பக்கம் எண் :

64

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

பாரினை வென்ற பண்புடைச் செம்மல்

மாநபியவர்கள் பிரியுதல்
 

பிரிந்தபின் அண்ணல் மீது
    பிறங்கிய ஒளியின் மாண்பு
விரித்ததைக் கேளாய் நெஞ்சே
    விந்தையில் விந்தை நெஞ்சே

முழுமைசேர் வாழ்வின் வெற்றி
    முத்திரை போன்றே அண்ணல்
அழகிய நகைபொ லிந்த
    அதிசயம் பாராய் நெஞ்சே


என்வழி ஒழுகு வார்க்கே
    இவ்வித இன்புண் டென்று
புன்னகை யாலே சொன்ன
    பொலிவதோ? சொல்வாய்! நெஞ்சே

செய்தி பரவியது

அமைதியின் வடிவம் அண்ணல்
    அமைதியைக் கொண்ட செய்தி
இமைப்பொழு துக்குள் ளேதான்
    எங்கும்சென் றதுவே நெஞ்சே

 

கூடினர் மக்கள் வெள்ளம்
    கொட்டினர் கண்ணீர் வெள்ளம்
ஓடினர் நபியைக் காண
    உலகேகூ டியதே நெஞ்சே


பரவிய செய்தி கேட்டே
    பதைத்திட்ட அபுபக் கர்தான்
விரைந்துமே வந்த தைத்தான்
    விளக்குவ தாமோ நெஞ்சே!


அண்ணலின் முகத்தைக் கண்டார்
    அதன்ஒளி அழகைக் கண்டார்
எண்ணிலா வியப்ப டைந்தே
    இயம்பிய தைக்கேள்! நெஞ்சே


அப்பொழு தும்தான் நீவிர்
    அழகொளி பரப்ப லானீர்
இப்பொழு தும்தான் உம்பால்
    இன்னொளி என்றார் நெஞ்சே

 

அடங்கொணா ஆசை யாலே
    அண்ணல்நெற் றியிலே முத்தம்
இடலானார் ஒளிமு கத்தை
    ‘இணையில்லை’ என்றார் நெஞ்சே


பார்த்தவர் எல்லாம் அண்ணல்
    பால்முக ஒளியைப் பார்த்து
ஈர்ப்புற்று நின்ற தைத்தான்
    இயம்பிடல் எளிதோ ? நெஞ்சே


புன்னகை மாண்பைக் கண்டே
    புளகமுற் றோர்கள் ஆங்கே
அன்பினுக் கன்பை ஈயும்
    அழகிதோ! என்றார் நெஞ்சே


இறையரு ளாலே வந்தே
    இணையிலா வெற்றி ஏந்தி
நிறைவுடன் செல்லு கின்ற
    நேர்த்தியோ! என்றார் நெஞ்சே

 

இறைவனைக் காணப் போகும்
    இன்பமோ! என்றார் சில்லோர்
நிறைவிதோ என்று பல்லோர்
    நின்றுரை செய்தார் நெஞ்சே


நறுமண நீரில் அண்ணல்
    நல்லுடல் தன்னை யாட்டி
வரும்திரள் மக்கள் காண
    வைத்திட லானார் நெஞ்சே


முதல்வரை அடக்கம் செய்யும்
    முன்னர்ஓர் தலைவ ரைநாம்
இதமுடன் தேர்வோம் என்றே
    எல்லோரும் சொன்னார் நெஞ்சே


முடிவதன் வண்ணம் மக்கள்
    முன்புதம் தலைவ ராகக்
குடிமகன் ஒருவ ரைத்தான்
    கொண்டதைக் கேளாய் நெஞ்சே

 

எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்
    ஏற்றமும் பண்பும் கொண்ட
வல்லவர் தம்மைத் தேர்ந்த
    வகையினைக் கேளாய் நெஞ்சே


அண்ணலின் உள்ளந் தன்னில்
    அலையோடி நின்ற தான
எண்ணம்போல் தேர்ந்தே ஆங்கே
    எடுத்ததைக் கேளாய் நெஞ்சே


உற்றநல் முடிவின் வண்ணம்
    உமரவர் எழுந்தே, மக்காள்!
நற்றிறி அபுபக் கர்தான்
    நமதுநற் றலைவர் என்றார்


முன்மொழிக் கேற்ப மக்கள்
    முகமலர்ந் தாரே நெஞ்சே!
இன்வழித் தேர்வு தன்னை
    எல்லோரும் ஏற்றார் நெஞ்சே


ஆயஇத் தேர்வுக் குப்பின்
    ஆயிஷா மனையில் அன்பே
ஆயநம் அண்ண லைத்தான்
    அடக்கம்செய் தாரே நெஞ்சே


பாரினை வென்ற தூய
    பண்புடைச் செம்ம லாரின்
சீரினைப் போற்றி வாழ்வில்
    திகழ்வோம்நாம் என்றார் நெஞ்சே


உலகெலாம் ஒளிப ரப்பி
    உயர்புகழ் தன்னைக் கொண்ட
நிலைபெற்ற அண்ணல் வாழ்க்கை
    நிலைபெற்ற தன்றோ? நெஞ்சே


நாயகம் ஏற்றி வைத்த
    நந்தா‘வி ளக்கில்’ நீயும்
தூயநல் ஒளியைப் பெற்றுத்
    துலங்கிடு வாயென்! நெஞ்சே


இறைதூதர் திருவாழ்வு
இனிதே முற்றுப் பெற்றது