைஷியர் தம்மை வென்றே
நிறைந்ததோர் வெற்றி கண்ட
    நீர்மையைப் பாராய்! நெஞ்சே


வியப்புறு வெற்றி என்றே
    விளக்கிடும் மக்கள் எல்லாம்
நயமுறு அண்ணல் மாண்பை
    நவின்றிட லானார் நெஞ்சே

அற்புதப் போரின் வெற்றி
    அண்ணலின் மாண்பு யர்த்த
பற்பலர் இஸ்லாத் துள்ளே
    பரிந்திணைந் திட்டார் நெஞ்சே


நாடெங்கும் பெருமா னாரின்
    நற்புகழ் மிதந்து செல்ல
பீடுறு ‘இஸ்லாம்’ மார்க்கம்
    பெருகிய தென்னே நெஞ்சே


இஸ்லாத்தின் மாண்பு ணர்ந்த
    எண்ணிலா மக்கள் நாளும்
விஸ்வாசத் தோடு சேர்ந்த
    விருப்பதும் பெரிதே நெஞ்சே


சேர்ந்தவர் எல்லாம் இஸ்லாம்
    சிறப்பினைக் கண்டார் நெஞ்சே !
சார்ந்தவர் எல்லாம் அண்ணல்
    சற்குணம் பூண்டார் நெஞ்சே

உயிர்கொண்ட இயக்க மாக
    உயரிஸ்லாம் அரபு நாட்டில்
பயிர்கொள்ளும் பசுமை கொண்டு
    பரவிய தென்னே நெஞ்சே

அலி,பாத்திமாவின் அன்புத் திருமணம்


வலியபத் ருப்போர் பற்றி
    வருணனை செய்யும் போதோ
அலியவர் வீரம் பற்றி
    அனைவரும் புகழ்ந்தார் நெஞ்சே


அண்ணலின் துணையாய் நின்றே
    ஆற்றல்சேர் போர்பு ரிந்த
திண்ணியர் என்றே மக்கள்
    செப்பிட லானார் நெஞ்சே


புலியெனப் போர்க்க ளத்தில்
    பொருதியே வெற்றி கண்ட
களிப்பினால் அலிய வர்தான்
    கவினொளி பெற்றார் நெஞ்சே

அலியவர் புகழாம் தென்றல்
    அண்ணலின் மகளாம் அந்தப்
பொலிவுடை *பாத்தி மாபால்
    போனதும் என்னே நெஞ்சே

*-பாத்திமா Fathima - அண்ணலார் அவர்களுக்கும் கதீஜா நாயகியார்க்கும் மூன்றாம் திருமகளாகப் பிறந்த அருமகளார்.


அலியவர் மாண்பும் மற்றும்
    அன்பதும் பண்பும் அந்த
ஒளிவிளக் கின்நெஞ் சத்தில்
    ஊன்றிய தென்னே நெஞ்சே


அன்னவர் வீரம் தன்னை
    அகத்தினில் எண்ணி எண்ணி
இன்னொளி சிந்தி ஆங்கே
    பாத்திமா இருந்தார் நெஞ்சே


வீரத்தால் புகழ டைந்த
    வியப்புறு அலிதான் அந்த
நேரிழை பாத்தி மாவின்
    நெஞ்சினில் நின்றார் நெஞ்சே

 

பாத்திமா அன்பும் பண்பும்
    பண்புறு அலியின் நெஞ்சில்
பூத்திருந் தேசி ரித்த
    பொலிவதும் என்னே நெஞ்சே

ஒருவரின் நெஞ்சில் மாறி
    ஒருவர்தாம் புகுந்தி ருந்து
கருதிடும் போதில் எல்லாம்
    களிப்படைந் தாரே நெஞ்சே

எழிலுடை பாத்தி மாவை
    ஏற்றமாய்க் கொள்வ தற்கே
முழுமைசேர் செல்வர் பல்லோர்
    முயற்சித்தல் பெரிதே நெஞ்சே


பற்பலர் நேரில் கேட்க
    பண்புறு அண்ண லாரோ
சொற்களை உதிர்க்கா வண்ணம்
    சோதனை செய்தார் நெஞ்சே


செம்மையில் நிலையில் ஆங்கே
    செல்வியக் கேட்கும் போது
தம்பெரும் எண்ணம் பற்றி
    அலியவர் தவித்தார் நெஞ்சே

அப்பெரும் எண்ணந் தன்னை
    அலியவர் அண்ண லின்பால்
எப்படி உரைப்ப தென்றே
    ஏங்கிட லானார் நெஞ்சே

ஓர்நாள்எவ் வுறுதி கொண்டோ
    உள்ளத்தை அண்ண லின்பால்
ஆர்வமாய்த் திறந்து சொல்லி
    அலியவர் நின்றார் நெஞ்சே

அண்ணல்அச் செய்தி தன்னை
    ஆர்வமாய்க் கொண்டு சென்று
கண்ணனை பாத்தி மாபால்
    கழறுவ தானார் நெஞ்சே

காணரும் பாத்தி மாஅக்
    களிப்புறு செய்தி கேட்டு
நாணத்தின் மௌனத் தாலே
    நற்பதில் தந்தார் நெஞ்சே

தன்னரும் மகளுக் கேற்ற
    தலைவரும் அலியே என்று
முன்னமே அண்ணல் கொண்ட
    முடிவதும் என்னே நெஞ்சே

மற்றையோர்க் கெல்லாம் மௌனம்
    சாதித்த வள்ளல் ஆங்கே
நற்பதில் அலியார்க் கீந்த
    நலமதும் பெரிதே நெஞ்சே

அன்புள்ள நெஞ்சங் கள்தாம்
    அன்பினால் ஒன்று சேர
இன்புறு மணமும் வைத்தார்
    இணைந்திட லானார் நெஞ்சே

சுவனத்தின் நினைவைச் சேர்க்கும்
    சுந்தரச் சாயல் பெற்றே
கவர்ந்திட்ட மணமன் றத்தின்
    கவினொளி பெரிதே நெஞ்சே

பூவும்நன் மணமும் போலப்
    பொன்னும்நல் ஒளியும் போலப்
பாவும்நற் பொருளும் போலப்
    பாங்குற்ற தென்னே நெஞ்சே

மகளுக்கு வாய்த்தி டாத
    மருமகன் வாய்த்தா ரென்றே
அகமெலாம் களிப்பி லாழ
    அண்ணலின் புற்றார் நெஞ்சே

பெருந்திரு வாகப் பெற்ற
    பெண்மணி பாத்தி மாவைப்
பெருமைசேர் மணம்செய் வித்துப்
    பேரின்பம் கொண்டார் நெஞ்சே

இப்பெரும் மணம் முடித்த
    இறைவனை நெஞ்சால் வாழ்த்தி
அப்பெரும் மக்க ளுக்கும்
    ஆசிகள் தந்தார் நெஞ்சே

வந்திருந் தோர்க ளெல்லாம்
    வாழ்த்தினர் வாழ்க! என்றே
சிந்தையில் இன்பங் கொண்டே
    சென்றிட லானார் நெஞ்சே!

பணத்திற்கு முதன்மை நல்கும்
    பாரகம் தன்னில் அண்ணல்
குணத்திற்கு மதிப்ப ளித்த
    குணமதை அறிவாய் நெஞ்சே


பெண்மனம் அறியா வண்ணம்
    பெரும்பிழை யாய்மு டிக்கும்
புன்மையைப் போக்கி வைத்த
    புதுமையைப் பாராய் நெஞ்சே

இருமனம் இயைவ தற்கே
    இறைதூதர் மதிப்ப ளித்த
பெருமையும் என்னே நெஞ்சே
    பெட்பதும் என்னே நெஞ்சே

மகளைக் கண்ட மாநபி

எண்ணரும் நலத்தி னோடு
    இருவரும் அறம்ந டத்த
அண்ணலார் மகளைக் காண
    அங்குசென் றாரே நெஞ்சே

தந்தையக் கண்ட தாலே
    தாங்கொணா இன்ப முற்றே
முந்திவந் தேஅ ழைக்க -
    முறுவலைக் கண்டார் நெஞ்சே

தன்னரும் மகளைக் கண்டே
    தண்ணருள் பொழிய ஆங்கே
உன்னரும் கணவர் பற்றி
    உரைக்க! என் றாரே நெஞ்சே

ஆண்டவன் அருளால் அன்னார்
    அன்பில்நல் உருவாய் என்னை
மாண்புடன் காக்கும் மாண்பை
    வடிப்பதோ என்றார் நெஞ்சே

மகள்இந்த வார்த்தை சொல்ல
    மாண்புறு அண்ண லாரோ
மிகவுமே களிப்ப டைந்து
    மெச்சிட லானார் நெஞ்சே

அன்புறும் நிலையில் கூடி
    அறமதை வளர்க்கும் போழ்தில்
இன்புறும் நிலைஉண் டென்றே
    இயம்பவேண் டுங்கொல் நெஞ்சே

மருகரை அருக ழைத்து
    மகிமைசேர் அண்ணல் சொன்ன
அருமுரை மாண்பு தன்னை
    அறைந்திடக் கேளாய் நெஞ்சே

அன்புறு மருக ரே!எம்
    அருமகள் பாத்தி மாவை
நன்குநீர் அறிவீர் அன்னார்
    நன்மணி என்றார் - நெஞ்சே

பாத்திமா மகிழ்வ டைந்தால்
    பரவசம் உறுவேன் நானே;
பாத்திமா கொள்ளும் துன்பைப்
    பாரேன்நான் என்றார் நெஞ்சே

கண்ணனை பாத்தி மாவைக்
    கண்ணிமை போன்றே நீவிர்
எண்ணியே பாது காக்க
    என்றிட லானார் நெஞ்சே

அண்ணலார் சொன்ன இந்த
    அருமுரை கேட்ட தும்தான்
திண்ணிய அலியார் சொன்ன
    திருமொழி கேளாய் நெஞ்சே

அண்ணலே! தாங்கள் சொன்ன
    அருமுரை யதனைக் கேட்டேன்
உண்மையைச் சொல்லு கின்றேன்
    உங்கள்முன் என்றார் நெஞ்சே

அன்புறு பாத்தி மாவை
    அருந்துணை யாகப் பெற்றேன்
உண்மையில் அதைஓர் பேறாய்
    உணர்கின்றேன் என்றார் நெஞ்சே

நேத்திரம் போன்றே யானும்
    நினைக்கின்றேன் என்றும் நானோ
பாத்திமா மாண்பைக் காத்தே
    பணிசெய்வேன் என்றார் நெஞ்சே

பண்புகள் இருக்கை யாக
    பாத்திமா பொலியக் கண்டேன்
உண்மையில் அவரைச் சொல்ல
    உரையுண்டோ ? என்றார் நெஞ்சே

திருமறை ஓதும் பண்பும்
    திருப்பணி செய்யும் மாண்பும்
பொருந்திய பாத்தி மாவின்
    பொற்பென்னே ! என்றார் நெஞ்சே

தன்புகழ் அதனை ஆங்கே
    தலைமறை வாகக் கேட்டே
இன்புற்ற பாத்தி மாவின்
    இயல்பதும் என்னே நெஞ்சே

பாத்திமா அலியை நோக்க -
    அலியைநம் அண்ணல் பார்க்க -
பூத்தன விழிகள் எல்லாம்
    பொலிவதும் என்னே நெஞ்சே

இருவரும் கொண்ட இன்பம்
    ஈருல கத்தில் இல்லா
பெருமைசேர் இன்ப மன்றோ ?
    பேரன்பைப் பாராய் நெஞ்சே