பக்கம் எண் :

62

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

பாரினை வென்ற பண்புடைச் செம்மல்

இறுதி ஹஜ்ஜு யாத்திரை

கஃபாவின் தொழுகைக் காகக்
    காத்துமே இருந்தோ ரெல்லாம்
அஃதுமோர் வாய்ப்பாய் எண்ணி
    அணியாக லானார் நெஞ்சே


அண்ணலின் தலைமை யின்கீழ்
    ஆங்கொரு லட்சத் தோடும்
எண்ணிரு பத்து நான்கு
    ஆயிரர் இணைந்தார் நெஞ்சே

 

அண்ணல்தம் மனைவி மக்கள்
    அக்குழு தன்னில் சேர
எண்ணிலா அக்கூட் டத்தை
    எடுத்துரைப் பதுவோ ? நெஞ்சே


அண்ணல்தம் பின்னே செல்லும்
    அரும்பேறு பெற்றோ ரெல்லாம்
எண்ணிய எண்ணந் தன்னை
    எடுத்துரைக் கக்கேள் ! நெஞ்சே


அப்பேறு பெற்றோ ரெல்லாம்
    அரும்பேறு பெற்றோ ரன்றோ ?
அப்பேறு வாய்ப்ப தும்தான்
    அரியது தானே நெஞ்சே


ஒட்டக அணிகள் ஆங்கே
    ஒய்யார மாகச் செல்ல
மட்டிலா இன்பத் தோடு
    மக்கம்சென் றடைந்தார் நெஞ்சே


அகமதும் புறமும் ஒன்றே
    ஆண்டவ ! என்ப தைப்போல்
மிகநல்வெண் தூய ஆடை
    மேனியில் பூண்டார் நெஞ்சே

அண்ணலின் தலைமை யின்கீழ்
    அலைகடல் ஒத்தோர் கஃபா
முன்னர்தான் நின்ற அந்த
    முழுமையும் என்னே நெஞ்சே

ஓரிழை மணியைப் போல
    ஓர்தாயின் மக்கள் போல
சீர்மையாய் அவர்கள் எல்லாம்
    சிரம்தாழ்த்த லானார் நெஞ்சே

அனைவரும் தொழுத பின்னர்
    அண்ணல்தாம் அவர்க ளுக்குக்
கனிவுடன் எடுத்து ரைத்த
    கனிமொழி கேளாய் நெஞ்சே

 

மேன்மைசேர் மக்காள் ! உம்மை
    மீண்டும்நான் சந்திப் பேனோ ?
நான்அதை உணரேன் ; சிலவே
    நவிலுவேன் என்றார் நெஞ்சே

இத்திரு நாளின் மாண்பை
    எல்லோரும் அறிவீ ராமோ ?
அத்திரு வல்லோ னுக்கே
    அளிக்கும்நாள் என்றார் நெஞ்சே

இந்தநாள் புனித மக்கம்
    இந்தநல் இறைவன் மாதம்
இந்தநாள் என்றென் றைக்கும்
    இனியநாள் என்றார் நெஞ்சே

இன்றுபோல் என்றும் நீங்கள்
    இன்றுள்ள ‘உரிமை’ கொண்டே
என்றுமே காப்பாய் வாழ்தல்
    இனியதென் றுரைத்தார் நெஞ்சே

 

வட்டியை வாங்க வேண்டாம்
    நானும்என் சிறிய தந்தை
வட்டியை நீக்கி விட்டேன்
    என்றுரை செய்தார் நெஞ்சே

அறியாமை யாலே கொண்ட
    அக்ரமச் செயலை எல்லாம்
புரியாதீர் ! என்றும் ஆங்கே
    புகன்றிட லானார் நெஞ்சே !

வணக்கத்துக் குரியோன் ஏகன்
    வாழ்த்துக்கும் உரியோன் ஏகன்
இணக்கமாய் இதனை என்றும்
    ஏற்க : என்றாரே நெஞ்சே

உம்மரும் துணவி மாரை
    உயர்வாகக் காத்து வாழ்க !
உம்முடை உரிமை எல்லாம்
    உண்டவர்க் கென்றார் நெஞ்சே

 

அடுத்தவர் எளியா ரேனும்
    அவரையும் காத்து நீங்கள்
உடுப்பதை - உண்ப தைத்தான்
    உதவுக ! என்றார் நெஞ்சே

ஒருவருக் கொருவர் நீங்கள்
    உடன்பிறப் பாக வாழ்வீர் !
வரும்இதில் பெருமை என்றே
    வள்ளலும் சொன்னார் நெஞ்சே

மனிதர்தம் உரிமை தன்னை
    மாய்க்கவே நினைக்க வேண்டாம்
புனிதஞ்சேர் உரிமை தன்னைப்
    போற்றுக ! என்றார் நெஞ்சே

அன்புள்ள மக்காள் உம்பால்
    அணுகிநான் கேட்க லானேன்
என்பால்நீர் சொல்வீ ராமோ ?
    என்றுமே கேட்டார் நெஞ்சே

 

இறைவனின் ஆணை யைநான்
    இனிதாய்ச்செய் தேனா ? என்றே
இறுதியில் இறைவன் கேட்டால்
    என்சொல்வீர் ? என்றார் நெஞ்சே

ஆம் !நீவிர் அறிவித் தீர்கள் ;
    ஆம்! நிறை வாக்கித் தந்தீர்
யாம்இதைச் சொல்வோம் என்றே
    யாவரும் சொன்னார் நெஞ்சே

முழங்கிடும் கடலைப் போல
    மொய்த்தஅம் மக்கள் ஆங்கு
வழங்கிய குரலைக் கேட்டே
    வள்ளலின் புற்றார் நெஞ்சே


உணர்ச்சியில் ஆழ்ந்த வள்ளல்
    உரத்ததோர் குரலில் ஆங்கே
இணக்கமாய் எடுத்து ரைத்த
    இன்மொழி கேளாய் நெஞ்சே

 

இறைவனே ! நீயே சான்றாய்
    இதற்குளாய் என்றே மூன்று
முறைசொன்ன காம்பீர் யத்தை
    மொழிந்திட லாமோ ? நெஞ்சே

இன்னுரை தந்த அந்த
    இமைப்பினில் ‘ஜிப்ரீல்’ வந்தே
பொன்இறை வாச கத்தைப்
    புகன்றதும் வியப்பே நெஞ்சே

உம்மரும் நெறியை இன்றே
    உமக்கென நிறைவு செய்தோம் ;
எம்மருள் உங்கள் மீது
    நிறைந்ததே என்றான் நெஞ்சே


இஸ்லாம்ஓர் இயற்கை மார்க்கம்
    இதனைநும் நெறிய தாக
விஸ்வாசத் தோடு ஏற்றேன்
    விழைக !என் றுரைத்தான் நெஞ்சே

 

இறைவனின் இன்ப மிக்க
    இச்செய்தி யாலே அண்ணல்
கரையிலா ஆனந் தத்தில்
    களித்திட லானார் நெஞ்சே

அப்பெரி யோனும் என்றன்
    அரும்பணி முடிந்த தற்கே
ஒப்புதல் தந்தான் என்றே
    உவந்திட லானார் நெஞ்சே

அண்ணலின் உரையை ஆங்கே
    ஆழிபோல் ஒருவர் ஆர்க்க
எண்ணிலா அந்தக் கூட்டம்
    எங்கும்கேட் டதுவே நெஞ்சே

உருக்கமும் ஒளியும் வாய்ந்த
    உரையிதை ஆங்கு வந்தே
நெருக்கமாய் நின்றோர் நெஞ்சில்
    நிறுத்திக்கொண் டாரே நெஞ்சே