பக்கம் எண் :

56

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

வெற்றியில் நிறைந்த வியத்தகு மேதை

ஹுதைபிய்யா உடன்படிக்கை

இடர்மிகு அவர்க ளின்பால்
இன்புடன் செய்து கொண்ட
உடன்செய்த ஒப்பந் தத்தை
உரைத்திடக் கேளாய் நெஞ்சே


உடன்படிக்கையின் சுருக்கம் வருமாறு:- இவ்வருடம் மக்காவிற்குள் முஸ்லிம்கள் நுழையாது திரும்பி விடவேண்டும். அடுத்த ஆண்டு மக்காவுக்கு “ஹஜ்ஜு” செய்வதற்காக வரலாம். ஆனால் மூன்று நாட்களுக்குமேல் மக்காவில் தங்கக்கூடாது. வரும்போது ஒவ்வொருவரும் ஒரே ஒரு வாளை மட்டும் உரைக்குள் வைத்திருக்கவேண்டும்.

மக்காவில் தங்கி வாழும் முஸ்லிம்கள் மதீனாவுக்குச் செல்ல விரும்பினால் அவர்களை அழைத்துச் செல்வது கூடாது. வந்த முஸ்லிம்களில் யாரேனும் மக்காவில் இருந்து வாழ விரும்பினால் அதற்கு முஸ்லிம்கள் தடைவிதிக்கக் கூடாது. எவரேனும் மக்காவிலிருந்து மதீனா சென்றால் அவர்கள மக்காவிற்கே திருப்பி அனுப்பிவிடவேண்டும். மதீனாவிலிருந்து யாரும் மக்காவிற்கு வந்தாலோ அவர்களைத் திருப்பி அனுப்ப இயலாது.

ஒரு கட்சியினர் பிற கட்சியினரின் ஆதரவு பெற்றவர்களுக்கு எதிராக ஆயுதம் எடுக்கக் கூடாது.

கொடுமைகள் செய்த அந்தக்
    குறைஷியர்க் கெல்லாம் விட்டுக்
கொடுப்பதைப் போன்றே ஒத்துக்
    கொண்டதும் வியப்பே நெஞ்சே

கொடுமைகள் செய்வோர் பாலும்
    குணமுடன் இணங்கிச் சென்ற
நடுநிலைக் கொள்கை அண்ணல்
    நல்லுளம் பாராய் நெஞ்சே

தீயவர் என்ற போதும்
    திருத்தியே பார்ப்போம் என்றே
தூயநம் அண்ணல் கொண்ட
    துணிவதும் பெரிதே நெஞ்சே


நன்மைகள் குறைவென் றாலும்
    நல்லுள்ள முஸ்லிம் மக்கள்
புன்மைசெய் அவர்பால் அன்பு
    புரிந்ததும் பெரிதே நெஞ்சே

குறைஷியர் கூட்டத் திற்குக்
    குணமுடன் விட்டுத் தந்தே
நிறைவுறு புகழைக் கொண்ட
    நேர்மைக்கீ டுண்டோ? நெஞ்சே

விட்டுநாம் கொடுப்ப தாலே
    வெறுத்திடும் அவர்கள் அன்பில்
கட்டுண்டு வருவார் என்றே
    கருதிட லானார் நெஞ்சே


அண்ணல்தாம் நெஞ்சில் இந்த
    அன்புறு எண்ணங் கொண்டே
கண்ணிய மாகச் செய்த
    கனிவதைப் பாராய் நெஞ்சே


வேற்றுமை குறைந்து போக
    வேதனை எல்லாம் தீர
ஏற்போம்இவ் விதியை என்றே
    எண்ணிட லானார் நெஞ்சே

ஒப்பந்த முடிவைப் போல
    உறவினர் தம்மைக் காண
அப்பொழு திருந்தே அன்னார்
    அங்குவந் தாரே நெஞ்சே

மதினாவை வந்து பார்த்தே
    மனத்தினில் குறைஷி மக்கள்
புதியஓர் மாற்றங் கண்டே
    போய்வர லானார் நெஞ்சே

ஆண்டுகள் செல்லச் செல்ல
    அங்குவந் தோரில் பல்லோர்
வேண்டியே இஸ்லாம் தன்னை
    விருப்புடன் ஏற்றார் நெஞ்சே

நபிசெய்த ஒப்பந் தத்தின்
    நற்பயன் அதனை அன்றே
நபியவர் தோழ ரெல்லாம்
    நன்குணர்ந் தாரே நெஞ்சே

இஸ்லாமாம் திரு விளக்கு
    இலங்கிடும் மாண்பு கண்டே
விஸ்வாசம் கொண்ட மக்கள்
    வியந்திட லானார் நெஞ்சே