பக்கம் எண் :

55

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

வெற்றியில் நிறைந்த வியத்தகு மேதை

அகழிப் போர்


நிறைவுறும் இஸ்லாம் மார்க்கம்
    நீதமாய்ப் பரவக் கண்டே
குறைஷியர் கூட்டங் கொண்ட
    கோபமும் சிறிதோ! நெஞ்சே

தனித்துநாம் முஹம்ம தைத்தான்
    தடுத்திட முடியா தானால்
எனதுரை கேட்பீர்! என்றே
    அபுசுப்யான் எழுந்தார் நெஞ்சே


குறைஷியர் மட்டும் அந்தக்
    கொள்கையை எதிர்ப்ப தாலே
குறையுமோ? இதற்கோர் மாற்றம்
    கூறுவேன் என்றார் நெஞ்சே

நாம்மட்டும் எதிர்ப்ப தாலே
    நலமொன்றும் வாய்த்தி டாது;
ஆமாம்!பல் இனத்தா ரையும்
    அழைப்போம்நாம் என்றார் நெஞ்சே

அம்மொழி கேட்டோர் எல்லாம்
    ஆம்!அது சரியே என்ன-
வெம்பிய பிறரை எல்லாம்
    வேகமாய்ச் சேர்த்தார் நெஞ்சே

பிறஇனத் தலைவர் எல்லாம்
    பேசிய அபுசுப் யானின்
திறமையை மெச்சி அன்றே
    திரண்டிட லானார் நெஞ்சே!

    
அனைவரும் ஒன்று சேர்ந்தே
    அண்ணலை எதிர்ப்ப தற்கே
முனைந்துதான் செய்த அந்த
    முன்னேற்பாட் டைக்கேள்! நெஞ்சே

எரியிலே எண்ணெய் விட்ட
    எழுச்சியைப் போன்றே ஆங்கே
எரிகின்ற உள்ளங் கொண்டோர்
    எல்லாம்சேர்ந் தாரே நெஞ்சே

ஆத்திரப் பேச்சோர் பக்கம்
    அடங்காச்சீற் றம்ஓர் பக்கம்
நேத்திரம் நெருப்பைத் தாங்க
    நின்றிட லானார் நெஞ்சே

அரபெங்கும் திரண்ட இந்த
    அணியதோ ஆர்த்துப் பொங்கி
உரமிகு படையாய் ஆகி
    உறுமிய தென்னே நெஞ்சே


அபுசுப்யான் தலைமை பூண,
    *ஆயிரக் கணக்கில் வீரர்
குபுகுபு என்றே சேர்ந்து
    குழுமிட லானார் நெஞ்சே

* அபுசுப்யானின் தலைமையின் கீழ் இருபத்து நான்காயிரம் வீரர்கள் ஒன்று சேர்ந்து பெரும்படையாக நின்றனர்.

திரண்டது படையே; எல்லாம்
    தீர்ந்திடும் என்றார், மற்றும்
புரண்டிடும் எல்லாம் என்றே
    போர்க்கோலம் பூண்டார் நெஞ்சே

என்றைக்குப் போர்வி ருந்து
    என்றைக்கு? என்றே அன்னார்
நின்றிடும் செய்தி தன்னை
    நபிகளார் கேட்டார் நெஞ்சே

தோழர்கள் எல்லாம் கூடித்
    தொடர்ந்துமே ஆய்வு செய்தே
ஆழிய அன்பு டன்தான்
    அறைந்திட லானார் நெஞ்சே

பல்வேறு திட்டங் கள்தாம்
    பிறந்தன எனினும் அண்ணல்
*ஸல்மான்பார் ஸீ-திட் டத்தை
    சரியென்றே ஏற்றார் நெஞ்சே

* ஸல்மான்பார்ஸீ-இவர் ஒரு வெளி நாட்டவர். பாரசீகத்திலிருந்து அரபு நாடு வந்து இஸ்லாமில் இணைந்து கொண்ட உத்தம பக்தர்.

அன்னவர் உரையை இங்கே
    அறைந்திடக் கேளாய் நெஞ்சே
முன்னர்போல் போர்செய் யாமல்
    முன்நிற்போம் என்றார் நெஞ்சே

அகழிகள் வெட்ட வேண்டும்
    அதனுள்ளே நாமி ருநது்
பகைவரை வெல்வோம் என்றே
    பகர்ந்திட லானார் நெஞ்சே

அன்னவர் உரைத்த வண்ணம்
    அகழிப்போர் செய்வ தென்றே
உன்னத முடிவெ டுத்தே
    உவந்திட லானார் நெஞ்சே!

மதினாவச் சுற்றி மூன்று
    மருங்கிலும் மலைகள் மற்றும்
அதிபலம் வாய்ந்த கோட்டை
    அமைந்திருந் ததுவே நெஞ்சே

வடதிசை மருங்கில் மட்டும்
    வலிமைகொள் பாது காப்பாய்த்
தொடர்ந்துமே அகழி தன்னைத்
    தோண்டிட லானார் நெஞ்சே

இரவும்நற் பகலு மாக
    இருபது நாட்க ளில்தாம்
அரியதோர் அகழி தன்னை
    அமைத்திட லானார் நெஞ்சே

எதிரிகள் வருவ தும்தான்
    என்றைக்கு? என்றைக் கென்றே
அதிவேட்கை கொண்டே முஸ்லிம்
    அனைவரும் நின்றார் நெஞ்சே

குறைஷியர் தமை எதிர்த்தே
    குவித்திட அகழி யும்தான்
நிறந்ததோர் வசதி யென்றே
    நிதம்எதிர் பார்த்தார் நெஞ்சே

அன்றைக்கு மாலை வேளை
    ஆர்த்திடும் கடலைப் போல
வன்மனக் குறைஷி மக்கள்
    வந்திட லானார் நெஞ்சே

முகம்மதை முடித்தோம் என்றே
    முழங்கிய வண்ணம் அந்த
இகல்ஒலிப் படைகள் வந்த
    ஏற்றத்தைக் கேளாய் நெஞ்சே

குதிரையில் வீரர் கள்தாம்
    கூடியே வந்த போதும்
எதிருள்ள அகழி தன்னால்
    எல்லோரும் நின்றார் நெஞ்சே

தாண்டவே முடியா வண்ணம்
    தவித்தவர் நிற்க லானார்
காண்டற்கோ அரிய தான
    காட்சிஎன் றுரைத்தார் நெஞ்சே


தந்திர மாக நம்மை
    தகர்த்திட முஸ்லிம் மக்கள்
இந்தநல் அகழி தன்னை
    எழுப்பினர் என்றார் நெஞ்சே


இனியாது செய்வோ மென்றே
    இன்னலால் தலைவ ரெல்லாம்
குனிந்துமே நின்ற தைத்தான்
    கூறுவ தாமோ? நெஞ்சே


எத்தனை தந்தி ரத்தை
    இவர்கள்கற் றுள்ளார் என்றே
அத்தனை பேரும் கொண்ட
    ஆத்திரம் சிறிதோ? நெஞ்சே

வந்தது வந்து விட்டோம்
    வந்தநாம் திரும்ப லாமோ?
சிந்தையில் குழப்ப மின்றிச்
    செய்கபோர்! என்றார் நெஞ்சே

அகழியின் அப்பால் நின்ற
    அவர்கள்தாம் முஸ்லிம் மீது
பகழிப்போர் செய்வ தற்கே
    பாய்ந்திட லானார் நெஞ்சே

மூவாயி ரம்பேர் கொண்ட
    முழுமைசேர் படையைக் கொண்டே
காவல்கொள் போரை அண்ணல்
    கடமையால் செய்தார் நெஞ்சே


தொடர்ந்த போரே அண்ணல்
    துணிவினால் அவர்கள் எண்ணம்
இடிந்ததே, குறைஷி யர்கள்
    இறங்கிட லானார் நெஞ்சே

மலர்ந்ததோர் முகத்தி னோடு
    மளமள என்று வந்தோர்
உலர்ந்ததோர் முகத்தி னோடே
    ஓடிட லானார் நெஞ்சே


வென்றதால் முஸ்லிம் மக்கள்
    விளங்கிட லானார், அண்ணல்
நிறைந்தஅல் லாஹ்வின் மாண்பை
    நெஞ்சினால் புகழ்ந்தார் நெஞ்சே


இறைவனின் துணையால் நாமும்
    இந்தநல் வெற்றி பெற்றோம்
குறைஷியர் சென்றார் என்றே
    கூறிட லானார் நெஞ்சே

தோல்வியால் குறைஷி மக்கள்
    தொங்கிய முகத்தி னோடு
பால்நிலா இல்லா வானப்
    பான்மையில் சென்றார் நெஞ்சே


என்னென்ன செய்த போதும்
    எதிரிநாம் முகம்ம தைத்தான்
வென்றிட முடிய வில்லை
    வேதனை என்றார் நெஞ்சே


புழுங்கிய நெஞ்சத் தோடு
    போரிட்ட தலைவ ரெல்லாம்
விழுங்கினர் துன்பந் தன்னை
    வெட்கம்கொண் டாரே நெஞ்சே


காற்றினுக் கசையா வண்ணம்
    கண்ணுக்கு விருந்த ளிக்கும்
ஆற்றல்சேர் மலையாய் அண்ணல்
    அரும்பணி செய்தார் நெஞ்சே


நாளுக்கு நாள்தான் அண்ணல்
    நற்புகழ் பெருகிச் செல்ல
ஆளும்நல் இஸ்லாம் எங்கும்
    அடைந்தசீர் என்னே நெஞ்சே

அகழிப்போர் அண்ண லுக்கே
    அழியாத கீர்த்தி நல்க
மிகமிகப் பெருமை தன்னை
    மதினாகொண் டதுவே நெஞ்சே


அண்ணலைப் பெற்ற தும்தான்
    அரும்பெரும் பேறாம் என்றே
எண்ணியே மதினா கொண்ட
    ஏற்றமும் என்னே நெஞ்சே


வெற்றிப்பண் பாடி வந்த
    வியப்புறு இஸ்லாம் தன்னை
உற்றுமே இன்பங் காண
    ஒருசிலர் வந்தார் நெஞ்சே


இஸ்லாத்தின் கோட்டை யாக
    இணையில்லா மதினா வும்தான்
விஸ்வாசங் கொண்டு நின்ற
    விந்தையும் என்னே நெஞ்சே

பற்பலர் இஸ்லாத் தோடு
    பாசமாய்ப் பிணைந்தார் நெஞ்சே
அற்புத இஸ்லாம் மார்க்க
    ஆற்றலைப் பாராய் நெஞ்சே


தாயகம் தன்னை விட்டுத்
    தனித்துமே வந்தோ ருக்குத்
தாயகம் தன்னைக் காணும்
    தாகம்வந் ததுவே நெஞ்சே!


அண்ணல்பால் அதனைச் சொல்ல
    அண்ணலும் அனும தித்தார்
எண்ணத்தில் தோழர் கொண்ட
    ஏற்றத்தைக் கேளாய் நெஞ்சே


ஈரேழு நூற்று மக்கள்
    எழுந்தனர் மக்கா விற்கே
வாராரோ என்றே அங்கே
    வாடினர் குறைஷி மக்கள்

கேட்டவர் ஓய்ந்தே ஆங்கே
    கிடந்திடு வாரோ? தூதால்
நீட்டினர் தடைய அன்னார்
    நெஞ்சமும் என்னே நெஞ்சே


போரைத் தவிர்த்த புண்ணியர்

கஃபாவைக் காணச் சென்று
    கடியபோர் செய்வ தாமோ?
அஃதொன்றும் வேண்டாம் என்றே
    அண்ணல்தாம் உரைத்தார் நெஞ்சே


இறைவனின் பேரால் நாமும்
    இழிவகைப் போர்செய் தல்தான்
முறையாகா தென்ற அண்ணல்
    மொழியினைப் பாராய் நெஞ்சே!


ஒப்பிலா அண்ண லும்தான்
    ஓர்உடன் படிக்கை செய்தே
அப்பொழு தேம தீனா
    அடைந்திட லானார் நெஞ்சே