பக்கம் எண் :

63

NABIGAL  
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

பாரினை வென்ற பண்புடைச் செம்மல்

மன நிறைவு பெற்ற மாநபி


இறைவனின் இறுதி ஆணை
    இயம்பிய பொருளில் நெஞ்சில்
நிறைநபி மணியாய் நின்ற
    நேர்த்தியும் என்னே நெஞ்சே

மனநிறைவோடு மதீனா திரும்பினார்கள்
மாநபி அவர்கள்


மக்கத்தில் இருந்தே வள்ளல்
    மதினாவந் தடைய மக்கள்
எக்களிப் போடு கொண்ட
    ஏற்றமும் பெரிதே நெஞ்சே

மாநபி யாலே வந்த
    மாண்பினால் - மகிழ்ச்சி தன்னால்
ஆனநல் தோழர் கொண்ட
    ஆனந்தம் சிறிதோ ? நெஞ்சே

பெரும்புகழ் எங்கும் தேங்கப்
    பிறங்கிய நபிக ளும்தான்
அறுபத்து மூன்றாம் ஆண்டை
    அணுகிட லானார் நெஞ்சே

எப்பணிக் காக என்னை
    இறைவரு வித்தா னாமோ
அப்பணி முடிந்த தென்றே
    அண்ணலும் நினைந்தார் நெஞ்சே

இறைவனின் பணிகள் எல்லாம்
    இனிதாக முடிய-தம்மை
இறைவனும் அழைப்ப தென்றோ ?
    என்றெண்ண லானார் நெஞ்சே

அல்லாஹ்வை அடைவ தொன்றே
    அடுத்துள தாகும் என்றே
வள்ளலும் இன்பங் கொண்ட
    வனப்பதும் என்னே நெஞ்சே

முதுமையின் தளர்ச்சி யாலே
    முழுவலி இழந்த அண்ணல்
இதயத்தின் வேட்கை தன்னை
    இயம்பக்கேட் டாயோ நெஞ்சே

உடல்நலம் குறைந்த போதும்
    ஒப்பிலாத் தொழுகைக் கண்ணல்
திடமுடன் சென்று வந்த
    தேசதும் என்னே நெஞ்சே

ஒருநாள்நற் காய்ச்ச லாலும்
    உறுத்திய மயக்கத் தாலும்
பெரிதும்நம் அண்ணல் துன்பம்
    பெற்றிட லானார் நெஞ்சே

அந்தஓர் நிலையில் கூட
    அண்ணல்தாம் பள்ளி மேவ
அந்தமாய் அபுபக் கர்தான்
    அங்கொளி தந்தார் நெஞ்சே

தொழுகையை அவர்ந டத்தும்
    தூய்மையைக் கண்ட அண்ணல்
விழுமிய இன்பங் கொண்டே
    விம்மித முற்றார் நெஞ்சே

தான்சென்ற பின்னர் நாட்டில்
    தன்வழித் தோழர் கள்தான்
பான்மையாய் உழைப்பார் என்றே
    பரவசம் உற்றார் நெஞ்சே

நமக்குப்பின் ‘இவர்கள்’ என்ற
    நம்பிக்கை கொண்ட அண்ணல்
சுமக்கொணா இன்பந் தன்னைத்
    துய்த்திட லானார் நெஞ்சே

காய்ச்சலோ அண்ண லுக்குக்
    கணக்கிலாத் துன்பம் ஊட்டக்
காய்ச்சலால் அண்ண லும்தான்
    கஷ்டமுற் றாரே நெஞ்சே

வருத்திய காய்ச்ச லோடும்
    வாய்மைசேர் அண்ணல் ஓர்நாள்
விரும்பிய தொழுகைக் காக
    விரைந்ததைக் கேளாய் நெஞ்சே

 

அண்ணலார் வந்தார் என்ற
    அன்புறு செய்தி கேட்டே
எண்ணிலா மக்கள் ஆங்கே
    ஏகிட லானார் நெஞ்சே

கூடிய மக்கள் தம்மைக்
    கூர்ந்துமே நோக்கி அண்ணல்
நாடியே உரைத்த வற்ற
    நவின்றிடக் கேளாய் நெஞ்சே

உங்களின் முன்னோர் செய்த
    உதவாத செயலை எல்லாம்
இங்கினிக் கொள்ள வேண்டாம்
    என்றுரை செய்தார் நெஞ்சே

தலைவர்கள் அடக்கம் ஆன
    தனியிடம் அதனை உங்கள்
தலைதாழ்த்தும் இடமாய் ஆக்கல்
    தவறென்று சொன்னார் நெஞ்சே

 

ஆறறி வதனைப் பெற்றோர்
    அன்புறு வணக்கத் திற்கே
ஓரிரை ‘அல்லாஹ்’ வன்றோ
    உரியவன்! என்றார் நெஞ்சே

உருக்கமாய் மக்க ளுக்கே
    உரையிதைத் தந்த பின்னர்
பெருக்கிய பேரு ணர்வைப்
    பேசிடக் கேளாய் நெஞ்சே

உங்களில் யாருக் கேனும்
    உரியநும் கடன்கொ டுக்க
இங்குநான் மறந்தி ருப்பின்
    இயம்புக! என்றார் நெஞ்சே

உங்களில் யாருக் கேனும்
    உரையாலோ, செயலா லோநான்
பங்கங்கள் இழைத்தி ருப்பின்
    பகருக! என்றார் நெஞ்சே

 

நாளைதான் இறைவன் முன்னம்
    நான்தலை குனியா மல்இவ்
வேளையே உம்முன் கேட்டே
    வேண்டினேன் என்றார் நெஞ்சே

உரையிதன் பொருள்பு ரிந்தோர்
    உண்மையை உணர லானார்
கரையிலாத் துயரத் தாலே
    கலங்கிட லானார் நெஞ்சே

அண்ணலைக் காய்ச்ச லும்தான்
    அதிகமாய்த் துன்பு றுத்த
அண்ணலைச் சுற்றி ஆங்கே
    அனைவரும் சூழ்ந்தார் நெஞ்சே

அன்புறு மனைவி யர்தாம்
    அழகுறு மக்க ளோடு
துன்புறு நிலையில் ஆங்கே
    துவண்டிட லானார் நெஞ்சே

 

ஆயிஷா மற்றுள் ளோரும்
    அருமகள் பாத்தி மாவும்
தூயஅண் ணலையே நோக்கித்
    துடித்திட லானார் நெஞ்சே

மயக்கமும் தெளிவும் வந்தே
    மாறியே துன்ப மூட்ட
மயங்கிய நிலையில் அண்ணல்
    மாதுன்பம் உற்றார் நெஞ்சே


ஆயிஷா மடியில் அண்ணல்
    அன்புடன் படுத்தி ருக்கத்
தூயநம் அண்ணல் நெஞ்சில்
    துலங்கிய திதுவோ? நெஞ்சே

ஆண்மைசேர் அண்ணல் வாழ்வின்
    அத்துணை நிகழ்ச்சி யும்தான்
மாண்புடன் மனத்தில் தோன்றி
    மறைந்ததோ? சொல்வாய் நெஞ்சே



ஆடிடும் இளமை வாழ்வில்
    அரியபா லைவ னத்தில்
ஆடுகள் மேய்த்து நின்ற
    அக்காட்சி தோன்றும்? நெஞ்சே


தந்தைகல் லறையைக் காணத்
    தாயுடன் சென்ற காட்சி
சிந்தையில் வந்தே துன்பம்
    செய்ததோ? அறியோம் நெஞ்சே


பாட்டனார் முத்த லீபின்
    பாங்குறு அணைப்பில் வாழ்ந்த
நாட்டஞ்சேர் காட்சி எல்லாம்
    நகர்ந்துவந் ததுவோ? நெஞ்சே


மக்கத்து மதியாம் அந்த
    மாண்புறு கதிஜா வைத்தாம்
அக்காலம் மணந்த காட்சி
    அடுத்துவந் ததுவோ? நெஞ்சே

 

தேன்மொழிச் செல்வங் கள்தாம்
    தெளித்தநல் மொழிகள் கேட்டுப்
பான்மையாய் இருந்த வாழ்வின்
    பசுமைதோன் றியதோ? நெஞ்சே

ஹிராமலைக் குகையில் தங்கி
    இறைநபிப் பட்டம் பெற்ற
அரியஅக் காட்சி எல்லாம்
    அடுத்துவந் ததுவோ? நெஞ்சே


அஞ்சியே குகையி னுள்ளே
    அபுபக்க ரோடு செல்ல
மிஞ்சிய மேலோன் காத்த
    மேன்மைதோன் றியதோ? நெஞ்சே


நேயஞ்சேர் பிரசா ரத்தில்
    நெஞ்சிலா ராலே அன்று
தாயிபில் கண்ட துன்பம்
    தானும்வந் ததுவோ? நெஞ்சே


இடையிலே கண்ட தான
    இன்னல்கள் எல்லாம் நெஞ்சில்
படர்ந்துமே வந்து தோன்றிப்
    பறந்ததோ? சொல்வாய் நெஞ்சே

தாயகம் நீத்துச் சென்று
    தாம்மதீ னாபு குந்த
தூயஅக் காட்சி எல்லாம்
    தோன்றிய தாமோ ? நெஞ்சே


செய்தபல் பணிகள் தாமும்
    செய்ததற் காப்புப் போரும்
மெய்யான இறைவன் அன்பும்
    மெல்லவே தோன்றும்? நெஞ்சே

அணிஅணி யாக மக்கள்
    அன்புடன் இஸ்லாம் மார்க்க
அணியினில் சேர்ந்த தும்தான்
    அடுத்துவந் ததுவோ? நெஞ்சே

 

மக்காவின் வெற்றி தானும்
    மாண்புறு ஹஜ்ஜைச் செய்த
அக்களிப் பான இன்பும்
    அக்கணம் தோன்றும்? நெஞ்சே


மனமெனும் திரையில் இந்த
    மாபெரும் காட்சி எல்லாம்
கணத்தினில் தோன்றித் தோன்றிக்
    கழிந்ததோ? சொல்வாய் நெஞ்சே


மாபெரும் வாழ்வின் அந்த
    மனத்திரை ஓவி யங்கள்
பாபெறும் வரலாற் றைத்தான்
    படைத்ததாம் அன்றோ ! நெஞ்சே


அவைகளை அண்ணல் எண்ணி
    அமைதியும் நிறைவும் கொண்டே
இவையெலாம் இறைவ னுக்கே
    என்றெண்ண லானார் நெஞ்சே


வல்லவன் தூதாய் வந்த
    வனப்புறு வள்ளல் மேனி
சில்லிடச் சூழ்ந்தி ருந்தோர்
    சிந்தனை செய்தார் நெஞ்சே


அண்ணல்மேல் அந்த வேளை
    அழகிய ஒளிதான் மேவ
எண்ணிலா வியப்பில் ஆங்கே
    எல்லோரும் பார்த்தார் நெஞ்சே


எதிர்பாரா வண்ணம் மற்றும்
    இன்மண வாடை கள்தாம்
அதிகமாய் மேவி வந்த
    அதிசயம் கேளாய் நெஞ்சே


புகழ்மணம் வீசும் அண்ணல்
    புகுந்திட இருக்கும் சொர்க்கத்
தகுமணம் அங்கு வந்தே
    தவழ்ந்ததோ? சொல்வாய் நெஞ்சே


வருகவே ! வருக ! வென்று
    வானவர் வந்த ழைக்க
நறுமண வாடை யும்தான்
    நலம்தந்த தாமோ நெஞ்சே


சூழ்ந்திருந் தோர்கள் எல்லாம்
    சுந்தர நபிமு கத்தை
ஆழ்ந்துமே நோக்கி நோக்கி
    அதிசயம் கொண்டார் நெஞ்சே

இன்புற்ற அண்ண லும்தான்
    இறைவா! என் ‘உயர்ந்த தோழா!’
நின்னன்பே அன்பாம் என்று
    நெகிழ்ந்துரை செய்தார் நெஞ்சே


இறையன்பும் அண்ணல் அன்பும்
    இன்புடன் கலந்த அந்த
நிறைவினில் உதிர்ந்த சொல்லோ?
    நீஅதைச் சொல்வாய் நெஞ்சே

 

உன்னிடம் வருகின் றேன்நான்
    உடன்வரு கின்றேன் என்றே
முன்னிலும் மும்ம டங்கு
    முகமலர்ந் துரைத்தார் நெஞ்சே


உரையிதை உதிர்த்த பின்பே
    ஓர்நொடி கழிய கண்ணின்
திரையதும் வீழ அண்ணல்
    திருவாய்மூ டியதே நெஞ்சே


மானுட வர்க்கத் திற்கு
    மாபெரும் ஒளிய ளித்த
வான்விளக் கணைந்த தந்தோ!
    வருத்தத்தைக் கேளாய் நெஞ்சே

ஆர்த்திட்ட அன்பின் ஆழி
    அடங்கிய தென்னே நெஞ்சே !
ஈர்த்தொளி நல்கும் கண்கள்
    இமையாத தென்னே நெஞ்சே


அருளதன் அருவி யும்தான்
    அமைந்ததும் என்னே நெஞ்சே!
கருணையின் ஓவி யம்தான்
    கலைந்ததும் என்னே நெஞ்சே


நீதியின் குரலும் ஓய்ந்தே
    நின்றதும் என்னே நெஞ்சே!
மேதினிக் குரிய செல்வம்
    மெல்லஓய்ந் ததுவே நெஞ்சே


பெருமைசேர் நபிகள் நாதர்
    பிரிந்ததை எண்ணி ஏங்கி
வருந்துகின் றாயோ நெஞ்சே?
    வாடுகின் றாயோ? நெஞ்சே


அமைதியின் வடிவம் அண்ணல்
    அகன்றிடு வாரோ? நெஞ்சே!
அமைதியைத் தந்த அண்ணல்
    அகத்துளா ரன்றோ? நெஞ்சே


மறக்கொணாக் கொள்கை யாலே
    மனம்புகுந் தாரே நெஞ்சே!
சிறப்புடைக் கொள்கை யாலே
    சிரஞ்சீவி யானார் நெஞ்சே


உயிர்விடுங் காலை அண்ணல்
    உறுப்புக்கள் யாவும் கொண்ட
உயர்வான அமைப்பு தன்னை
    உரைத்திடக் கேளாய் நெஞ்சே


அந்தந்த இடத்தின் கண்ணே
    அந்தந்த உறுப்புக் கள்தாம்
விந்தையாய்ப் பொருந்தி நின்ற
    வியப்பதும் என்னே நெஞ்சே


அன்றலர் ரோஜா வைப்போல்
    அண்ணலின் முகம்பொ லிந்த
இன்புறு காட்சி தன்னை
    இயம்புதல் எளிதோ? நெஞ்சே